Thursday, September 14, 2017

தனிநாயகம் அடிகளார் ( 2.8.1913 – 1.9.1980 )

         
தமிழ் தூது, தமிழ் தேனீ, தமிழ் தென்றல் என்றெல்லாம் புகழப்படும் அடிகளார் உவேசா ஏட்டில் இருந்து அச்சுக்குக் கொண்டு வந்த தமிழை உலக அரங்குக்கு எடுத்துச் சென்றார் என்றும்; பனம்பாரனார் கூறிய ’வடவேங்கட தென்குமரியாயிடை தமிழ் கூறு நல்லுலகை’ சர்வ தேசம் என விரித்து வைத்தார் என்றும்; சோழ மன்னர்கள் செல்லத் தவறிய இடங்களுக்கெல்லாம் சென்று தமிழ் மணம் பரப்பினார் என்றும்; மேலை நாட்டுக்கும் கீழை நாட்டுக்கும் இடையே பாலத்தை அமைத்த கலைஞர் என்றும் அறியப்படுகிறார்.

உலக அரங்கில் தமிழுக்கென ஒரு உன்னத இருக்கையை தனி ஒருவராக ஏற்படுத்திக் கொடுத்த தனிநாயகம் அடிகளார் ஓகஸ்ட் மாதம் 2ம் திகதி 13ம் ஆண்டு யாழ்ப்பாணத்து ஊர்காவற் துறையில் பிறந்தார். ஆங்கிலம், ஹிப்புரு, லத்தீன், இத்தாலியம், பிரெஞ், ஸ்பானிஷ், ஜேர்மன், போத்துக்கீஸ், ரஷ்ய, கிறீக், மலாய், சமஸ்கிருத, பாளி, சிங்களம் உட்பட 14க்கும் மேற்பட்ட மொழிகளில் சரளமாக பேசவும், படிக்கவும், எழுதவும், கேட்டு விளங்கவும் தெரிந்திருந்த அடிகளார் வத்திகான் பல்கலைக்கழகத்தில் இறையியலில் முனைவர் பட்டமும்; அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் இலக்கியத்தில் முதுகலை மானிப்பட்டமும் அத்தோடு முது இலக்கிய மானிப்பட்டமும் (M Lit) இலண்டன் பல்கலைக்கழகத்தில் கல்வியியலில் முனைவர் பட்டமும் பெற்றவராவார்.

 இந்திய வரலாறைப்பற்றி எழுதிய வரலாற்ராசிரியர்கள் சமஸ்கிருத, வட இந்திய வரலாற்றையே இந்திய வரலாறாகக் கொண்டிருந்த பார்வையை மாற்றி கங்கைக்கரையோடு நின்று விடாமல் காவேரிக்கரையில் இருந்து இந்திய வரலாறு எழுதப்பட வேண்டும் என்று முழக்கமிட்டதோடு உலகத்தின் 54 நாடுகள் வரை பயணம் செய்து அங்குள்ள பல்கலைக்கழகங்கள்,பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகளில் எல்லாம் தோன்றி தமிழ் மொழியின் பெருமையை; ஆழத்தை; அகலத்தை; ஒப்பற்ற அதன் வாழ்வியல் கருவூலங்களை உலகுக்குத் தெரியப்படுத்தினார்.

தமிழ் மொழி மூலமான ஆய்வுகள் ஆங்கிலத்திலும் நடத்தப்படுவதன் மூலம் உலகெங்கும் இருக்கற தமிழ் அறிஞர்களை ஒன்று திரட்டி உலகத்தரம் கொண்ட தமிழாராய்ச்சி மாநாடுகளை நடாத்தினார். முதலாவது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரிலும் 2ம் மாநாடு அறிஞர் அண்ணா தலைமையில் 1968ல் சென்னையிலும் நடந்தேறியது. அன்றிலிருந்து 2010இல் கோயம்புத்தூரில் நடந்த செம்மொழி மாநாடு வரை அடிகளாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றியே தமிழாய்வு முயற்சிகளும் மாநாடுகளும் நடைபெற்று வருகின்றன.

கத்தோலிக்கத் திருச்சபையின் துறவியாக இருந்து அவராற்றிய சமய சார்பற்ற ஆராய்ச்சிப் பணிகள் உலகத் தமிழாய்வின் தந்தை என அவரைப் போற்றியது. 1964ல் டெல்லியில் நடந்த கீழைப்புல அறிஞர்கள் மாநாட்டில் உலகெலாம் இருந்து வந்த பேராளர்களை ஒருங்கிணைத்து ’அனைத்துலக தமிழாராய்ச்சிக் கழகத்தை’உருவாக்கினார். தமிழ் மொழி பழைமையானது; சங்க இலக்கியம் ஏற்றமுடையது, பக்தி இலக்கியம் மனதை உருக்கும் இயல்புடையது, சிலப்பதிகாரம் உலக இலக்கியத்தோடு ஒப்பிடத் தகுந்தது என்றெல்லாம் முழங்கியதோடு மட்டுமல்லாது, ஆங்கிலம் வாணிபத்தின் மொழி என்றும்; கிரேக்கம் இசையின் மொழி என்றும்; பிரெஞ் தூதின் மொழி என்றும், லத்தீன் சட்டத்தின் மொழி என்றும்; ஜேர்மன் தத்துவத்தின் மொழி என்றும்; இத்தாலி காதலின் மொழி என்றும்; தமிழ் பக்தியின் மொழி என்றும் கூறினார். அதனைச் சொல்லும் தகுதியையும் ஆறறலையும் அவ் அவ் மொழிகளின் மீதான அவரது மொழியறிவு அவருக்கு வழங்கியது இங்கு நினைவு கூரற்பாலது.

