Saturday, August 13, 2016

Food for the day



படம்; நன்றி 
http://sayuriito.deviantart.com/art/Paint-Me-371254451


அண்மையில் பார்த்தவற்றுக்குள்ளும் படித்தவற்றுக்குள்ளும் மிகவும் பிடித்துக் கொண்டதாக இருந்தது ஜேகேயின் ச்சீ போ என்ற கவிதை.
( http://www.padalay.com/2016/08/blog-post.html )

இன்றய சமூக வலைத்தளங்களும் ஊடகங்களும் மனித மனங்களில் ஏற்படுத்தும் விசித்திரங்களை இக்கவிதை மிகச் சிறப்பாக வெளியே கொண்டு வருகிறது.


 ச்சீ போ - ஜேகே.
http://www.padalay.com/2016/08/blog-post.html

ஏன் என் அடிவயிற்றை
எப்போதுமே பிறாண்டிக்கொண்டிருக்கிறீர்கள்?
தூக்கு விறகின் அடியிலே நாய் பள்ளம் தோண்டுவதுபோல
ஏன் எப்போதும்  என்னையே கிளறிக்கொண்டிருக்கிறீர்கள்?
நான், என் மனம், என் விசித்திரங்கள் என்று
என்னோடு நான் பேசும் பொழுதுகளில் மட்டும்
எதற்காக ஒலிபெருக்கிகள் பூட்டிக் கடவுளைத் தேடுகிறீர்கள்?
நான் கூரையைப்பிரித்துவைத்து
வானில் நட்சத்திரங்களை எண்ணுகையில்
எதற்காக உள்ளே எட்டிப் பூராயம் பார்க்கிறீர்கள்?
தண்ணீர்த் தொட்டியை ஏன்  உங்களது ஆவுரஞ்சிக்கல் ஆக்குகிறீர்கள்?
கிளியோபற்றாவின் ஊசிகளோடு எதற்காக என்னையே சுற்றிச் சுற்றி நீங்கள் அலையவேண்டும்?
ஈக்களைத் துரத்தக்கூட எதற்காக வாளைச் சுழற்றவேண்டும்?
எப்பொழுதுமே யாரையேனும் நிராகரித்துக்கொண்டேஇருக்கிறீர்களே, ஏன்?
நான் என்று நினைத்து எதற்காக யாரோ ஒருவரைத் திட்டுகிறீர்கள்?
நிற்க.
எனக்கெங்கே மதி போனது?
நான் ஏன் இங்கேயே இன்னமும் சுற்றிக்கொண்டிருக்கிறேன்?
உலகம் முழுதும் எனக்காகத் திறந்து கிடக்கையில்
ஒரு கண்ணாடிக்குவளைக்குள் நான் ஏன் முடங்கிக்கிடக்கவேண்டும்?
உங்களுக்கும் எனக்கும் அப்படி என்னதான் உறவு?
என் மரண வீட்டுக்குக்கூட நீங்கள் வரப்போவதில்லை.
சொட்டுக்கண்ணீர் விடப்போவதில்லை.
கல்வெட்டைக்கூடத் திறக்கப்போவதில்லை.
என் மகிழ்ச்சி, என் துக்கம், என் உறவு, என் பகை
எதுவுமே உங்களை உறுத்தப்போவதில்லை.
நான் ஏன் உங்களையே நினைத்து அழுங்க வேண்டும்?
உங்களோடே சுற்றி அலையவேண்டும்?
யார் நீங்கள் எனக்கு?
உங்களைவிட்டு ஓடித்தப்பி
ஒலிபெருக்கிகளின் வீச்செல்லைக்கு அப்பால்
கிளியோப்பற்றாவின் பொறாமைக்கு வெளியே
நாய்கள் தாண்டாத ஆற்றுக்கு அப்பால்
பாரிய நீர்நிலைக்கு அருகில் ஒரு தண்ணீர்த்தொட்டியாய்
நான் மாறிவிட மாட்டேனா?
யாருமே எட்டமுடியாத
கூரையே முற்றுமில்லாத
அடர்ந்த காட்டுக்குள்
ஒளிந்துகொள்ளக்கூடாதா?
மழை காட்டில் பெய்தாற் போதாதா?
இங்கு கிடந்து மாரடிக்க என்ன வினை எனக்கு?
உங்களோடு எதற்கு முட்டிமோதிக்கொண்டிருக்கிறேன்?
காதலியின் கடைக்கண் பார்வைக்காய் ஏங்கும் நிலை எதற்கு?
உங்களைப்பார்த்து எதற்காகப் பொறாமை கொள்கிறேன்?
ஒரு கவிதை, ஒரு கதை, ஒரு நிலைத்தகவல்,
ஒரு புகைப்படம், ஒரு காணொலி
ஒரு திருமணம், ஒரு மரணம், ஒரு பிறந்தநாள்,
கிடைத்த விருப்பு, கிடைக்காத விருப்பு
கிடைத்த கருத்து, கிடைக்காத கருத்து
கிடைத்த வாழ்த்து, கிடைக்காத வாழ்த்து
ஒரு நட்பு விண்ணப்பம், ஒரு நட்புத் தடை
மற்றவரின் நட்பு, மற்றவரின் விருப்பு
அறியாதவரின் நட்பு, அறியாதவரின் விருப்பு
எல்லாமே
எதற்காக எனக்குப் பதட்டத்தைக் கொடுக்கவேண்டும்?
எனக்குப்பிடிக்காதவர்களுக்கு கிடைக்கும் இகழ்ச்சி
எதற்காக என்னை மகிழ்விக்கவேண்டும்?
என்னோடு இருப்பவரின் உயர்வு
எப்படி என்னை அசூயைப்படுத்துகிறது?
அத்தனைபேரும் இழுக்கும் வடத்தை
எப்போது என் கையும் பற்றிக்கொண்டது?
எல்லாக் கண்களும் என்னையே பார்க்கின்றன
என்று எப்போது எண்ண ஆரம்பித்தேன்?
எல்லாக் கண்களும் என்னையே பார்க்கவேண்டும்
என்று எப்போது எண்ண ஆரம்பித்தேன்?
என்னை அழகனாக்க எத்தனைபேரை
அரியண்டப்படுத்தவேண்டியிருக்கிறது?
என்னை அறிஞன் ஆக்க எத்தனை பேரை
முட்டாளாக்கவேண்டியிருக்கிறது?
என்னை இலக்கியவாதியாக்க எத்தனைபேரை
நிராகரிக்கவேண்டியிருக்கிறது?
நான் மட்டும் தனித்திருக்க எத்தனைபேரை
கொலைசெய்யவேண்டியிருக்கிறது?
என்னுள் உறைந்திருந்த அரக்கனுக்கு
எப்படி நீங்கள் உயிர் கொடுத்தீர்கள்?
ஒரு சாகசக்காரனுக்குரிய இச்சையை
என்னுள் ஏன் தூண்டிவிட்டீர்கள்?
இத்தனைக்குப் பிறகும்
இவ்வளவு அகோரத்துக்குப் பின்னரும்
இமயமளவு விசனத்துக்குப் பிறகும்
ஏன் என் வால் என் சொல் கேளாமல்
சுழன்றுகொண்டே கிடக்கிறது?
ச்சி போ.

