Monday, December 14, 2015

உண்மையை எதிர் கொள்ளுதல்........



’உண்மையை எதிர் கொள்ளுதல்’

இப்படி ஒரு வாசகத்தை அதன் முழுமையான அர்த்தங்களுடன் எப்போதேனும் நாம் உள்வாங்கி இருக்கிறோமா என்று கேட்டால் பலருக்கும் - நான் உட்பட - பலவிதமான பதில்கள் அல்லது மழுப்பல்கள் இருக்கும்.

காரணம் உண்மை என்ற ஒன்று தரும் ஒரு விதமான கசப்பு அல்லது அது தரும் சுளீர் என்ற ஒரு கசையடி.

உண்மை எப்போதும் ஜீரணிக்க முடியாததாகவும்; பொய்கள் நாவுக்கு நல்ல இனியவையாகவும் இருப்பதால் பலருக்கும் உண்மையைப் பேச முடியாமல் இருக்கிறது. எதிர்கொள்ள இயலாமல் இருக்கிறது. பொய்களோடு நின்றுவிடப் பிடிக்கிறது. உண்மையை பேசுவோர் மீது ஆத்திரம் வருகிறது.

இது எல்லா வழிகளிலும் நம்மைப் பீடித்திருக்கிறது. ‘(புலம்பெயர் நாடுகளில்) தமிழ் மெல்ல இனி சாகும்’ என்று சொன்னால் நமக்கு கோபம் வருகிறது. மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு விடுகிறோம். எப்படி அது சாத்தியப்படும் என போர் கொடி தூக்கி பகீஸ்கரிப்புச் செய்து தனிப்பட ஒருவரைத் தாக்கி நம் ஆத்திரங்களுக்கு வடிகால் கண்டு கொள்ளுகிறோமே ஒழிய அதில் இருக்கும் சாத்திய அசாத்தியங்களை சீர்தூக்கிப் பார்க்கவோ அதிலிருக்கும் உண்மையை எடுத்துக் கொண்டு அதிலிருந்து ஆக்கபூர்வ வேலையை ஆரம்பிக்கவோ நாம் விரும்புவதுல்லை. தாயக பூமியில் இருந்து யாரேனும் வந்து ‘ஆஹா இங்குள்ல தமிழர் என்னமாய் வாழுகிறார்கள் இவர்களாலல்லவோ தமிழ் வாழ்கிறது “என்று சொன்னால் அடுத்த வருடம் அதே பேச்சாளர் இங்கு வருவது உறுதியாகி விடும். அதுவே அப் பேச்சாளருக்கும் புலம்பெயர் தமிழருக்கும் வேண்டி இருக்கும் பொய்யாக - இனிப்பான செய்தியாக இருக்கிறது.

உண்மையை சொன்னவர் எதிரியாகவும் ‘உறக்கத்துக்கு தாலாட்டுப் பாடுபவர்’  நல்லவராகவும் நமக்கு ஆகிப் போய் விடுகிறார்.

அண்மையில் இரண்டு மூன்று உண்மைகளை எதிர்கொள்ள நேர்ந்தது.

இரண்டும் இளவயது இறப்புகள்.

ஒன்று வேலைத் தலத்தில்.
இன்னொன்று சமூகத்தில்.

ஒருத்தி 4 இளம்பிள்ளைகளுக்குத் தாயான 37 வயது வெளிநாட்டுக் காறி.
இன்னொரு பெண் 34 வயது திருமணமான தமிழ் பெண்.

புன்னகையோடும் நேர்மறைச் சிந்தனைகளோடும் பிரமாண்டமான நம்பிக்கைகளோடும் வாழ்க்கையை எதிர்கொண்ண்ட இவர்களை மரணம் அள்ளிக் கொண்டு போய் விட்டது.

இந்த உண்மை என்ன தான் நமக்கு சொல்ல வருகிறது?

அண்மையில் ‘படலையில்’ ஒரு வசனம் என்னைக் கவர்ந்தது. “காதல் வசப்பட்டவனுக்கு புத்தி சொல்லப் போகாதீர்கள். - அவன் முடிவினை எடுத்து விட்டுத் தான் உங்கள் கருத்தைக் கேட்கத் தயாராக இருப்பான்” எல்லோருக்கும் அப்பட்டமாகத் தெரிகிற உண்மை அந்த காதல் வசப்பட்ட மனிதனுக்கு மட்டும் தெரியாமல் போய் விடும். அல்லது தெரிய விருப்பம் இல்லாமல் போய் விடும். அப்படிப்பட்ட இடங்களிலும் பொய் ரொம்ப அழகாகிப் போய் விடும். உண்மையைச் சொல்லப் பிரியப்படுவதில்லை யாரும்.அது அவரது உரிமை என்றொரு பட்டாடைக்குள் உண்மை ஒழிந்து கொள்ளுகிறது.

உண்மைக்கும் விதிக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதோ?

இப்போது எனக்கு இந்த உண்மையை ஜீரணித்துக் கொள்ள கஸ்டமாக இருக்கிறது.

உண்மையை எதிர் கொள்ளும் வீரியம் வாய்க்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று முடிந்தவர்கள் சொன்னால்.......

எதிர் கொள்ள கஸ்ரப்பட நேராதில்லையா......

Friday, November 20, 2015

பதியச் சொல்லி வந்தது......

8 boys were standing on a track for racing.

Ready !

Steady !

Bang !

With sound of Pistol all boys started running.

Hardly had they covered 10 to 15 steps,
1 boy slipped & fell.

He started crying due to pain.

When other 7 Boys heard him, all of them STOPPED running..

STOOD for a while,

turned BACK & RAN
towards him.

All the 7 Boys LIFTED the Boy,
pacified him,
joined hands together,
walked together &
reached WINNING Post.

Officials were shocked.

Many Eyes were
filled with tears.

It happened at Pune.

Race was conducted by
National Institute of
Mental Health...

All participants were
Mentally RETARDED.

What did they teach ?
Teamwork,
Humanity,
Sportsman spirit,
Love,
Care,
&
Equality..

We Surely can NEVER Do this,

because...

We have Brains....
We have Ego...
We have Attitude

தந்தவர்: நன்றி - பரா.சுந்தா



இதனை வாசித்த போது ஒரு கறுப்பு வெள்ளை வீடியோவாக பார்த்த ஒலிம்பிக் ஓட்டப் பந்தயம் நினைவுக்கு வந்தது. எப்போது நடந்தது எங்கு நடந்தது என்பது பற்றி அதிகம் நினைவில் இல்லை. ஆனால் அந்த சம்பவம் மட்டும் நினைவில் பசுமரத்தாணி போல பதிந்திருக்கிறது.  (அலைவரிசை 9 தொலைக்காட்சியில் நிகழ்ந்த 20/20 யாக இருக்கலாம்)

மரதன் ஓட்டப் போட்டி. ஆபிரிக்க இளைஞன் ஒருவன் முதலாவதாக ஓடிக்கொண்டிருக்கிறான். சற்று இடைவெளி விட்டு இரண்டாவதாக இன்னொரு வெள்ளை இன வீரன் ஓடிக்கொண்டிருக்கிறான். முடிவை நெருங்கும் களைத்துப் போனதொரு தருணம்.

இரண்டாவதாக ஓடிக்கொண்டிருந்த வீரன் கால் தடக்கி விழுந்து போனான். ஏது காரணமோ சற்றே திரும்பிப் பார்த்த முதலாவதாக ஓடிக்கொண்டிருந்த வீரன் சற்றும் தாமதிக்க வில்லை. திரும்பி ஓடி வந்து விழுந்த இளைஞனை தூக்கி நிறுத்தி விட்டு மீண்டும் முன்னோக்கி ஓட ஆரம்பித்தான்.உலகமே பார்த்து நிற்க அவனே முதலாவதாகவும் வந்தான்.

போட்டி விதி முறைகளின் படி வீரன் பின் புறமாக ஓட முடியாது. அதனால் அந்த ஆபிரிக்க வீரனால் முதலாவதாக வந்த போதும் தங்கப் பதக்கத்தைப் பெற முடியவில்லை. ஆனால் அவன் மனித மனங்களில் பெரு வீரனாய்.....


Thursday, November 12, 2015

அவள் சொன்ன நன்றி.....



இரண்டு வாரத்துக்கு முன்னாலான ஒரு வேலை நாள்.

ஞாயிற்றுக் கிழமை காலை.

நம் மத்திய தபாலகம் அமைந்திருக்கும் முன்புறக் கூடல்.