சைவரும், வைனவரும், பெளத்தரும், சமணரும், முகமதியரும், கத்தோலிக்கரும், புரட்டஸ்தாந்தரும் இலக்கிய உரிமை பாராட்டக் கூடிய மொழி உரிமை தமிழுக்கே உண்டு என்றவர் அவர். அதனால் பரிபாடல், தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம், திருவாய்மொழி, திருப்புகழ்,  திருவருட்பா பனுவல்கள், பெரிய புரானம், கம்பராமாயணம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, சீறாப்புரானம், தேம்பாவணி, இரட்சணிய யாத்திரீகம் போன்ற காப்பியங்களுக்கு ஒப்பான காப்பியங்கள் வேறெந்த மொழியிலும் இல்லை என்று சொல்ல முடிந்தது. அவருக்கிருந்த பன்மொழிப் புலமை அதைச் சொல்லும் தகுதியை அவருக்கு ஈந்தது.

தமிழ் இலக்கியக் கழகம் எனற அமைப்பினை நிறுவி தமிழ் கல்ச்சர் என்ற ஆங்கில முத்திங்கள் ஆய்விதழ் ஒன்றையும் வெளியிட்டு வந்தார். அதன் மூலம் உலகத் தமிழ் அறிஞர்களை ஒன்றிணைத்தார். மேலைத்தேயப் பல்கலைக்கழகங்களுக்கும் சென்ற இவ் ஆய்விதழ் பல்கலைக்கழக மட்ட தமிழ் அறிஞர்களை ஒன்றிணைக்க உதவியது. உலகத் தமிழ் அறிஞர்களான சுவெலபில், பிளியோசற், அந்திரோனொவ், எமனு, குய்ப்பர், நோல்டென், மார், பொக்சர், பறோ ஆகியோர் இவ்விதழில் தொடர்ந்து தமது ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வந்தனர்.

தமிழ் மீதான புலமை காணமாகவும் சிறந்த தொடர்பாடல் திறன், மொழியறிவு, பேச்சு வன்மை, நற்குண இயல்பு பின்னணியில் விளங்க, தமிழர்களின் பண்பாட்டை இலக்கியங்களில் இருந்து வரையறை செய்தும்; இலக்கியம், இலக்கணம், சாசனம், தொல்பொருள், சமய மரபு, கோயில் பண்பாடுகளில் இருந்து தமிழர் தம் வரலாற்று மூலங்களை எடுத்து உலகம் முழுவதிலும் அச் சம காலத்தில் இருந்த ஏனைய நாட்டுக் கல்விமுறைமைகளோடும் வாழ்க்கைத் தத்துவங்களோடும் அவற்றை ஒப்பீடு செய்தும், சிறந்த ஆய்வுப் புலமையோடு அவர் வெளிக்கொணர்ந்த கருவூலங்கள் தமிழியலின் சிந்தனை மரபின் தனித்துவத்தை உலக அரங்குகில் செவ்வனே அதன் சிறப்பைப் பறை சாற்றின.

சங்க காலத்துப் பாணர்களிடம் இருந்து துவங்கும் தமிழர் தம் புலமைத்துவ மரபு நடைமுறை வாழ்வில் இருந்தே உலகியல் வாழ்வை கற்பிதம் செய்தன என்றும்; மனிதனைத் தாண்டிய சக்திகளைக் கட்டமைக்காத வழியில் உருவான கற்பித்தல் மரபை தமிழ் இலக்கியத்தில் இருந்து கண்டுபிடித்து மேற்கோள்காட்டி ‘தமிழ் பண்பை’ ஏனைய சமகால மேலைத்தேய கலாசாரங்களோடு ஒப்பிட்டு அதன் தனித்துவத்தை உலகறியச் செய்தார்.

திராவிட எண்ணத்தின் தலைசிறந்த கருவூலமாக சைவசித்தாந்தத்தைக் கண்ட இந்த கத்தோலிக்கத் துறவி ( தமிழ் நாட்டிலே எத்தனையோ மேதாவிகள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தாம் பிறந்த நாட்டுக்கும் மொழிக்கும் தம்மாலியன்றவாறு அரும் பெரும் தொண்டுகளைச் செய்திருக்கிறார்கள். தமிழ் மொழி மூலமாக உலகுக்கு தொண்டு செய்த பெரியார்களுள் வள்ளுவர், இளங்கோ, சைவ நாயன்மார்கள், வைணவ ஆழ்வார்கள், மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியார் முதலியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள்.  இப் பெரியார் யாவரும் தமது அரிய எண்ணக் கருத்துக்களை தமிழ் மொழி மூலம் உலகுக்களித்தனர். ஆனால் இவர்களைப் போன்ற கல்வியில் உயர்ந்த எத்தனையோ பல தமிழர்கள் தமிழ் நாட்டில் வழ்ந்தனர்.  அவர்களுள் ஆதி சங்கராச்சாரியார், இராமானுஜர் முதலியோர் முதன்மை வாய்ந்தவர்கள். அவர்கள் யாவரும் தமிழர். தமிழையே பேசினார்கள். எனினும் உயர்ந்த கருத்துக்கள் பொருந்திய நூல்களைத் தமிழில் எழுதாது வடமொழியில் எழுதி வைத்தனர். அதனால் வடமொழி செழிப்படைந்தது. ஆனால், அந் நூல்கள் தமிழில் எழுதப்பட்டிருந்தால் தமிழ் மொழி எத்துணை சிறப்படைந்திருக்கும்? “ என்று ஆதங்கப் பட்டிருக்கிறார் பேராசிரியர் .க. கணபதிப்பிள்ளை (ஈழத்து வாழ்வும் வளமும், 2001,குமரன் புத்தக இல்லம்.’யாழோசை’ பக் 23)