சர்ச்சை சேறும் தகவல் குப்பைகளும் அதற்குள் புரண்டெழும் மனங்களுமாக கும்பலோடு கோவிந்தாவாக எதையோ நோக்கி இலக்கில்லாமல் ஓடும் தகவல் தொழில் நுட்பக் கடலுக்குள் நாம் எல்லோரும் அள்ளுண்டு செல்வதை சிறப்பாகச் சொல்லும் இக்கவிதை உங்களுக்குள்ளும் சில கேள்விகளை எழுப்பிச் செல்லலாம்.

ஒரு கிண்ணம் நிறைய இருக்கின்ற பதமாக வறுத்த முந்திரிப் பருப்புக்குள் நமக்குத் தேவையான ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு நிறுத்தி விட உங்களால் முடியுமென்றால் தகவல் தொழில் நுட்பத்துக்குள் நீந்த நமக்கு தகுதி வந்து விட்டது எனக் கொள்ளலாம்.

நாம் திரும்பவேண்டும்.

உலகைப் பற்றி அறிந்து கொள்ளுதல் என்பதில் இருந்து திரும்பி என்னை; என் உணர்வுகளை அறிந்து கொள்ளுதல் என்பது பற்றிய பாதைக்கு வர வேண்டும்.

என் உணர்வுகளைப் பற்றி உணர்ந்து கொள்ளுதல் / பின்னர் அந்த உணர்வுகளைக் கையாளும் அறிவு ....

இன்றைக்குப் பெரிதும் வேண்டப்படுவது இது தான். இப்போதைக்கு இது போதும்.

அது வரை எதையும் தேவைப்படும் போது மாத்திரம் தெரிந்து கொண்டால் போதும். எதற்கு எல்லாவற்றையும் நாம் தெரிந்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்?

மெய் ஞானமாகி எப்போது  மெய் சுடர் மிளிரப் போகிறது?

Tuesday, August 2, 2016

பண்பாட்டில் அரும்பும் புதிய துளிர்கள்...