வழக்கமாய் இங்கு செல்லப்பிராணிகளாய் நாம் வளர்க்கும் பிராணிகளை (நாய், பூனை.. இன்ன பிற...) தெருவோரங்களில் விட்டேந்தியாக திரிவதைக் காண முடியாது. அப்படி ஏதேனும் அபூர்வமாகத் அவ்வப்போது தென்பட்டுக் கொண்டிருந்தால் பாத சாரிகளோ அன்றேல் வாகனதாரிகளோ அதனை பிடித்து அவர்களுக்கான பராமரிப்பு காப்பகங்களில் கொண்டு சென்று கொடுத்து விடுவார்கள்.

ஆனால் வழக்கத்துக்கு மாறாக ஒரு நடுத்தரவயது மதிக்கத் தக்க கறுப்பும் வெள்ளையும் நிறம் கொண்ட அகன்ற பச்சைக் கண்களைக் கொண்ட ஒரு பூனை அண்மைக்காலமாக என் வேலைத்தலத்தில் நிற்கிறது.  அது வாலை ஒடுக்கி உட்கார்ந்திருப்பதிலும்; படுத்திருப்பதிலும் ஒரு வித ஒழுக்கம் தெரியும். ’மேட்டுக்குடி பூனை போலும்’ என எனக்குள் எண்ணிக் கொள்வேன். சத்தம் போடுவதில்லை. யாரையும் தொந்தரவு பண்ணுவதில்லை. எப்போதும் தென்படுவதும் இல்லை. அதனால் யாருடயதோ வளர்ப்புப் பூனையோ என ஒரு சந்தேகம் எனக்கு அதனைக் காணும் போது எழும். ஏனென்றால் அவள் அத்தனை சுத்தம். கறுப்பும் வெள்ளையுமான அவளில் உடல் அத்தனை துல்லியமாய் தெரியும். வழக்கமாக வாசலில் இருக்கும் முன்புறக் கூடலில் போடப்பட்டிருக்கிற மர இருக்கைகளுக்கு அருகில் அவ்வப்போது தென்படும்.

அநேகமாக ஒரு குறிப்பிட்ட  தூரத்தில் வாலை ஒடுக்கி தன் காலோரம் வைத்துக்கொண்டு உட்கார்ந்த படிக்கு வேலைக்கு போவோரையும் வருவோரையும் பார்த்துக் கொண்டிருப்பாள்.

இது சிலவேளை கைவிடப்பட்ட பூனையாக இருக்குமோ என்றொரு சந்தேகமும் என் மனமூலையில் இருப்பதால் அதனைக்கண்டால் என்னிடம் இருக்கும் உணவில் அதுக்குக் கொஞ்சம் கொடுப்பேன். அது சிட்னிப் பூனை. ஸ்பைஸ் அதுக்கு ஒத்துக் கொள்ளாதோ என்னவோ.... என்னையும் பார்த்து சாப்பாட்டையும் முகர்ந்து பார்த்து விட்டு நான் மறையும் வரை அந்த இடத்திலேயே நிற்கும். சாப்பிடாது. நானும் சப்பிடுதா சாப்பிடுதா என திரும்பித்திரும்பிப் பார்த்துக் கொண்டு போய் விடுவேன். என்றாலும் சாப்பாட்டைப் போட்டு விட்டுப் போவதை நிறுத்துவதில்லை. அவள் சாப்பிடுவதில்லை என்றொரு ஐயம் எனக்கு இருந்தாலும் போட்டு விட்டுப் போவதற்குக் காரணம் ஒன்றும் கிடைக்காவிட்டால் அவளுக்கு சாப்பிட ஏதேனும் வேண்டும் என்ற ஒரு காரணம் தான். (தண்ணி குடிக்க என்ன செய்வாள் என்பது எனக்கு இப்போதும் இந்ருந்து கொண்டிருக்கும் சந்தேகம்)

சுமார் 3 மாத காலமாய் நான் அவளைக் காணவில்லை. அவ்வப்போது அந்த இடத்தைக் கடக்கும் போது அவள் என்ன ஆனாள் என்றொரு நினைவு எழுந்து மறையும். அவ்வளவு தான்.

அந்த ஞாயிற்றுக் கிழமை.

அந்தப் பென்னாம் பெரிய தபால் நிலையத்தின் மறுபக்க வாசல் வழியாக வேலைக்குப் போனேன்.

தற்செயலாய் அவளைக் கண்டேன்.

அசுத்தமாய் கண்சோர்ந்து தென்பட்டாள். வண்டி பெரியதாய் கீழ் புறமாக பருத்திருந்தது. புழுதி படிந்து காணப்பட்டாள். எப்போது எப்படி இந்தப் பக்கம் வந்து சேர்ந்தாள் என்று தெரியவில்லை. அந்தப் பென்னாம் பெரிய கட்டிடத்தில் இந்தப் பக்கம் வருவதற்கு வேறு பாதையும் பெரு நெடுஞ்சாலையும் தாண்டி ஆகவேண்டும். உள்பக்கமாய் அவள் வருவதற்கு எந்த வழியும் இல்லை. எல்லாரும் அடையாள அட்டைகளை வாசல் வழி காட்டி தானியங்கி கண்ணாடிக் கதவுகள் வழியாக உள்ளே வரவேண்டிய நிலையில் ஒரு ஈ, காக்காய் கூட உள்ளே அனுமதி இல்லை. 24 மணி நேர கமராக்கள் வேறு எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கும் கடும் பாதுகாப்பு கண்காணிப்பு நிலைமையில் அவள் அந்தப்பக்கம் வந்திருந்தது எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம்.

ஒரு இனம்புரியா ஆறுதல் நிரம்பிய சந்தோஷமும் கூட. கூடவே இவள் எப்படி இப்படிச் சீர்குலைந்து போனாள் என்று ஒரு கவலையும்......

வழமை போல கொண்டு போன சாப்பாடில் கொஞ்சத்தை எடுத்து அவளுக்கும் எனக்கும் இடையில் வைத்து விட்டு அவள் வந்து சாப்பிடுவாளா எனக் காத்திருந்தேன்.

என்னைப் பார்த்துக் கொண்டிருந்த அவள் நேராக தன் சாப்பாட்டைக் கடந்து என்னிடம் வந்தாள். என் கால்களைச் சுற்றி வாலை நேரே உயரத் தூக்கியபடி; கால்களை உரஞ்சிய படி ஒரு சுற்றுச் சுற்றினாள். என் முகத்துக்கு நேரே வந்தபின் தன் தலையை நிமிர்த்தி வாஞ்சையோடு என்னை பார்த்தாள். அவள் முகத்தில் இருந்து முதுகோரமாகத் வால் வரை ஒரு வித மனநிறைவோடு தடவி விட்டேன்.

போய் சாப்பிடத் தொடங்கினாள்.

அது அவள் சொன்ன உன்னை அடையாளம் கண்டு கொண்டேன் என்பதும் உன்சாப்பாட்டுக்கு நன்றி என்பதாகவும் நான் மொழிபெயர்த்துக் கொண்டேன்.

கூடவே அன்பைப் பரிமாற மொழி தேவை இல்லை என்பதையும்.....

அடையாளம் கண்டு கொள்ளவும் தன் பாஷையில் நன்றி சொல்லவும் தெரிந்தவள். அழகிய நடுத்தர வயதைத் தாண்டிய அழகி அவள்.

இப்படிப்பட்ட ஒருத்தியை எப்படி தனியே வெளியே தள்ளி விட முடிந்தது ஒருவரால்.....?

எனக்கு விளங்கவில்லை. மனித குரூரங்கள்.....

அன்றய நாள் வேலை நேரம் முழுக்க அவளே என்னை ஆக்கிரமித்திருந்தாள்.

இந்த உலகத்தில் உள்ள சகல மதங்களையும் பண்பாடுகளையும் நம் வாழ்வில் இருந்து முற்றிலுமாக அகற்றி விட்டு உலகம் முழுதிலும் உள்ள குழந்தைகளின் 5 வயதில் இருந்து பள்ளிக் கூடங்களில் மனிதனாய் வாழ்தல் எப்படி என்று சமய பாட வேளைகளில் பாடம் சொல்லிக் கொடுத்தால் இந்த உலகம் எத்தனை ரம்யமாக இருக்கும்!



சாதி இருக்காது...
மதம் இருக்காது...
நிறபேதம் இருக்காது....
குரூரங்கள் இருக்காது.
.............................

அந்த இடம் முழுவதும் மனித நேயத்தால் பரஸ்பர அன்பால் ஒருவர் பால் ஒருவர் காட்டும் மதிப்பால் மரியாதையால் விளங்கிக் கொள்ளலால் இந்த உலகம் தெய்வீகம் உள்ளதாய் ஆகி விடாதா?......

ஓராபிரிக்க இளைஞனை இந்த எந்தத் தளையும் இல்லாத ஒரு மனிதனாய் கற்பனை பண்ணிப் பாருங்கள்....