பாளி, வடமொழி சமூகங்களில் சமயம் சார்ந்து கல்வி அமைந்திருக்க, தமிழ் சமூகத்தில் சங்க காலத்து தொகை நூல்களில் செய்யுள்களை இயற்றியவர்கள் ஒரு குலத்தார் அல்லர்; ஒரு இடத்தார் அல்லர்; ஓர் இனத்தார் அல்லர்; அந்தணர் சிலர், அரசர் பலர், வணிகர் பலர், வேளாளர் பலர், இரவலரும் உளர், புரவலரும் உளர், ஆண்பாலரும் உளர், பெண் பாலரும் உளர், ஐந்திணைத்தலை மக்களும் உளர், நிலை மக்களும் உளர், வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டவர் உளர், வெவ்வேறு வாழ்க்கை நிலை கொண்டவர் உளர், கூடல் உறையூர் கருவூர் முதலான பேரூர்களில் பிறங்கியவர் உளர், அரிசில் ஆலங்குடி முதலாக வெள்ளூர் வேப்பத்தூர் ஈறாக சிற்றூர்களில் திகழ்ந்தவரும் உளர்.” என்பார். ( தமிழ்தூது பக் 32)

அதே நேரம் மன்னர், மருத்துவர், கணியர், பாணர், தச்சர், கொல்லர், குயவர் என பல நிலை மக்களும் புலவர்களாக விளங்கியதையும்; தொகை நூலில் காணப்படும் 459 புலவர்களில் 22 பெண்பாற் புலவர்களையும் சுட்டிக் காட்டும் இவர், பாணர்களுக்கும் புலவர்களுக்கும் இடையில் காணப்பட்ட வேறுபாடுகளையும் எடுத்துக் காட்டுகிறார்.

( பாணன் தன் குடும்பத்துடனும் குழுவோடும் கூட்டாகச் செல்வான். புலவர் தனியே செல்வார். பாணன் தன் குழுவுடன் ஆடுவான், பாடுவான், நடனம் புரிவான், மகிழ்வூட்டுவான் இசைக்கருவிகளுடன் செல்வான். புலவன் அறிவு புகட்டுவான், அதிகாரம் பெற்றவன் போன்று அறிவுரை வழங்குவான். கூடவே கல்வி அறிவு கவியாற்றும் திறனில் சிறந்து விளங்குவான். பாணன் சமூகத்தின் குரலாய் ஒலிப்பான். புலவன் தன் சொந்தப் பேரில் செல்வான். அவனுடய பெரும்பாலான கவிதைகள் தன் சொந்த அனுபவங்களாக இருக்கும். பாணர்கள் மக்களுக்கு மகிழ்ச்சியூட்டுபவர்களாக இருப்பார்கள். புலவர்கள் அரண்மனையில் காணப்படுவார்கள். தன்னொத்த சக புலவரோடும் அறிஞர்களோடும் புலவர்கள்  சகவாசம் இருக்கும். பாணன் புகழ்ந்து பாடுவதிலும் வீர உணர்ச்சிகளைத் தூண்டி எழுச்சி கொள்ளச் செய்யும் பாடல்களைப் பாடுவான். புலவர்கள் அரசரைப் புகழும் போதும் மனித ஒழுக்கத்தைச் சார்ந்த்தாக பொது நலம் சார்ந்த்தாக மனித ஒழுக்கம் சார்ந்ததாக அறநெறிக்குகந்ததையே பாடுவார்கள். பாணன் படைவீர்ர்களுக்கு உணர்ச்சியூட்ட போர்களத்தில் காணப்படுவான். புலவருக்கு போர்களத்தில் இடமில்லை. ஆனால் அமைதியின் தூதராக அரசனின் நண்பன் என்ற முறையில் தூது போவார்.  பாணன் என்ற சொல் இசை, நடனம், நாடகம், எனற பொருளைக் குறிக்கும் வேர்சொல்லில் இருந்து பிறந்தது. புலவர் என்ற சொல் பொது அறிவு, பகுத்தறிவு, கல்வி போன்ற பொருளைத்தருகிற வேர்சொல்லில் இருந்து பிறந்த்து. (நன்றி: தனிநாயகம் அடிகளார் அமுதன் அடிகள் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்)

பாணரிடம் இருந்து புலவரிடம் கைமாறிய திராவிடக் கல்வி காவிய காலத்தில் சமய ஆசிரியர்கள் வசமும் தத்துவ ஞானிகளிடமுமாக மாறுகிறது. எனினும் அவர்கள் தம்  மதம் சார்ந்த தத்துவங்களை / கொள்கைகளை தமிழ் மொழியின் மரபுகளில் இருந்து தவறாதவர்களாகவே வடித்தார்கள்.  மொழி மதத்தை உள்வாங்கி வளர அதுவே காரணமாயிற்று. சுருக்கமாகச் சொல்வதானால் தமிழ் என்ற பாத்திரத்திலேயே அவர்கள் தம் சமயக் கருத்துக்களையும் கொள்கைகளையும் வாழ்க்கை நெறிகளையும்  மக்களுக்கு அளித்தார்கள் எனலாம்.