அண்மையில் பாரதியாரின் பாடலை வாகனத்தில் கேட்டுக் கொண்டு போனேன்.
“ .......
வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி சிவ சக்தி
நிலச் சுமை என வாழ்ந்திடப் புரிகுவையோ?
விசையுறு பந்தினைப் போல் உள்ளம்
வேண்டிய படி செல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன்
நித்தம் நவமென சுடர் தரும் உயிர் கேட்டேன்
தசையினைத் தீ சுடினும்
சிவ சக்தியைப் பாடும் நல் அகம் கேட்டேன்
அசைவறு மதி கேட்டேன்
இதை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?
இதை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?

என்ன ஒரு கவிஞ கம்பீரம் பாருங்கள்! இதத் தாறதில உனக்கென்ன பிரச்சினை இருக்கு என சிவசத்தியையே கேள்வி கேட்கும் கம்பீரம்!!

அது போல மாணிக்க வாசகரின் திருவெம்பாவையில் ஒரு வரி வரும். கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கும் வரியில் அதுவும் ஒன்று. உடனே நினைவுக்கு வந்த அப்பாடல் வரி இது. எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள் என்று தொடங்கும் அது.

‘......
எங்கள் பெருமான் உனக்கொன்றுரைப்போம் கேள்!
என் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க!
என் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க!
கங்குல் பகல்  என் கண் மற்றொன்று காணற்க!

என வரும்.

கடவுளிடம் கேள்வியும் கடவுளுக்கே சூழுரைத்தலும் நடக்கிற விதமானதாக ஒரு வித ‘பிரபஞ்சத்தை’ கூட்டிக் கொண்ட வாழ்வியலாக கீழைத்தேசத்தின் வாழ்வியல் இருந்திருக்கிறது.

மேலைத் தேயம் எதையும் ஏன் எதற்கு எப்படி என்று கேள்வி கேள் என்று கற்பித்துக் கொண்டிருந்த போது  நாம் இப்படித்தான் 'பிரபஞ்சத்தோடு’ தொடர்புகளைப் பேணிக்கொண்டிருந்தோம். வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

மேலைத்தேய சிந்தனைகள் இவ்வுலக வாழ்வை மையப்படுத்தி ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்ற முடிவுக்கு வந்த போது  கீழைத்தேய சிந்தனை மரபோ ஆண்மீக வாழ்வை மையப்படுத்தி இறப்புக்குப் பின்னும் நீழும் வாழ்வு பற்றிய குறிப்புகளை இலக்கியங்களிலும் இதிகாசக் கதைகளிலும் வாழ வைத்துக்கொண்டிருந்தது.

இந்த வாழ்க்கை பற்றிய நோக்கு வாழ்க்கையை வாழுகின்ற முறைமையில் பிரதான தாக்கத்தை கொண்டிருக்கிறது.

இன்று வரை.

பெண்ணுக்கும் ஆணுக்குமான ‘இட நெருக்கடி’க்கு கவிஞர் வைரமுத்து அவர்களின் வரி இப்படி ஒரு தீர்வு காட்டும்.

’...... ஆண்களில் ராமன் கிடையாது
புரட்சிகள் ஏதும் செய்யாமல்
பெண்ணுக்கு நன்மை விளையாது,
கண்ணகி சிலைதான் இங்குண்டு;
சீதைக்கு தனியாய் சிலை ஏது?’

ஆனால் இன்று விரும்பியோ விரும்பாமலோ உலகம் சுருங்கி கையடக்கத் தொலைபேசிக்குள் வந்த பிற்பாடு ,

ஈழத்தமிழ் பிரச்சினை தமிழர்களை உலகெங்கும் சிதறச் செய்த பிற்பாடு -

இந்தியத் தமிழர்களின் இணையத் தொழில் நுட்ப அறிவு சிறப்பும் அதன் குறைந்த விலையிலான நுகர்வுத் திறனும் அவர்களை உலகெங்கும் கொண்டு செல்ல தொடங்கிய பிற்பாடு -

உலகில் சகல மூலையிலும் ஒரு தமிழன் தமிழ் சிந்தனையோடு மேலைத்தேயக் கலாசார சூழலில் ‘பரிசோதனை’ வாழ்வை வாழ ஆரம்பித்து விட்டான்.

இந்த புதிய வெள்ளம் பாய ஆரம்பித்து இப்போது 30 வருடங்களுக்கு மேலாகி விட்டன.