அவனால் ஓரு அராபிய அழகியை சிநேகிக்க ஒரு தடையும் இருக்காது.

நம்மால் இயல்பாக அன்பு செலுத்துவது எத்தனை இயல்பாகி விடும்?

அது போல மிருகங்களை; பிராணிகளை; பறவைகளை; இயற்கையை ... எத்தனை நேசிப்போடு இவற்றை எம்மால் அணுகக் கூடியதாய் இருக்கும்?.....






முடிவுறாத முகாரி வெளியீட்டு விழா - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்


கடந்த 17 ம் திகதி (17.10.2015) சனிக்கிழமை செ.பாஸ்கரனின் “முடிவுறாத முகாரி” என்ற கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாHomebush பாடசாலை மண்டபத்தில் நடை பெற்றது. இந்த விழாவிற்கு எமக்கெல்லாம் பழக்கப்பட்ட இளைஞன் கிருஷ்ணா சத்தியமூர்த்தி நிகழ்ச்சித் தொகுப்பாளராக வந்து வரவேற்றார். வழமையாக நிகழ்ச்சித் தொகுப்பாளராக வரும் கிருஷ்ணா அன்று தனது சித்தப்பா செ.பாஸ்கரனின் நூல் வெளியீட்டு விழாவிற்கு தொகுப்பாளராக கடமையாற்றினார்.

விஜயாள் விஜேய், அபிஷா பூபாலசிங்கம், மகிஷா பூபாலசிங்கம் ஆகிய மூன்று பெண் பிள்ளைகள் அழகாக தமிழ்மொழி வாழ்த்தும் அவுஸ்ரேலிய தேசிய கீதமும் இசைத்தார்கள்

திரு திருநந்தகுமார் தலைமையில் அரங்கம் ஆரம்பமானது மண்டபம் நிறைந்த கூட்டம். மேடைப் பேச்சாளரான திருநந்தகுமார் தனகிட்ட பணியை அழகாக திறமையாக கையாள்பவர். அன்றும் தனக்கும் திரு செ.பாஸ்கரனுக்கும் உள்ள உறவைக் கூறி பன்முகம் கொண்ட பாஸ்கரன் ஒரு கவிஞர் நாடக இயக்குனர் நடிகர் பத்திரிகையாளர் வானொலி தயாரிப்பாளர் அறிவிப்பாளர் என்று பாஸ்கரனைப் பற்றி கூறி விழாவை ஆரம்பித்தார்.
 அபிஷா பூபாலசிங்கம், மகிஷா பூபாலசிங்கம் விஜயாள் விஜேய்,
வாழ்த்துரை வழங்க வந்திருந்தவர் ஈழத்து பிரபல கவிஞரான அம்பி என அழை க்கப்படும் திரு அம்பிகைபாலன் அவர்கள். குரல் சற்று வெளிவர மறுத்தாலும் சக்கர நாற்காலியில் மிடுக்காக அமர்ந்திருந்தார் அம்பி அவர்கள். அவர் வழங்கிய ஆசிஉரையை கேட்டபோது பாஸ்கரனில் அவர் எவ்வளவு பாசமும் மதிப்பும் கொண்டுள்ளார் என அறியக்கூடியதாக இருந்தது.

ஆழியாள் என்ற பிரபலமான கவிஞர் மதுபாஷினி அவர்கள் கவிதை நூலினை அறிமுகம் செய்ய வந்திருந்தார். பெரிய கவிஞரான அவர் பிறிதொரு கவிஞரை எவ்வாறு நோக்குகிறார் என அவரது உரையைக் கேட்க ஆர்வமானேன். அவர் ஆழமாக அழகு சொற்களால் குறுக கருத்தைக் கூறும் கவிதை பற்றியும் பாஸ்கரனின் கவிதைகள் என்னென்ன சிறப்போடு அமைந்துள்ளது என்ற ஆழ்ந்த ஞானத்துடன் பல விடயங்களைக் கூறினார்.
திரு.கிருஷ்ணா சத்தியமூர்த்தி
ஆழியாளைப் பற்றி  திருநந்தகுமார் கூறும்போது ஆங்கில இலக்கியம் கற்றவர் பேசும்போது அவர்கள் பார்வை மற்றவரில் இருந்து தனிப்பட்டிருக்கும் எனவும் கூறினார்.


நூலை வெளியிட்டு வைக்க திருமதி மதுரா மகாதேவ் அவர்கள் வந்திருந்தார். இந்நூலை வெளியிட்டிருக்கும் தமிமுரசுஅவுஸ்ரேலியா வாராந்த பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவரான மதுரா மகாதேவ் முதல் பிரதியை வெளியிட்டு வைக்க அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இயக்குனர்களில் ஒருவரான திரு ஈழலிங்கம் அவர்கள் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
கவிஞர் ஆழியாள்
சிறப்புப் பிரதியை வழங்க இருவர் அழைக்கப்பட்டார்கள் ஒருவர் திரு மு.கோவிந்தராஜன் அவர்கள் இவரை பாஸ்கரன் தன் கூடப்பிறக்காத அண்ணன் நல்ல விமர்சகன் என்றுஅறிமுகப்படுத்தினார். பிரதியை அவர் பெற்றுக்கொண்ட போது அவர் கூறினார் பாஸ்கரனின் கவிதைகளை அப்பப்போ விமர்சித்து வந்த தன்னால் நட்பின் இறுக்கத்தால் இங்கு விமர்சகனாக முடியவில்லை என்றார். ஆனால் பாஸ்கரன் கவிதையில் தான் எதிர் பார்த்த மாதிரி யாரையும் ஓங்கி அறையவில்லை என குறைப்பட்டார். உதாரணத்திற்கு ஜெயகாந்தனையும் கவிஞர் ஆழியாளையும் குறிப்பிட்டார். 



பாஸ்கரன் ,கவிஞர் அம்பி, மதுரா 


அடுத்த சிறப்புப் பிரதியை பெற வந்தவர் திரு செ.சத்தியமூர்த்தி அவர்கள், இவரை பாஸ்கரன் தன் கூடப்பிறந்த அண்ணன் என்றுஅறிமுகப்படுத்தினார். தம்பியை தொட்டில் பிள்ளையாக பார்த்து இந்த வளர்ச்சியை பார்க்கின்றேன் என்று அவர் பேசும்போது உணர்ச்சி வசப்பட்டு விட்டார். இருந்தும் சுருக்கமாகவும் நகைச்சுவை ஆகவும் பேசி மகிழ்வித்தார்.

அடுத்து நயப்புரை அரங்கு என்று அறிவிக்கப்பட்டது இதில் வழமைக்கு மாறாக விமர்சனம் செய்யப்பட உள்ளது என்று குறிப்பிட்டார்கள். இப்படி ஒரு அரங்கு வேண்டுமா என்ன இது என்பது போல சபையோர் இருந்தனர். சமூகமளிக்க வந்தசிலர் அகல இலக்கிய ஆர்வலர்கள் இருந்தார்கள். தலைமை ஏற்று நடாத்தியவர் இலக்கியத்தில் துறை தேர்ந்த அறிஞர் திரு ம.தனபாலசிங்கம் அவர்கள். தனக்கே உரிய பாணியில் தொடக்கி பல வருடங்களுக்கு முன்பு செ.பாஸ்கரனின் வேண்டுகோளின் பேரில் கவிஞர் சு.வில்வரெத்தினத்தின் காற்று வழிக் கிராமம் என்ற கவிதை நூல் வெளியீட்டிற்கு தலைமை தாங்கினேன் இப்போது அவரின் வழி வந்தவரான பாஸ்கரனின் கவிதை நூல் விழாவிற்கு தலைமை தாங்குகிறேன் என்றார்.

திரு ஈழலிங்கம் 
நயப்புரை வழங்க முதலில் வந்தவர் பாமதி ஒரு கவிஞர், பெண்ணிலைவாதி என அறியப்பட்டவர். கவிதை என்ற கலையை பல ஆங்கில கவிஞர்களின் கவிதையுடன் ஒப்பு நோக்கி கவிதா உலகை வலம் வந்தார். என்போன்ற கவிதை உலகம் அறியாதவர்க்கு சில விடயங்களை எடுத்துக் கூறினார். நாம் அறியாத விடயத்தை பிறர் கூறக்கேட்டு அறிவது இலகுவான விடயம். அந்த வகையில் சில விசயங்களை அறிந்தேன். தமிழில் கவிதை புனைபவருக்கு ஆங்கில கவிதை பற்றிய அறிவு வேண்டியதே. ஆங்கில மொழி உலகை எமக்கு காட்ட உதவும் ஊடகம் அல்லவா

திருமதி மதுரா மகாதேவ் 
அடுத்து யசோ பத்மநாதன், பாஸ்கரன் இரு பெண்களின் தந்தை மனைவியும் ஒரு பெண் இந்த மூன்று பெண்களுடன் வாழும் கவிஞர் பெண்களை எவ்வாறு பார்க்கிறார் என அவரின் கவிதை தொகுதியில் இருந்து “நேற்று இன்று நாளை” என்ற ஒரு நீண்ட கவிதை தலை முறை தலை முறையாக பெண்ணுக்கு சமூகத்தால்  ஏற்படும் மாற்றத்தை விளக்கும் கவிதை. கவிதையை வாசிக்க தூண்டும் வகையில் நீண்ட கருத்தை கூறிச் சென்றார்.  