தமிழரின் ’யாதும் ஊரே என்ற உலகளாவிய தத்துவம் இப்படித்தான் பின்நாளில்  பல்வேறு சமயம் சார்ந்த காவியங்களிலும் சமய அற நூல்களிலும்  காப்புச் செய்யுளில் ‘உலகெலாம்’ எனத் தொடங்கியது. அதனாலேயே தமிழ் பக்தியின் மொழியாகப் பரினமித்தது. அதற்கு
அப்பன் நீ அம்மை நீ... என்ற தேவார பாணியில் வீரமாமுனிவர் இயற்றிய

“அறக்கடல் நீயே அருட்கடல் நீயே
அருங்கருணாகரன் நீயே
திறக்கடல் நீயே திருக்கடல் நீயே
திருந்துளம் ஒளிபட ஞான
திறக்கடல் நீயே நிகர் கடந் துலகில்
நிலையும் நீ; உயிரும் நீ; நிலை நான்
பெறக்கடல் நீயே; தாயும் நீ எனக்கு
பிதாவும் நீ; அனைத்தும் நீயன்றோ” (படலம் 6: 34)

 என்பதை அடிகளார் எடுத்துக் காட்டுகிறார்.

சான்றோருக்கு தமிழ் சமூகத்தில் இருந்த இடத்தை பறைசாற்றும் பாடல்கள் பல உள.’சான்றோர் பலர் யான் வாழும் ஊரே’ என்று தன் இளமைக்கு காரணம் சான்றோர்கள் வாழும் ஊரில் தான் இருப்பதை காரணம் காட்டும் சமான்யனையும் ‘சான்றோனாக்குதல் தந்தைக்கு கடன்’ என்று குடும்பத்தில் அவரவர் கடனை சொன்னதிலும், ’அமிழ்தம் இயைவைதாயினும் இனிதென தமியர் உண்டலும் இலரே’ என்றும் புகழெனில் உயிரும் கொடுக்குவர் பழியெனில் உலகுடன் பெறினும் கொள்ளலர்’ என்றும் ’தமக்கென முயலா நோன்றாட் பிறர்க்கென முயலும்  உண்மையானே’ என்றும்  (அகம் 55, புறம் 182, புறம் 69) தொல்காப்பியரின்

‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்ரை நிலை முனியாது கற்றல் நன்றே
பிறப்போரன்ன உடன் வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
ஒருகுடிப்பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக எண்ணாது, அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
என்றும் வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்பால் ஒருவன் கற்பின் மேற்பால்
ஒருவனும் அவன் கண்படுமே” (புறம்)

கூறும் திராவிட சான்றோர் கொள்கை அவர் எடுத்துக் காட்டி இன்புற்று பெருமைப்படும் இடங்கள்.

ரோம சம்ராஜ்யத்தின் ஸ்ரொயிக் வாதிகளின்

“எல்லா மக்களின் நாடுகளும் என் தாய் நாடு - என்றைக்கும்
என் நாடு எல்லா மக்களுக்கும் தாய் நாடு”

 என்பதோடும் ( செனிக்கா)

மார்க்கஸ் ஓளரோலியஸ் என்ற ரோமப் பேர்ரசர்

‘நான் பகுத்தறிவும் சூட்டுறவும் உடையவன்.
நான் அண்டோலைனஸ் என்பதால் உரோமுக்குரியவன்.
 நான் மனிதன் என்பதால் உலகுக்குரியவன்”

 என்றும் சொன்னதோடு  ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் எனற தமிழ் திராவிட கொள்கையை ஒப்பிட்டு அவரவர் மொழியில் அதனை மொழிபெயர்த்துச் சொல்லி தமிழ் திராவிட பண்பாட்டை ஒப்பிட்டு உலகுக்குக் காட்டியவர் தனிநாயகம் அடிகள்.

அதே நேரம், இவ்வாறான ஒற்றுமைகள் இருந்த போதும் ஸ்டொயிக் வாதிகள் இலட்சிய மனிதர்கள் ஒருசிலர் என்றும்; அவர்கள் தத்தம் இல்லங்களில் தனிமையில் வாழ்ந்து வருவர் என்றும்; சொல்ல, சங்க  காலத்து மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சான்றோனாகுதல் கூடும் என்பது வலியுறுத்தப்படுவதையும்; எபிக்யூரஸ் வாதம் செல்வம் ஈட்டுதலையும் சிறின்பத்தையும் வலியுறுத்த, வள்ளுவன் களவியலையும் சிற்றின்பத்தையும் போற்றும் அதே நேரம், தமெக்கென வாழா பிறர்கென வாழும் தன்மையை வலியுறுத்துவதையும் ஒப்பிட்டு எடுத்துக் காட்டியும்; ’யாம் இரப்பவை பொன்னும் பொருளும் போகமும் அல்ல; நின் பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும்” ( பரிபாடல் ரு;எக, அ ஒ) என்று சொல்லும் பிறர்கென வாழும் தன்மையையும் எடுத்துக் காட்டுகிறார். ரோமர்கள் தம்மவர் பெருமையை எழுத, வள்ளுவரோ உலகு தழுவி தமிழ், தமிழ் நாடு என்ற சொற்பதங்களை உபயோகிக்காமலும்  உச்சரிக்காமலும் எழுதியதையும் எடுத்துக் காட்டி தமிழ் பண்பாட்டை உலக நாடுகளுக்குஎடுத்துச் சென்றார்.