காரணம் எதுவாய் இருப்பினும் ஒருவாறு தம்மைத்  மேலைத் தேயங்களில் தக்கவைத்து தம் வேர்களை பதிக்க ஆரம்பித்தவர்களின் புதிய சந்ததி அங்கேயே பிறந்து அந் நாட்டு மொழியைத் தம் தாய் மொழியாகக் கொண்டு அந் நாட்டுச் சிந்தனைகளோடு  தம் ’சொந்த’வேர்களைப் பார்க்க ஆரம்பித்திருக்கின்றன.

அவர்களுடய பார்வைகள் கேள்விகள் தாய் மரத்தில் புதிய துளிர்களைத் தோற்றுவிக்கின்றன.

2011 இல் ‘OZ தமிழ் 2011 - சில அவதானிப்புகள் என்ற தலைப்பில் சிங்கையில் நடந்த புலம்பெயர்ந்தோர் மாநாட்டில் வழங்கப்பட்ட கட்டுரை அந்த புதிய அரும்பும் துளிர்கள் பற்றிப் பேசியது.

சிறுகுழந்தைகளிடம் இயல்பாய் எழும் கேள்விகள் நம்மை சுளீர் என தாக்குகிறன. எப்படி நாம் அவ்வாறு சிந்திக்காமல் போனோம் என்று கேட்கத் தூண்டுகின்றனவாக அவர்களின் வினாக்கள் நம்மை நோக்கி வீசப் படுகின்றன. கீழே வருவன நடை முறையில் நடந்த உதாரணங்கள்,

1. தந்தையோடு கோவலன் கண்ணகி நாடக ஒத்திகைக்கு சென்றிருந்த 5 வயது மகள் தேநீர் இடை வேளையின் போது தந்தையிடம் கேட்கிறாள், ‘ஏனப்பா கண்ணகி அழுது கொண்டிருக்கிறா? தந்தை விடை சொன்னார் ‘கோவலன் மாதவி என்றொரு பெண்ணிடம் போய் விட்டார், அதனால் கண்னகி துக்கித்து அழுகிறாள்’ மகள் சொன்னாள்,’ஏனப்பா கண்ணகியும் அவவுக்கு பிடிச்ச ஒராளப் பார்த்து கல்யாணம் செய்து கொள்ளலாம் தானே? அவ ஏன் அழ வேணும்?

 - இங்கு நாம் இன்னும் கண்ணகி கோவலன் கதையை நாடகமாக்கிக் கொண்டிருக்கும் அதே நேரம் அடுத்த சந்ததி அதன் உள்ளடக்கத்தை வெகு இயல்பாக கேள்வி கேட்கக் காணலாம்.

2. அது போல இன்னொரு கதை. இது ஞான சம்பந்தர் பால் குடித்த கதை. தந்தை உமை பால் கொடுத்ததையும் தந்தை வந்து ‘யார் உனக்குப் பால் தந்தது என்று வினவுவதையும் சம்பந்தர் தோடுடைய செவியன் எனப் பாடுவதையும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்தக் குழந்தை உடனடியாக எந்தத் தயக்கமும் இல்லாமல் கேட்டது, உமாதேவியார் தானே பால் கொடுத்தார்! ஏன் சம்பந்தர் சிவபெருமானைப் பாடினார்?

இவ்வாறு நாளாந்தம் நாம் கவனியாமலே கடந்து செல்லும் கேள்விகள் ஏராளம். அவை நம்மை நோக்கி வீசப்படுவன அல்ல; அவை பண்பாட்டை நோக்கிக் வீசப்படுகிற வினாக்கள்.

கடந்த சில வாரங்களின் முன்னர்  ஒரு பரிசுக்கதையை வாசிக்கக் கிட்டியது. அது 2014ல் தமிழ் தாய் சிறுகதைப் போட்டியில் 3ம் இடத்தைத் பெற்ற கதை அது.  அந்தக் கதை நம் சகோதர தளமான உயர்திணை இணையப் பக்கத்தில் பிரசுரமாகி இருக்கிறது. தயவு கூர்ந்து அங்கு சென்று அந்த கதையை வாசித்துப் பாருங்கள். ஏழுமலை ஏழு கடல் என்பது கதையின் தலைப்பு. இந்தக் கதையை ஸிட்னி இரா. சத்யநாதன் என்பார் எழுதி இருக்கிறார்.

uyarthinai.wordpress.com

இவை எவ்வாறு எதிர்காலத்தில் விரியும் என இப்போது சொல்ல முடியாவிட்டாலும், நம் பண்பாட்டில் அரும்பும் புதிய துளிர்கள் பற்றிய ஒரு பிம்பம் உங்கள் மனதிலும் தெரியலாம்.....

பண்பாட்டில் அரும்பும் புதிய துளிர்கள்......