செ.பாஸ்கரன் , சாந்தி பாஸ்கரன்


அடுத்து வந்தவர் அரங்க கலைகள் சக இலக்கிய பவரின் தலைவர் நாடக நடிகர் நெறியாளர் திரு குணசிங்கம் இவர் ஒரு ஓவியர் என்றது அன்று பலருக்கு தெரியவந்தது. சில நூல்களுக்கு அட்டைப்படம் வரைத்திருக்கிறார். இவர் நயப்புரை கூறவந்த கவிதை “ எழுத்து “ . இந்தக் கவிதை பற்றி அறிமுகம் செய்த கவிஞர் ஆழியாளும் கவிஞர் பாமதியும் குறிப்பிட்ட படியால் தான் நூலின் உள்ளே போகாது வடிவமைப்பை பற்றி பேசுவதாக கூறி ஓவியம் பற்றி சிலகருத்தைக் கூறி, முடிவுறாத முகாரியில் முகாரி என்ற எழுத்துக்கள் ராகத்தைக் குறிப்பதால்Musical notes வடிவில் அமைந்ததால் பொளிப்பாக புரியும்படி இல்லை என கூறினார். அட்டைப்பட வர்ணத்தை அழகாக அருமையாக கையாண்டுள்ளார் ஓவியர். போரிலே சிந்திய ரத்தம் மேலே கரும் புகாரா அல்லது துப்பாக்கியுடன் புகை மண்டலத்தில் தோன்றும் Tank கா வென பார்க்க பார்க்க கற்பனையை தூண்டி பல கதை பேசும் அட்டைப்படம் “முடிவுறாத முகாரிக்கு” முற்று முழுதாக பொருந்துவதாக அமைந்துவிட்டது என்றார்.

செ.சத்தியமூர்த்தி , மு.கோவிந்தராஜன் ,செ.பாஸ்கரன்


செ.சத்தியமூர்த்தி 

அடுத்து வந்தவர் Dr.கலா ஜீவகுமார் பாஸ்கரனின் கவிதைகளை அப்பப்போ வாசித்தும் வானொலியில் கேட்டு ரசித்தும் பாஸ்கரனுக்கு தனது கருத்தை கூறி வருபவர். மேடையில் கருத்தை கூற தன்னை அழைத்ததும் தனக்கு வயிற்ரை கலக்கியது என்றவர் தனது கருத்தை மிக அழகாகவும் நயம்படவும் எடுத்துக் கூறினார். “மெல்லிழையாள் நினைவு பதிகிறது” என்ற கவிதையின் நயம் பற்றி பேசினார். வன்னி மண்ணையும் அதில் வாழ்ந்த காதல் ஜோடியையும் கண்முன்னால் நிறுத்தியிருக்கின்றார் கவிஞர். யதார்த்தமான மன உணர்வுகளை பதிந்தவர், அவர்களின் மனதில் உள்ள ஆசைகளையும் காதலையும் தியாகம் செய்து வாழவேண்டிய நிலை பற்றியும் பேசியிருக்கிறார் இது நாம் பார்த்த வாழ்க்கையை படம் பிடித்திருக்கிறது. அநேகமான கவிதைகள் காதலில் தொடங்கினாலும் மண்ணிலே முடிகின்றது. என்று ரசனையாக குறிப்பிட்டார்.
திரு திருநந்தகுமார் 

டுத்து ஊடகவியலாளரான கானா பிரபா வானொலியில் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் நிகழ்ச்சியை நடாத்தி அனுபவப்பட்ட இளைஞன் இவர் தேர்ந்த சினிமா இசை ரசிகர் இளையராஜா இசைப்பிரியர் வானொலியில் இசை உலகு தொட்டு தொழில் நுட்பம் என பலதையும் கையாளும் திறமைசாலி இவர் “மனம் ஏங்குது” என்ற கவிதையை எடுத்து நயம் கூறும்போது அருமையான பாடல் இசையில் பாடுவதற்கு பொருந்தி வருகின்றது. இதில் பல கவிதைகள் இசை அமைத்து பாடக்கூடியவைகள் அவை இசை வடிவு பெறவேண்டும் என தனது கருத்தைக் மிக மிக சுருக்கமாக கூறி அமர்ந்து விட்டார். வேறுசிலர் அதிக நேரத்தை எடுத்து விட்டதால் தனது நேரத்தைக் குறைத்து நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை உணர்த்தினார். நன்றாக பேசிய பிரபா சிலநிமிடம் அதிகமாக பேசவில்லையே என்பது எனது குறை மட்டுமல்ல பலரின் விருப்பமும் அப்படியே இருந்தது.
மு.கோவிந்தராஜன் ,செ.பாஸ்கரன்

என் எண்ணத்திலே “முடிவுறாத முகாரி” கவிதைத் தொகுப்பில் பாஸ்கரனின் மென்மையான காதல் உணர்வுள்ள கவிதைகள் இன்பமான உணர்வுகளை இறுக அணைக்கும் மோகமூட்டும் கவிதைகள் பற்றி கானா பிரபா பேச நினைத்திருப்பார்  ஒரு சமயம் நேரம் பற்றாமையே காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் அன்று பேசியவர்களில் பெண்களே அதிகமானோர் அவ்வாறிருந்தும் காதல் கவிதை பற்றி பேசாததற்கு காரணம் என்னவோ ? நாணமா? அல்லது ஒரு பெண் ஆண் எழுதிய காதல் கவிதையை மேடையில் பேச மற்றவர் என்ன நினைப்பார்கள் என்ற அச்சமா?

அடுத்துப் பேசிய கொன்சிலா ஜெரோம் அழகாக பேசும் வல்லமை படைத்தவர் அவர் “நெருப்பின் கனல்” என்ற கவிதையை நயம்பட உரைத்தார். பெண்ணின் உள்ளக் குமுறலை ஒரு ஆண் கவிஞரால் இவ்வளவு உணர்வோடு படைக்க முடியுமென்றால் அது பாஸ்கரனாகத்தான் இருக்கும். பெண்களுக்கு சமூகத்தில் இழைக்கப்படும் அநீதிகள், அவர்களுக்கு ஏற்படும் வலிகள் அதிலும் துணை இல்லாத பெண்கள் என்றால் அவர்களுக்கு நடக்கும் துயரம் என்பதை எப்படி எப்படி எல்லாம் வடித்திருக்கிறார் இந்தக்கவிஞன் என்று பல உதாரணங்களோடு மிக அழகாக எடுத்துரைத்தார்.

திரு.ம.தனபாலசிங்கம் 
அவரை நிகழ்ச்சி முடிந்தபின் சந்தித்து பேசியபோது அழகாக பேசினீர்கள் என்றேன் அதற்கு அவர் தனது தந்தையார் கடற்கரையில் தன்னை நிறுத்தி கடல் அலைகளைப் பார்த்துக்கொண்டு பேசு என பயிற்சி அழளித்ததாக கூறினார். எப்பொழுது மேடை ஏறும் போதும் தனக்கு அந்த ஞாபகம் வரும் என்றார். தந்தையின் நம்பிக்கை வீண்போகவில்லை.