தமிழருடய நீதி நூல் தொகுதிகளும், நீதிக் கருத்துக்களும்,  உலகெங்கும் சென்றன. தமிழ் நாட்டு மலைகளில் விளையும் மிளகும், தமிழ் நாட்டுக் கடலில் விளையும் முத்தும், பவளமும் உலகம் விரும்பியது. தமிழ் நாட்டுக் காடுகள் யானைக் கொம்பும் தேக்கு மரமும் வழங்கின.  தமிழ் நாட்டு வயல்கள் நெல்லும் கரும்பும் உதவின. தமிழ் நாட்டு கனிய வளங்கள் வெள்ளியும் பொன்னும் மணிகளும் நல்கின.பெற்றமும் எருமையும் யாடும் தகரும் கரியும் பரியும் மான் முதலாய வனவிலங்குகள் எண்ணிறைந்தவையும் ஈந்த வனங்கள் எண்ணில. ஆதலால் தமிழன் திசைகள் எங்கும் சென்று தமிழ் நாட்டின் பெருமையை நிலை நாட்டினான்.சிரியா, மொசப்பத்தேமியா, எகிப்து, பாலஸ்தீன்,இத்தாலி, கிறீஸ், சீனம், கடாரம், சாவகம் முதலிய நாடுகள் தமிழ் நாட்டுப் பொருட்களைப் பெற்றுத் தளைத்தோங்கின.( தமிழ் தூது; சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு, பக்; 85) ( கூடவே சாகுந்தலத்தில் காளிதாசர் 4வது காட்சியில் சகுந்தலை தன்னைத்  தந்தையிடம் இருந்து பிரிக்கும் செயலானது மலையாள மலைத்தொடரில் சந்தன மரத்தில் படர்ந்துள்ள கொடியை அம்மரத்தில் இருந்து பிரிக்கும் செயல் போன்றது எனக் கூறல் காண்க. ( தமிழ் தூது பக். 51) சந்தன மரங்கள் செறிந்துள்ள மலையாள மலைத் தொடர்கள்....

 இயற்கையோடு வாழ்ந்த அவர் தம் வாழ்வையும் அவ் இயற்கையை பாடல்களில் புகுத்திய ஆற்றையும், வேப்பம் பூ இறால் மீன்களின் கண்களைப் போல இருக்கிறதென்றும்; கலைமானின் கொம்பு இரும்பு திரிந்தன்ன மாயிரு மருப்பு என்றும்;பாடினியின் சிவந்த மெல்லிய உள்ளங்கால் வேட்கையால் இளைப்புற்ற நாயினுடய நாக்கினை ஒத்திருக்கிறதென்றும்; நெல்லிக்கனி முயலின் கண்களுக்கும்; நாரையின் மூக்கு பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன கூர் வாய் என்றும்; மாலைப்பொழுது இயற்கை மகள் ஏற்றும் விளக்கு போல என்றும்; காந்தள் மலர் இதழ் குவிந்திருப்பது இறைவழிபாடு செய்யும் இனிய மகளிரின் குவிந்த கைபோல கவின் செய்கிறதென்றும்; சொல்லும் ஆற்றை; இயற்கையை நேசித்த மக்கள் தம் கவிப்பண்பை  உலகெங்கும் கொண்டு சென்று அறிமுகப்படுத்தினார்.

அவர் தம் வாழ்விடங்கள் பற்றிக் கூறும் போது இறையனார் அகப்பொருள் ஒரு இல்லத்தை இப்படி கூறுகறது என்பதை தன் தமிழ் தூது என்ற நூலில் ’தமிழரும் அவர் தம் கவின் கலைகளும்’ என்ற பகுதியில் இவ்வாறு குறிக்கிறார்.

’அவை அட்டில் ( சமையல் அறை) கொட்டகாரம் (நெல் முதலிய பண்டம் வைக்கும் அறை) பண்டக சாலை ( அணிகலன் முதலியன வைக்கும் மனையகத்துறுப்பு) கூடகாரம்( மேல் மாடம்) பள்ளியம்பலம் ( துயிலிடம்) உரிமையிடம் (அந்தப்புரம்) கூத்தப்பள்ளி ( அரண்மனை சார்ந்த நாடக அரங்கு) எனும் மனையகங்களும் செய்குன்றும் இளமரக்காவும் பூப்பந்தரும் விளையாடுமிடமும் எனும் இல் வரையகங்களுமாம்’

உலக மனப்பாண்மை, விருந்தோம்பல், பிறர்மீதான அன்பு, ஈகை, தனக்கென வாழா பிறர்கென வாழும் தன்மை, மானம் என்றால் உயிரையும் கொடுக்கும் மாண்பு, மனத்தூய்மை, விடாது முயலல், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்னும் மனப்பாண்மை, பொறை, தயை, நல்லொழுக்கம், சகிப்புத் தன்மை, உலகப்பொதுமை போன்றன அவர் கண்டு கொண்டு உலகுக்கு கொண்டு சென்ற மேலும் சிலவான  தமிழின் பண்புநலம்.

