Monday, August 17, 2015

இலக்கிய சந்திப்பு - 23


அன்பான இலக்கிய உள்ளங்களே!

எல்லோரும் நலம் தானா?

பல இலக்கிய உள்லங்கள் ஏன் இலக்கிய சந்திப்பு நிகழ்த்த வில்லை? இம்மாதம் இலக்கிய சந்திப்பு உண்டா என நேரிலும் தொலைபேசி மூலமாகவும் கேட்டிருந்தார்கள். ஆம். கடந்த சில மாதங்களாக நம் சந்திப்பு நிகழ இயலாமல் போனமைக்கு குளிர்காலம் ஆரம்பித்தமை ஒரு பிரதான காரணம்.நாம் பூங்காவில் நிகழ்ச்சிகளை நிகழ்த்துவதால் குளிர்காலத்துக்கு அது தோதாக இல்லாமை ஒரு காரணம். கணப்புகளுடன் கூடிய மூடிய கூடாரங்களைப் பெற்ருக் கொள்வதன் சிரமங்கள் இன்னொரு காரணம்.

இதோ சற்றே மெல்ல சூரியன் வெளியே வர தொடங்கி விட்டான்.

நீண்ட குளிர் காலத்தின் பின் மீண்டும் ஒரு மாலையில் சந்திக்க இருக்கிறோம். இன்னும் குளிர் முற்றாகத் தீராத போதும் சில இலக்கிய நண்பர்களின் விருப்பின் பேராலும் தூண்டுதலின் பேராலும் பிற்பகல் 5.00 மணிக்கு ஆரம்பமாகும் நம் சந்திப்பை 4.00 மணியாக முன்னாக்கி நிகழ்த்த முடிவு செய்திருக்கிறோம். பின்னாலும் விரைவில் குளிர் ஆரம்பித்து விடும் என்பதால் ஒரு மணி நேரத்துக்குள் முடித்து விடவும் தீர்மானித்திருக்கிறோம்.

இம்முறை ஈழத்துக் கவி மொழி பற்றியதாக நம் கலந்துரையாடலை நிகழ்த்தலாம் என்று தீர்மானித்திருக்கிறோம். ஈழத்துக் கவிதைகள் அதன் பொருளடக்கத்திலும் சொல்லும் முறையிலும் தாய்தமிழ் நாட்டின் அடிப்படையில் இருந்து காலத்துக்குக் காலம் தனித்துவமாகவும் வேறுபட்டும் சில வேளைகளில் ஒன்று பட்டும் விளங்கி வந்திருக்கிறது. ”இலக்கியம் சமூகத்தின் கண்ணாடி” என்பதற்கிணங்க சமூக வாழ்வும் அதன் அரசியல் பொருளாதார பின்னணிகளும் கவிதைகளில் எவ்வாறு பிரதி பலித்திருக்கின்றன என்ற பார்வை நமக்கு புது பரிமானங்களின் தரிசனங்களைத் தரலாம். உங்கள் ஒவ்வொருவருடய பார்வைகளும் நம் கண்களுக்கு புலனாகாத புதிய பக்கங்களை கானச் செய்யும். அதனால்,ஈழத்துக் கவிதைகளின் களமும் வளமும் பலமும் பலவீனமும் பற்றிய ஒரு அலசலாக இம்மாத சந்திப்பை அமைத்துக் கொள்ள தீர்மானித்திருக்கிறோம்.

இலக்கிய ஈடுபாடுடய அன்பர்கள் தயவு கூர்ந்து அவை பற்றிய உங்கள் பார்வைகளை; படித்ததை; மனதில் பதிந்ததை; அல்லது மறுப்பதை அன்றேல் முரண்களை நம்மோடு பகிர்ந்து கொள்ள வாருங்கள். 

பல மாத இடைவெளிக்குப் பின் உங்கள் எல்லோரையும் மீண்டும் சந்திக்க ஆவலுடையோம்.

தமிழால் இணைந்திருப்போம்.

No comments:

Post a Comment