இறுதியாக பிரபல எழுத்தாளர் ரஞ்சகுமார் நீண்ட பெரிய விமர்சனத்தை வழங்கினார். இரண்டாவது வரியில் அமர்ந்திருந்த எனக்கு எதுவும் கேட்கவில்லை. இடையிடையே கேட்கும் பின் கேட்காது.  ஒலிபெருக்கியை குறை கூறுவதா அல்லது அதை சரியாக பாவிக்காத ரஞ்சகுமாரை குறை கூறுவதா. முன்னால் இருந்தவர்களும் மேடையில் இருந்தவர்களும் பின்பு கூறியது ஒரு ஆழமான விமர்சனத்தை ரஞ்சகுமார் முவைத்தார் என்று . சபைக்கு கேட்காமல் போனது கவலைக்குரியதே.
நயப்புரை அரங்கு 

கவிஞர் பாஸ்கரன் ஏற்புரை வழங்கும்போது எல்லோருக்கும் நன்றி கூறியதுடன் குறிப்பாக முன்னுரை தந்த ஈழத்துக் கவிஞர் மு.பொ அவர்களுக்கும் கவிஞர் அம்பி அவர்களுக்கும் மிகப்பெரிய நன்றி என்றார். ரஞ்சகுமார் குறிப்பிட்ட “ புத்தக வெளியீட்டின் போது ஒரு பெரிய சபையில் விமர்சனம் செய்வது பொருந்தாது” என்ற கருத்தில் தான் மாறுபட்ட கருத்தை கொண்டுள்ளதாகவும் நூல்கள் வெளியிடும் போது அங்கேயே விமர்சிக்கப்பட வேண்டும் அதுதான் இலக்கியம் சிறக்க சரியான வழி என்றும். எழுத்தாளன் தான் காண்கின்ற அநீதிகளை விருப்பு வெறுப்பின்றி சொல்லவேண்டும் என்றும் மற்றவர்களுக்கு தலை ஆட்டி எழுதுகின்ற எழுத்தில் உண்மை இருக்காது அது யாருக்கும் உதவாததாகத்தான் இருக்கும் என்றும் குறிப்பிட்டார். 
“தமிழ்முரசுஅவுஸ்ரேலியாவின்” முதல் வெளியீடு இது என்றும் இன்னும் பல வெளியீடுகள் இதன் மூலம் இடம்பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

கவிஞர் பாமதி 

அருமையான ஒரு நூல் வெளியீடு பல கவிதைகள் இளமை தொட்டு பாஸ்கரனின் வாழ்வு ஓட்டத்திலே எழுதப்பட்டவை. விடுதலையோடு இணைந்த செயற்பாடு அதனால் ஏற்பட்ட அனுபவம் அத்தனையும் கவிதையாக உருப்பெற்றுள்ளது. பல மறக்கமுடியாத வடுக்கள் கவிஞனைப் பாதித்துள்ளது. வரும்கால சந்ததிக்கு எமது நாட்டிலே எம்மவருக்கு நடந்த கொடுமைகளை ஆவணப் படுத்தும் நூலாகவும் “முடிவுறாத முகாரி”அமைந்துள்ளது.

இந்தக் கவிதைகள் நூலுருப்பெறவேண்டும் என உழைத்தவர் பாஸ்கரனின் மனைவி சாந்தி “There is always a women behind the man” என்பது வாழ்க்கையின் வெற்றிக்கு வாழ்க்கைத் துணையின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றது. வாழ்க்கைத் துணையே தோழியாக ரசிகையாக கிடைக்கப்பெற்ற பாக்கியசாலி செ.பாஸ்கரன் மேலும் பலவற்றையும் சாதித்து வெற்றி நடை போடுவார் என எதிர் பார்க்கலாம்.

Dr.கலா ஜீவன் 
கவிஞர் சக்தி ( யசோ பத்மநாதன் )


திரு குணசிங்கம் 

திரு.கானா பிரபா 

திருமதி தர்மா சந்திரதாஸ் 

திருமதி கொன்சிலா ஜெரோம் 

எழுத்தாளர் ரஞ்சகுமார்

கவிஞர் செ.பாஸ்கரன்









நன்றி: தமிழ் முரசு அவுஸ்திரேலியா.

Monday, October 19, 2015

இது தாங்க நான் பேசினது....


         ”நேற்று; இன்று; நாளை” oz தமிழ் வரலாற்று ஆவணம்


ஒரு கவிதைக் குழந்தை இங்கு பிறந்திருக்கிறது. அதனைக் கொண்டாடும் முகமாக நாங்கள் எல்லோரும் இங்கு கூடி இருக்கிறோம். உங்கள் எல்லோருக்கும் என் அன்பார்ந்த பணிவான வணக்கம்.

இப்படி ஒரு இடத்தில் நிற்பதற்குப் பொதுவாக 2 ,3 தகுதிகள் வேண்டும். 1. தலைக்குள்ளே ஏதேனும் இருக்க வேண்டும். 2. எதைச் சொல்ல நினைக்கிறோமோ அதை சிறப்பாகச் சொல்லுகின்ற மேடை ஆளுமை இருக்க வேண்டும். 3. உங்கள் நிமிடத் துளிகளுக்கு பயனுள்ளதாக ஒரு நியாயத்தை செய்யவேண்டும். மூன்றும்  இல்லாத நான் உங்கள் 3 நிமிடங்களைத் திருடிக் கொள்ளப் போகிறேன். அதற்கு முதலிலே என்னையும் என் பொருட்டு பாஸ்கரனையும் மன்னித்துக் கொள்ளுங்கள்.

சரி விஷயத்துக்கு வாறன்.

பெண்ணைப்பற்றி அவர் எழுதிய கவிதை ஒன்றுபற்றி இன்று பேசலாம் என்று இருக்கிறேன்.

அதுக்கு முதல் தமிழ் நாட்டில பெண்ண எப்பிடிப் பாத்திருக்கினம் இலங்கையில பெண்ணை எப்பிடிப் பார்த்திருக்கினம் எண்டு பாக்கிறது பாஸ்கரன்ர கவிதையை விளங்கிக் கொள்ளுறதுக்கு கட்டாயம் தேவை எண்டு நினைக்கிறன்.

தமிழ் நாட்டில பெண்ண பார்த்த மாதிரி இலங்கையில பெண்ணை பாக்கயில்ல.
14ம் நூற்றாண்டளவில காளமேகப் புலவர் பாடின ஒரு பாட்டொண்டு பற்றிச் சொல்ல வேணும்.

“இந்திரையை மார்பில் வைத்தான்;ஈசன் உமையை இடத்து
அந்திபகல் அமைத்தான்; அம்புயத்தோன் – கந்தம் மிகு
வெந்தாமரை மயிலை வேண்டி வைத்தான் நாவில்; உலகு
உண்டு உமிழ்ந்த தாமரைக் கண்ணோன்”

என்னெண்டா, உலகத்தையே சாப்பிட்டுட்டு கக்கின தாமரைக் கண்ணன் திருமால் இருக்கிறார் எல்லோ? அவர் தன் மனைவி திருமகளை நெஞ்சில / இதயத்தில இருத்திட்டார். சிவபெருமான் தன்ர உடம்பில பாதியையே தன்ர பொம்பிளைக்குக் குடுத்திட்டார். பிரம்மன் என்னடா எண்டா வெண்தாமரைக்கு மேல மயிலப்போல இருக்கிற கலைமகளுக்குத் தன்ர நாக்கில இடம் குடுத்திட்டாராம். அது தான் பாட்டின்ர பொருள்.

அவர் சொல்லாத ஒரு விஷயமும் இருக்கு. அது அடுத்த ஜெனரேசனை பற்றினது. மேல சொன்ன ஆக்கள் பெரிய ஆக்கள். படைத்தல் காத்தல் அழித்தல் வேலையைச் செய்யிறவை. அவை என்னெண்டா தங்கட உடம்பிலயே இடம் குடுத்திட்டினம். ஆனா பிறகு வந்த அவையின்ர அடுத்த சந்ததி; முருகன், பிள்ளையார், கண்ணன் இருக்கினமெல்லோ அவை அப்பிடி எல்லாம் குடுக்க ஏலாது எண்டுட்டினம். முருகன்  எனக்கு வலது பக்கம் ஒண்டு இடது பக்கம் ஒண்டு வேணும் எண்டிட்டார். கிருஷ்னர் நப்பின்னை, ராதை எல்லாம் ஸ்பெஷலா இருந்தாலும் நான் கூத்தடிக்க எனக்கு கன பேர் வேணும் எண்டிட்டார். பாவம் பிள்லையார் ஓடி ஆடித் திரிய முடியேல்ல. அவர் ஆத்தங்கரை ஓரமா இருந்து கொண்டு ஆஅராவது அம்மா மாதிரி (பார்வதி) ஒரு பொம்பிளயக் கொண்டு வாங்கோ நான் இப்பிடி ஒரு கதையா இருக்கிறன் எண்டிட்டார்.

இத நாங்கள் எங்கட அன்றாட வாழ்க்கையிலயும் பொருத்திப் பாக்கலாம்.

தமிழகத்தில அதுக்குப் பிறகு பாரதி வந்தார் பெரியார் வந்தார். இப்ப அண்மையில ஆனந்த விகடனில கூட நல்ல ஒரு கவிதை பெண்ணைப்பற்றி வந்திருந்தது.

இப்ப இணைய வெளியள்ளில பெண்விடுதலையைபற்றி நல்ல சூடான வாதப் பிரதி வாதங்கள் நடந்துகொண்டிருக்கு. நான் அங்கை எல்லாம் போகையில்ல. சரி பிழை எல்லாம் அவரவர் நியாயங்களுக்கு உட்பட்ட்து தானே!
......