சுமார் 54 நாடுகளுக்கு மேல் பயணம் செய்து அவ் அவ் நாடுகளில் மறைந்து கிடந்த தமிழ் பண்பாட்டை கண்டு பிடித்த 20ம் நூற்றாண்டு தமிழ் கொலம்பஸ் எனப் போற்றப்படும் இவர் தமிழின் அருமை பெருமைகளை உலகெங்கும் சொன்னதோடு தமிழ் உலகெங்கனும் பரந்து சிறந்த இடங்களில் இருந்து தமிழ் கருவூலங்களை தமிழ் கூறு நல்லுலகம் அறியச் செய்த பெருமையும் அவரையே சாரும்.

அச்சுவாகனம் ஏறிய உலக மொழிகளுள் பலவற்றுள்ளும் முதல் அச்சுவாகனம் ஏறிய சிறப்பு தமிழுக்கே உண்டு என்பதோடமையாது  1578ல் அச்சான தம்பிரான் வனக்கம் ஹெவார்ட் பல்கலைக்கழகத்தில் இருப்பதையும் 1579ல் வெளியான கொச்சி அம்பலக்காட்டில் வெளியிடப்பட்ட கிரிசித்தியானி வணக்கம் பிரான்ஸ் நூலகத்தில் இருப்பதையும் 1586ல் புன்னைக்காயலில் பதிப்பிக்கப்பட்ட அடியார் வரலாறு வத்திகான் நூலகத்தில் இருப்பதையும் கண்டுபிடித்து தமிழ் உலகுக்கு அறிவித்ததோடு தாய்லாந்து நாட்டில் அரச முடிசூட்டு வைபவத்தில் திருவெம்பாவைப் பாடல்கள் பாடப்படுவதையும் சுமாத்திராவில் உள்ள காரோபட்டக்கு இனத்தவரிடம் சேர சோழ பாண்டிய மன்னர்கள் பெயர் வழக்கில் இருந்து வருவதையும் கூடவே தென்கிழக்காசியாவில் ஏற்பட்டிருந்த கலைப் பண்பாட்டு பரவல்களையும் தமிழுக்கு தெரியப்படுத்தியவராக அவர் இருந்தார்.

யப்பான் நாட்டில் 1590லும் பிலிப்பைன்ஸ் நாட்டில் 1593லும் ஸ்பானிஸ் மொழியிலான் அச்சுக்கலை 1584லும் ஆபிரிக்க மொழியில் 1624லும் ரஷ்யா நாட்டில் 1563லும் கிரேக்க நாட்டில் 1821லும் முதல் அச்சுப் பதிப்புத் தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய மொழிகளில் தமிழ் பற்றி வெளிவந்த நூல்களைப்பற்றிய குறிப்புகளை எல்லாம் தொகுத்து அவர்  மலாய் பல்கலைக்கழகத்தில் இந்தியத் துறையின் பீடாதிபதியாகவும் தமிழ்த் துறையின் தலைவராகவும் தமிழ் பேராசிரியாராகவும் பணியாற்றி இருந்த காலத்தில் மலேய பல்கலைக் கழக வெளியீடாக 122 பக்கங்களில் 1355 வெளிவந்த நூல் தமிழிய ஆய்வாளர்களுக்கான பொக்கிஷம் ஆகும்.

தமிழ் ஆய்வில் ஈடுபடுவோருக்கு பயந்தரவல்ல இந் நூலில் இலத்தீன், ஆங்கிலம், பிரெஞ், சுவீடன், ஹொலண்ட், ரஷ்யா, செக் குடியரசு, மலாய், வடமொழி, ஸ்லோவாக், இத்தாலியம், சுவிடீஸ்போத்துக்கீஸ்  மொழிகளில் இடம்பெற்ருள்ள தமிழ் இலக்கியம், மானுடவியல், தொன்மையியல், கலை, கல்வெட்டு இயல், சமூக வரலாறு, பண்பாடு, நாகரிகம், இலக்கியவரலாறு, திறனாய்வு, அகராதி, இலக்கணம், மொழியியல், ஒப்பியல், சமயமும் தத்துவமும், பயண நூல்கள், ஆய்வு நூல்கள் யாவும் உள்ளடக்கப் பட்டிருக்கின்றன.

தனது மொழி, நாடு ,இனம் என்ற தளத்தில் வலுவோடு இயங்கிய அடிகளார் இலங்கையில் தமிழ் 2ம் இடத்திற்குத் தள்ளப்பட்டதை வெகுவாக எதிர்த்தார்.

அரசியலில் ஈடுபாடு எதுவும் கொண்டிராத இத்துறவி மக்கள் நலனிலும் மனித நேயத்திலும் தீராத பற்றுக் கொண்டிருந்தவர். ’பெரிதே உலகம்; பேணுனர் பலரே’ என்பதும்; ‘எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே’ என்றும்;’ யாதும் ஊர்ரே யாவரும் கேளிர்’ எனற கொள்கையையும் கொண்டவர். அவர் உலகின் குடிமகனாக இருந்தவர்.