இப்பிடி ஒரு வரலாறு பெண்சார்ந்து இலங்கை வரலாற்றில இருக்கா எண்டு தேடிப் பாத்தன். உண்மையில அப்பிடி எங்களிட்ட கனக்க இல்லை. அல்லாட்டிக்கு எனக்கு தெரியேல்ல.

இந்த போஸ்ட்காட் எண்டு ஒரு காட் முந்தி ஒருகாலத்தில இருந்தது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். ( தந்தி மாதிரி அது ஒரு விஷேஷமான சாமான். இது 2ஐயும் பற்றியே கனக்க கதைக்கலாம். அது எங்கட வாழ்க்கையோட எப்பிடி இணைஞ்சிருந்தது, தபால்காரர் எப்பிடி குடும்ப அங்கத்தவரா இருந்தார்.. ஈபிடி எல்லாம்) அப்படிப் போஸ்ட்காட்டுகளில கவிஞர்மார் கவிதைகளால கடிதம் எழுதி அனுப்பி இருக்கினம். கொழும்பில மகாகவி இருந்தார். மட்டக்களப்பில நீலாவாணன் இருந்தார். யாழ்ப்பாணத்தில முருகையன் இருந்தார். இவைக்குள்ள நல்ல நட்பிருந்தது. இவை கதைக்கிறது கவிதைகளாலயும் போஸ்ட்காட்டாலயும் தான்.

அப்பிடி 1958ம் ஆண்டு நீலாவாணனுக்கு மகாகவி ஒரு போஸ்ட்காட் அனுப்பி இருக்கிறார்.

“காடும் நகரும் கடந்து கடுகதியில் ஓடுவதும்;
பொங்கும் உவகையிலே பாடுவதும் - எல்லாம் இனிதே!
எனினும் அருகொருத்தி இல்லாக் குறையொன்றெமக்கு”

எண்டு யாழ்ப்பாணத்தில மனைவியை விட்டிட்டு கொழும்பில இருந்து எழுதின துண்டொண்டு கிட்டடியில கிடைச்சுது. இத விட அம்மாமாரைப் பற்றி; அவையின்ர சமையலப் பற்றி பாடி இருக்கினம் கனக்க.

‘தட்டைக் கரண்டி பிடிக்கிறாள்
சரியாய் பெரிய நிலவப் போல
வட்ட்த் தோசை சுடுகிறாள்
வடிவாய் தின்பீர் என்கிறாள்” எண்டும்

”அன்னை பழஞ்சோற்றுண்டி
கிழங்கொடு பிசைந்து
வழங்கலை நினைத்தால்
வாயூறாதோ? எண்டும் பாடி இருக்கினம் கனக்க.

“சொந்தத்தில கார், கொழும்பிற் காணி
சோக்கான வீடு,வயல்,கேணி
இவ்வளவும் கொண்டு வரின்
இக்கணமே வாணியின் பாற்
சிந்தை இழப்பான் தண்டபாணி” எண்டு ஒரு குறும்பா கூட வந்திருக்கு.

ஆனால் ஒரு பெண்ணை தனக்கு சமனா மதிச்சு அவளின்ர உணர்வுகளை; நியாய அநியாயங்கள; சரி பிழையள; நன்மை தீமையல; ஒரு நியாயமான வழிகாட்டல தந்த மாதிரி குறிப்பிடத் தக்க பாட்டுகள் எதுவும் வந்த்தா எனக்கு நினைவில்லை.

அல்லது எனக்குத் தெரியேல்ல.

ஆனால்,ஈழத்துப்பொப்பிளயள் எழுதி இருக்கினம்.போர்க் காலத்தில ஒரு வாழ்க்கை முறையை வாழ்ந்து காட்டிச்சினம் அது வேற.

போர் காலத்தைக் கடந்து வெளியில வந்தா அதாவது வெளிநாடெண்டு வந்தா ”குடும்ப வாழ்க்கைக்குள் ஒரு பெண்ணுக்கான சுதந்திரம்” நாங்கள் நாங்களே எங்களைச் சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.

விதை மாதிரி ஒரு நடந்த சம்பவம் ஒன்றை மட்டும் சொல்லுறன்.கல்லூரிக்கு போற மாணவி. தான் தமிழ் பையன கல்யானம் கட்டமாட்டன் எண்டு சொல்லிப் போட்டா. ஏனெண்டு கேட்டா  பிள்ல சொல்லுது,’ இஞ்ச இருக்கிற ஒரு டெசபிளிட்டி ஆளே தனக்கான எல்லா வேலையையும் தானே செய்யிறார். ஏன் ஒரு தமிழ் பையனால தனக்கான ஒரு நேரத் தேத்தண்னியக் கூட போடத் தெரியுதில்ல?

நியாயமான கேள்வி தானே? அதோட,புலம்பெயர்ந்த நாட்டில தமிழ் பெண்கள் கொஞ்சம் எழுதி இருக்கினம். ஆழியாழ் இங்கு இருக்கிறா.’ வட்ட வீடொண்று வேண்டும்; வானத்து வளைவுடன் “எண்டு சொன்ன கவிதைக்குச் சொந்தக் காரி. பாமதி இருக்கிறா.”விழுந்து கிடந்தது காணும் எழும்பு” எண்டு பெண்ணை எழுப்பி விடுற கவிதையள் அவவின்ர.

இந்த ஒரு பின்னணியில தான் நான் பாஸ்கரன்ர கவிதையளப் பார்க்க விரும்பிறன்.

2டே பிள்ளைகள். இரண்டும் பெண்பிள்ளைகள். காதலித்து மணமுடித்த மனைவி. இந்தக் கவிதைக் குழந்தைக்கும் அவர் மனைவியே காரணதாரி என்று அவரது முகவுரை சொல்கிறது. எனவே பெண்களால் சூழப்பட்டவர் மாத்திரமில்லை; பெண்களால் அவர் திறமைகள் இன்று எங்கள் முன் நிறுத்தப்பட்டிருக்கிறது  என்றும் சொல்ல்லாம்.

அதனால் அவர் பெண்ணைப்பற்றி என்ன நினைக்கிறார்; எப்படி அவர்களை அவர் பார்க்கிறார் என்ற பார்வை எனக்கு முக்கியமாகப் பட்டது.


சற்றே பெரிய கவிதை. 3 பரம்பரை சார்ந்த்து. இதனுடய கருப்பொருள் ஒரு பெரிய விஷயம். புலம்பெயர்ந்த நாட்டில் பெண்சார்பாக குடும்பங்களுக்குள் நிகழும் மாற்றங்களை சிந்தனைப்புரட்சியை சமூக பார்வைகளைச் சொல்லுகிற விதத்தில்; அதனோடு கவிஞன் தோழமையோடும் ஆதரவோடும்  பயணிக்கும் வகையில்  இந்தக் கவிதையை ஒரு ‘ஒஸ் ரமிழ் வரலாற்று ஆவணம்” என்று சொல்வேன்.

( இது தான் கவிதை!

 இந்த அழகுக் கவிதைக்கு நான் பொருள் விரித்து எந்த ஒரு விளக்கமும் நயமும் சொல்லத் தேவையே இல்லை.எளிய சொல்லும் சந்தமும் கருத்தும் காதினையும் கருத்தினையும் காந்தம் போல கவர்ந்திடவல்லவை.

இந்தத் தொகுதியின் ஒரு துளி தான் நான் உங்களோடு பகிர்ந்து கொண்டது.. இப்புத்தகத்தின் முழுக் கவிதைகளையும் படித்து முடித்தபின் ‘இவரொரு மனிதாபிமானமுள்ள நல்ல மனிதன்” என்றொரு படிமம் உங்களுக்குள் அடையாளம் பெறும்.அது தான் இந்தப் புத்தகத்தின் வெற்றியும் கூட.

கவிதைப்பிரியன், தமிழ்முரசு அவுஸ்திரேலியா என்ற வலைத்தளத்துக்குச் சொந்தக்காரன், வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளன், தேர்ந்த நாடகக் கலைஞன், எல்லாவற்றுக்கும் மேலாக மனிதாபிமானம் உள்ள மனிதன்.

விழா நாயகனுக்கும் அவர் தன் குடும்பத்தாருக்கும் என் அன்பினையும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறி, என்னையும் ஒரு பொருட்டாக மதித்து அழைத்தமைக்கு நன்றியையும் கூறி அத்துடன் உங்கள் பெறுமதி மிக்க 3 நிமிட்த் துளிகளைத் தந்து என்னைத் தாங்கிக் கொண்டமைக்கு உங்களுக்கும் நன்றியைக் கூறி விடைபெறுகின்றேன். - இது நான் சொல்லாது விட்ட பகுதி )

இதுக்கே 3 நிமிஷத்துக்கு மேல போயிட்டுது. பிறகு கவிதைய வாசிக்க வெளிக்கிட்டு.... அது ஏற்கனவே ஒரு பட்டிமன்றக் கவிதை. அதுக்கே 3 நிமிஷத்துக்கு மேல வேணும்....

இந்தக் களபரத்துக்குள்ள இந்தக் கவிதை ஏன் முக்கியம் பெறுகிறது என்ற முக்கியமான பகுதியையும் தவற விட்டு.....( ஒரு ஆணின் பார்வையில்; புலம்பெயர் நாட்டில் 3 பரம்பரைகளுக்குள் ஏற்பட்ட பெண் சம்பந்தப்பட்டு; ஏற்பட்ட மாற்றங்கள எளிமையான தமிழில் சொல்லிய திறத்திலும் அதன் வரலாற்றுப் பெறுமதியிலும் இக்கவிதையைத் தாண்டி எவரும் போக முடியாது. ஒஸ்தமிழ் அவுஸ்திரேலியாவில் தமிழர்களுக்கிடையே பண்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள பற்றி அறிய வேணும் எண்டால் இக் கவிதைக்குள் பல முக்கியமான கருப்பொருள்கள் இருக்கின்றன )   வந்தமர்ந்தேன்.

கவிதையை தனியாய் அடுத்த பதிவில் போடுகிறேன்.

சட்டகத்துக்குள் நிற்காத சுயங்கள்!.................

கற்றுக் கொண்ட பாடங்கள்;

1. நேரத்தி்ற்குள் நிற்கவேண்டும். முடியவில்லை என்றால் மறுக்க வேண்டும். அது அந்த மனிதருக்கு நான் செய்யும் மிகப் பெரிய உபகாரமாக இருக்கும்.

2. விழாவின் நோக்கம் என்ன என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

3. என்னால் பேப்பரைப் பார்க்காமல் சுயமாகப் பேச முடியும் என்ற நம்பிக்கையைத் தந்தது இந்த மேடை.

4. என்னை ரசிக்கவும் கேட்கவும் கிரகித்து சகித்துக் கொள்ளவும் ஆட்கள் இருந்தார்கள். (நெஞ்சை நிறத்த ஒரு விஷயம் இது.இதைப் பதியாமல் எல்லால் அகல இயலாது. கோவிந்தராஜன் என்ற ஐயா, இவரை அன்று தான் முதன் முதலில் கண்டேன். பஸ்கரனின் ஆத்மார்த்த மதிப்பிற்குரிய ஒருவர். முதல் பிரதி வாங்க அழைக்கப் பாட்டவர். பாஸ்கரனே அவரைப் பற்றி சிறப்பாக மேலையில் சிலாகித்து பெருமை கொண்டவர். நான் மேடையை விட்டு இரங்கிய கையோடு என்னை நெருங்கி, பெண்னைப் பற்றிய தன் அபிப்பிராயத்தை என்னோடு பகிர்ந்து கொண்டார். )

எப்படி ஒரு பெண் தன் கணவனால் பார்க்கப் படவேண்டும் என்பது பற்றியும் ஒரு ஆண் தன் குடும்பத் தலைவியால் எப்படிப்  பார்க்கப்பட வேண்டும் என்பது பற்றி சொன்னார்.”ஆண் தன் மகளை எப்படி நேசிக்கிறாரோ அது மாதிரி தன் மனைவியை நேசிக்க வேண்டும். பெண் எப்படி தன் மகனை நேசிக்கிறாரோ அது மாதிரி தன் கணவனை நேசிக்க வேண்டும்”

5.பிரபலமான ஒருவர். பெயர் சொல்ல விரும்பவில்லை. எனக்கு அவரை முன் பின் தெரியாது.தன்னை அறிமுகப்படுத்திய போது வியந்து போனேன். தன் அடையாள அட்டையையும் தந்து,  “இன்றய நிகழ்வில் உங்களுடய பேச்சுத் தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது” என்றார். மிக இரக்கமுடயவராக இருந்திருக்க வேண்டும். அவர் சொன்னது  சரியோ பிழையோ நக்கலோ தெரியவில்லை. ஆனால் அந்த நேரம் எனக்கு அது ஆறுதலூட்டும் மருந்துச் சொல்லாக இருந்தது என்பதை கண்டிப்பாக நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

இது தாங்க நடந்தது.........

Saturday, October 17, 2015

நான் சொதப்பின கதை....



17.10.15 மாலை 5.00 மணிக்கு பாஸ்கரனின் கவிதை நூல் வெளியீட்டு விழா. கவிதைத் தொகுப்பின் பெயர் “முடிவுறாத முகாரி”

இப்போது ஒரு மணி நேரத்துக்கு முன்பாகத் தான் நிகழ்ச்சி முடிந்தது. வந்த கையோடு இங்கு உட்கார்ந்திருக்கிறேன்.

மனசுக்கு ஒரு விடிகால் வேண்டித்தான் இருக்கு! கொட்ட இது நல்ல தோதான இடம்! நன்றி மக்காள்!
......................

பாஸ்கரன்;

என் நல்ல நண்பன். நேர்மையான மனிதன். உண்மைக்கு எப்போதும் பக்கமாய் நிற்பவர். தனக்குச் சரியெனப்படுவதை துணிந்து சொல்ல தயங்காத உள்ளத்துக் காரன்.

‘தமிழ்முரசு அவுஸ்திரேலியா’ என்ற இணையத்தளத்தின் ஸ்தாபகன்; ஊடகவியலாளர்; நிகழ்ச்சித் தயாரிப்பாளர், நாடக நெறியாழ்கையிலும் நடிப்பிலும் நாடகப்பிரதி ஆக்கத்திலும் தன் திறமையின் பெரும்பங்கு நேரத்தை கொடுத்து ஒஸ்தமிழ் நாடகத்துறைக்கு ஆரம்பகாலத்தில் இருந்து தன் ஆழமான பங்களிப்பைப் பதித்திருப்பவர்.

எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல மனிதன். அன்பு, பண்பு, எளிமை, ஓர்மம் எல்லாம் கொண்டிருப்பவர்.

அவரது கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று.

இந்த மனிதன் தன் கவிதை ஒன்று பற்றி 3 நிமிடத் துளிகளுக்குள் நயப்புரை வழங்குமாறு கேட்டால் மறுக்க முடியுமா?

அங்கு தான் எனக்கு நாக்கில் சனி பகவான் குடியமர்ந்து விட்டார். அது தெரியாமல் ஓ.. அதுக்கென்ன, செய்கிறேனே என்று ஒரு மாதத்திற்கு முன்னரேயே சொல்லி விட்டேன்.

இன்று புரட்டாசிச் சனி கடசி நாள் என்றதையாவது யோசிச்சிருக்க வேணும் நான். ஆங்கிலேயரின் தின சோதிடக் குறிப்பில் இன்று புதிய கருமங்கள் ஆற்றுவதைத் தவிர்த்தல் நலம் என்ற கூற்றையாவது கொஞ்சம் கொன்சிடர் பண்ணி இருக்கலாம்.

நானும் புத்தகத்தை நன்றாகப் படித்து இந்தக் கவிதையை எடுக்கலாம் அந்தக்கவிதையை எடுக்கலாம் என்றெல்லாம் வலு சிரத்தையாகக் குறிப்பெடுத்துக் கொண்டு 2, 3, தரம் இது வேண்டாம் அது அது வேண்டாம் இது என்றெல்லாம் மாற்றி நேற்றைக்கு முதல் நாள் வேலையில் இருந்த மனிதருக்கு தொலைபேசியில் தொல்லை பண்ணி பெண் சம்பந்தப்பட்ட கவிதையை வேறு யாரும் நயப்புக்காக எடுத்திருக்கிறார்களா என்று கேட்டு இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்ட பின் அந்தக் கவிதையைப் பற்றிய நயப்புரையைச் செய்வதாகத் தீர்மானித்துக் கொண்டேன்.

இப்போதே பாருங்களேன் சொல்ல வேண்டிய விஷயத்துக்கு வராமல் சுத்தி சுத்திக் கொண்டே நிற்கிறேனே!

இதைத் தான் அங்கேயும் செய்தேன்.தலைமை தாங்கியவர் 2 தரம் வந்து விஷயத்துக்கு வாங்கோ விஷயத்துக்கு வாங்கோ என்று 2 தரம் வந்து விட்டார் என்றால் பாருங்களேன்.