பெல்ஜியம் பிரெஞ், பிளமிங் ஆகிய இரு மொழிகளைப் பேசும் இனத்தாருக்கு ஒத்த உரிமை வழங்கி இருப்பதையும்; கனடா ஆங்கிலம், பிரெஞ் மொழிகளுக்கு சம உரிமை கொடுத்திருப்பதையும்; சுவிற்சிலாந்து பிரெஞ், ஜேர்மன், இத்தாலியம், ரோமன் மொழிகளை பேசும் 4 இனத்தவருக்கும் ஒத்த உரிமை வழங்கியதையும்; பின்லாந்து நாட்டு மக்கள் தொகையில் ஸ்வீடிஷ் மொழி பேசுவோர் 9%மேயானாலும் அம் மொழி தேசிய மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் விளங்குவதையும்; 1க்கு மேற்பட்ட மொழிகளைக் கொண்டுள்ள 30 மேற்பட்ட நாடுகள் அனைத்திலும் அந் நாடுகள் சகல மொழிகளுக்கும் ஒத்த உரிமைகளை வழங்கியிருக்க, இலங்கை மட்டும் இவ் உலகளாவிய சிந்தனையில் தனித்து நிற்க முனைவது ஏன் என்று கேட்கிறார் அடிகளார். இவற்றை எல்லாம்  சுட்டிக் காட்டி இரு மொழி இனத்தவரைக் கொண்ட இலங்கையிலும் அத்தகைய ஒருமைப்பாட்டுணர்வு வளர்த்தெடுக்கப் பட வேண்டும் என்றார்.

இரு மொழிகளும் இலக்கணம், இடப்பெயர்கள், நாடகம், கட்டிடம், கலை, சிற்பம் முதலாய துறைகளில் பரஸ்பர பண்பாட்டுச் செல்வாக்கை கொண்டிருப்பதையும்; சட்டம், சாதியமைப்பு, சமுதாயக் கூறுகளிலும் உள்ள பொதுமைப்பண்பைச் சுட்டிக் காட்டினார். இலங்கையின் தென்பகுதியில் அமைந்துளள கதிர்காமம் இந்து, இஸ்லாம், மெளத்த மக்களின் புனித ஸ்தலமாய் காணப்படுதலையும்;  இலங்கையின் வடகோடியில் உள்ள நைனாதீவு பெளத்த, இந்து சமயத்தவரால் புனிதமாகப் போற்றப்படுவதையும் ஒப்பிட்டு, ஒரு சமயத்தைச் சார்ந்த மன்னன் மற்றய சமயம் சார்ந்த மக்களுக்கு ஆதரவு வழங்கிய சான்றுகளை சிங்கள அரசவையில் பிராமணர் பணிக்கமர்த்தப் பட்டதையும்; சிங்கள மன்னர்கள் தமிழ் இளவரசிகளை மணந்து கொண்டதையும் காட்டுகிறார். பெளத்த பள்ளிக் கூடங்களில் சிங்களம்,பாளி, வடமொழி, தமிழ் ஆகியன கற்பிக்கப்பட்டன. வீர சோழியம் என்ற தமிழ் இலக்கணத்தின் தாக்கம் ‘சிதத் சங்கரவ’ என்ற சிங்கள இலக்கண நூலில் அமைந்திருப்பதைச் சுட்டிக் காட்டினார். இலங்கையில் பல தமிழர்கள் பெளத்தர்களாகவும் இருந்தனர். தமிழ் காப்பியமான மணிமேகலை தேராவாத பெளத்த சமய காப்பியம் என்று பெருமையோடு குறிப்பிட்டார்.

24 மணி நேரத்தில் சிங்களம் நாட்டின் அரச கரும மொழியாக ஆக்கப்படும் என்று பண்டார நாயக்காவும் அதற்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியும் ஆதரவு தெரிவித்த போது ‘சிங்களமும் தமிழும் அரச கரும மொழியாக இருப்பதில் சிங்கள் மொழிக்கு எது வித இடையூறும் நேராது என்றும் சிங்களம் அரச கரும மொழியாக இருந்தாலும், தமிழையும் சிங்களத்தின் நிலை பாதிக்காமல் பயன் படுத்தலாம் என்றும் ‘தமிழ் மொழி உரிமைகள்’ என்னும் தலைப்பில் ஆங்கில நூலை வெளியிட்டு உலகுக்கு உண்மை நிலையைத் தெரியப்படுத்தியதுடன் பண்டார நாயக்காவையும் சந்தித்து உரையாடினார்.

அது ஏற்றுக் கொள்ளப்படாமையால் காலிமுகத்திடலில் நடந்த சத்தியாக்கிரகத்தில் அடிகளார் கலந்து கொண்டார் என்றும்; அதற்கு அப்போது பொலிஷ் அதிகாரியாகக் கடமையாற்றிய சிட்னி டீ சொய்சா என்ற பொலிஸ் அதிகாரி இவருக்குக் கண்காணிப்பாக இருந்து பாதுகாப்பை வழங்கி இருந்தார் என்றும் ஒரு வரலாற்றுச் செய்தி சொல்கிறது. (ஆசிரியம் 2011 ‘பண்பாட்டுப் பேரொளி தனிநாயகம்’)

 இவைகள் எல்லாவற்றையும் விளக்கி அரசு அலுவலர்கள் இரு மொழியையும் கற்றிருந்தால் இலங்கையில் எப்பகுதியிலும் எவரோடும் பணி புரியலாம் என்றும்; அப்போதய பிரதமராக விளங்கிய எஸ். டபிள்யூ. ஆர். டீ பண்டாரநாயக்காவுக்கு நேரில் சந்தித்து விளக்கினார் என்றும்; ஆனால் பண்டார நாயக்கா அதனை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கவில்லை என்றும் அவர் அதில் குறிப்பிடுகிறார். (Fathaer I will rather decide it on the point of sword’ – A.J. Willson, The Dedicated Patriotism of Father Thani Nayagam; Tamilaram P84) தமிழ் மொழி இலங்கையில் தன் அந்தஸ்தை இழந்து விடப்போகிறது என்று கவலைப்பட்ட அடிகள் தமிழ் பெளத்தத்துக்கு எதிரானதல்ல என்றும்; தமிழர்கள் சிங்களவர்களுக்கு எதிரானவர்கள் அல்லர் என்றும் உரைத்தார்.

 காலி முகத்திடலில் நடந்த சத்தியாக்கிரகத்திலும் அவர் பங்கு பற்றினார். அடிகளாரின் இறுதி இரங்கல் கூட்டத்தில்  (3.9.1980 யாழ் பேராய திரந்த வெளி அரங்கு) இரங்கல் கூட்டத்தில் அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த திரு அ. அமிர்தலிங்கம் அவர்கள் உரையாற்றுகையில் ‘நாமெல்லாம் சத்தியாக்கிரகம் செய்துகொண்டிருந்த போது 1000 கணக்கான காடையர்கள் கல்மாரி பொழிந்து கொண்டிருந்த வேளையிலே அந்தத் தாக்குதலுக்கூடாக ஒரு உருவம் துறவி உடையிலே எங்களை நோக்கி வந்துகொண்டிருந்த்து. எங்கள் மனம் 1 நிமிடம் பெருமிதப்பட்டது. இத்தனை துன்பங்களுக்கு மத்தியிலும் இந்தச் சத்தியாக்கிரகத்தை நடத்துபவர்களோடு சேரப்போகிறேன் என்று வரக்கூடிய உளம் படைத்தவராக தைரியத்தோடு வந்த தனிநாயகம் அடிகளாரை நாம் என்றும் மறக்க இயலாது’ என்று குறிப்பிட்டார்.


மொழிக்காகவும் இனத்துக்காகவும் உழைத்த இந்தக் கத்தோலிக்கத் துறவி தன் 67வது வயதில் காலமான போது அறிஞர் அண்ணா’ உங்கள் சமயம் எது என்று கேட்டால் கிறீஸ்தவம் என்பார்; உங்கள் ஊர் எது என்று கேட்டால் யாழ்ப்பாணம் என்பார்; உங்கள் மொழி எது என்று கேட்டால் தமிழ் என்பார் அந்த தமிழ் உணர்வு எல்லோருக்கும் வர வேண்டும் என்று சொன்னார். ஐரோப்பியர்கள் “ A short dark man with a polish of a diplomat and the accent of an Oxford scholar என்றார்கள்.



தனி நாயகமாக நின்று மொழிக்கும் இனத்துக்கும் அவற்றுற்கான உரிமைக்கும் குரல் கொடுத்த தனி நாயகம் இந்தத் தனிநாயகம்.

http://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Search?search=%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&go=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D

http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3ASearch&profile=default&search=%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&fulltext=Search

அவருடய மூல நூல்களில் ஒன்றே உலகம், தமிழ் தூது என்பனவும் மேலும்  இதழ்களில் வெளியாகிய மேலும் சில கட்டுரைகளும் மேல்வரும் நூலக இணையத் தள இணைப்பில் இலவசமாகத் தரவிறக்கிப் பெற முடிகிறது...

அவரால் பாவிக்கப் பட்ட நூல்களும் அவருடய நூல்கள் பலவும் கொழும்புத்துறை சவேரியர் குருத்துவக் கல்லூரியில் ‘ தனிநாயகம் Collections’ ஆக பாதுக்கப்பட்டதையும் அறிய முடிகிறது.  இன்றும் அவை இருக்கிறதா என்பது குறித்து அறிய முடியவில்லை.

நன்றி; இணைய நூலக இணையத்தளம் மற்றும் சிட்னி தமிழ் அறிவகம்.
1.தனிநாயகம் அடிகளார் - அமுதன் அடிகள் 1993
2.தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும் - டாக்டர். வே. அந்தனிஜான் அழகரசன்.1984.

மேலதிக நன்றி எஸ்பிஎஸ் வானொலி.

http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/audiotrack/thamil-thadam-thani-nayagam?language=ta



அதிலும் குறிப்பாக இவ்வாறான ஓராழுமையை அறியவும் சொல்லவும் வைத்த இவ் வானொலி நிர்வாக இயக்குனர் றைசெல் என அழைக்கப் பெறும் றேமண்ட் செல்வராஜ் இற்கு என் மனமார்ந்த நன்றி....