என்ன ஒரு வெக்கக் கேடு என்பதற்கும் அப்பால் அந்த நல்ல மனிதனின் நிகழ்ச்சியை இப்படி நாசம் பண்ணி இருக்கக் கூடாது என்ற சுய பச்சாதாபம் தான் என்னைக் குடைந்து கொண்டே இருக்கிறது.

வரும் போது குடும்பத்தார்  தந்த நேர்மையான விமர்சனம் ஒன்று.

எல்லோரும் மெளனமாக வந்தது தான். ’கொடுமையான மெளனம்’ என்பதன் பரிபூரண அர்த்தத்தை விளங்கிக் கொண்ட கணம் / தருணம் அது!

கொஞ்ச நேரத்தால அம்மா மட்டும் மெல்ல முணுமுணுத்தா. உனக்கு நேரம் வேணுமெண்டா முதலில கேட்டெல்லோ இருக்க வேணும்? கவிதையப் பற்றிக் கதைக்கச் சொன்னா கவிதையை பற்றி 3 நிமிசம் கதைக்கிறது தானே!

என்ன பண்ணுறது நம்மால முடியாமல் போச்சே!

என் இனிய தோழி கீதா சொல்லும் விமர்சனமும் இது தான்.
”ஒரு விஷயம் என்றால் ஒரு விஷயத்துக்குள் நிற்கமுடியாமல் நிற்கிறீர்கள்.”

நான் என்ன செய்யட்டும்?

சொரி பாஸ்கரன். I'm truly sorry!!


( பாருங்களேன் இந்த ஒரு விஷயத்தச் சொல்லுறதே ஒரு பதிவின்ர நீளம் வந்திட்டுது.  இனி நான் எங்க விஷயத்துக்குப் போறது? கதச்ச விஷயம் அடுத்த பதிவில தொடரும். கட்டாயம் எனக்கு உங்கட விமர்சனம் வேண்டும். இதுக்கில்ல; அதுக்கு. :)

நன்றி மக்காள். விடிய வேலை. வேலையால வந்து அதப்பற்றிச் சொல்லுறன்.






Monday, October 12, 2015

தமயந்தி



தமிழ் சினிமாவிலே ஒரு பாடல் உண்டு. பெண்ணை தமிழகத்துக்கு தமிழின் எழிலோடும் அதன் பாரம்பரியப் பெருமைகளோடும்  வருணிக்கின்றதான ஒரு பாடல்.

கவிஞர் வாலி இயற்றிக் காட்டிய அற்புதங்களில் இந்தப் பாடலும் ஒன்று. இப்பாடலுக்கு குரலால் உயிர் கொடுத்தவர் டி.எம். சௌந்தரராஜன். இசையால் அதனை இன்னொரு தளத்துக்கு உயர்த்தி மெருகேற்றியவர் எம்.எஸ். விஸ்வநாதன். பூவா தலையா என்ற திரைப்படத்தில் இப்பாடல் பிறந்த ஆண்டு 1969.

சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பாகப் பிறந்தது.

பாடல் இது தான்.

மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே
மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே - இவை
மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே
உன்னை தமிழகம் என்றேனே

மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே

காஞ்சித் தலைவன் கோவில் சிலை தான் கண்மணியே உன் பொன்னுடலோ
குடந்தையில் பாயும் காவிரி அலை தான் காதலியே உன் பூங்குழலோ
சேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான் சேயிழையே உன் செவ்விதழோ?
தூத்துக் குடியின் முத்துக் குவியல் திருமகளே உன் புன்னகையோ?

மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே

பொதிகை மலையில் புறப்படும் தென்றல் இளையவளே உன் நடையழகோ?
பொதிகை மலையில் புறப்படும் தென்றல் இளையவளே உன் நடையழகோ?
புதுவை நகரில் புரட்சிக் கவிஞன் குயிலோசை உன் வாய் மொழியோ?
கோவையில் விளையும் பருத்தியில் வளரும் நூலிழைதான் உன் இடையழகோ?
குமரியில் காணும் கதிரவன் உதயம் குலமகளே உன் வடிவழகோ?
இவை யாவும் ஒன்றாய் தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே
உன்னை தமிழகம் என்றேனே

மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே.



என்ன ஒரு அற்புதமான பாடல். பழங் கால இலக்கியங்களுக்கு நிகராக வைத்து எண்னத்தக்க  இப்பாடலை அண்மையில் கேட்ட போது நினைவுக்கு வந்தது நளவெண்பா நாயகி தமயந்தி.

அவள் நடந்து வருகிறாள்.

“நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா - வேற்படையும்
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்
ஆளுமே பெண்மை அரசு”

பாடல் இது தான்.

இதனை நான் உடைத்துப் பொருள் கூற விரும்பவில்லை. அவரவர் உங்களுக்கேற்ற மாதிரியாக உடைத்து உண்டு களியுங்கள்.

முற்றிய மாங்காயை மரத்திலே இருந்து உடனே பறித்து கல்லிலே குற்றி சாப்பிடுவது மாதிரி....

சுடச் சுடப் பதமாக வறுத்த நிலக்கடலையை நாமே உடைத்து அதற்குள்ளே இருக்கும் பருப்பின் மெல்லிய கோதை கசக்கி ஊதி அகற்றியபின் பருப்பை வாய்க்குள்ளே போட்டுக்கொள்வது மாதிரி....

அவரவர்க்கே உரித்தான சுவைகள்....

குழந்தைகள் மண்ணில் சோறுகறி சமைத்து ஆர்வம் கண்ணில் மின்ன கொண்டோடி வந்து தரும் போது, நீங்கள் அதனைச் சுவைப்பதாகப் பாவனை காட்டி விட்டால் தோன்றுமே அந்த முகத்தில் ஒரு சந்தோஷமும் பெருமிதமுமான ஒரு மின்னல்! அதைக் காணும் ஒரு சந்தோஷ தருணம்  மாதிரி....

ஒன்றை நீங்கள் உணர்வீர்கள்.

இந்தச் சுவைக்கு ஏது ஈடு இணை!

Friday, October 9, 2015

தமிழகத்துக் காளமேகமும் ஈழத்துக் கவி வெள்ளமும்


தமிழகத்துக் கவிப்பரப்பில் காள மேகப்புலவரின் மேல் ஒரு விதமான ஈர்ப்பு எப்போதும் எனக்குண்டு.

இந்த கவிக்கிறுக்கன் ஒரு விதமான சுதந்திரப் போக்கன்! கட்டுமானங்களுக்குள் அகப்படாத ஒரு மனுஷன். பணம் இல்லாத போதும் அதை பகிடியாகவே பார்த்து திரிந்த ஒரு ஆத்மா. கடவுளையே கிண்டலடித்து வாழ்க்கையை சந்தோஷமாகத் தாண்டிப்போன ஒரு தற்துணிச்சல்காரன். தமிழாயுதத்தைக் கையிலேந்தியபடி அது ஒன்றையே தன் முழுச் சொத்தாகவும் கொண்டு இலக்கிய பரப்பில் ஒரு வித திமிரோடு இறுமாந்து திரிந்ததோடு தான் எப்படி பதியப்படுவேன் என்பதை அறிந்து ‘பதிஞ்சிட்டுப் போடா’ என்று சொல்லி விட்டுப் போன சுதந்திரப்புலவன். அந்த வித்துவச் செருக்கு அவனை வாழ்க்கை முழுக்க வழிநடத்தி இருக்கிறது.

அந்த ஒரு இறுமாப்புக்காகவே அம்மனிதனை எனக்கு நிரம்பப் பிடிக்கும். அந்த Guts! அது தான் அந்த மனிதன். ஒரு முறை அதி மதுரக் கவிராயர் இவரிடம் உமக்கு என்ன பெயர் எனக் கேட்கிறார். மனுஷன் உடனே பாட்டிலே எடுத்து விடுகிறார்.

“ இம்மென்னும் முன்னேஎழுநூறும் எண்ணூறும்
அம்மென்றால் ஆயிரம் பாட்டாகாதோ? - சும்மா
இருந்தால் இருந்தேன்; எழுந்தேனாயின்
பெரும் காளமேகம் பிளாய்!”

’....சும்மா தான் இருப்பன். எழும்பினன் எண்டா மழைநீரை ஆவியாக்கி நிறைத்து வைத்திருக்கிற; பொழியத் தயாராக சினைகொண்டிருக்கிற கருமுகில் கூட்டம் பிள்ள” என்று ‘பிளாய்’ என்பதில் ஒரு வித எக்காளம் ஒலிக்க சொல்லுவான். (காளமேகம்- பொழியத் தயாராக இருக்கும் கருமுகில் கூட்டம்) அதில் தான் எத்தனை தன்னம்பிக்கை! பெருமை!! ஒரு வித இறுமாப்பு!

’யாமார்க்கும் குடியல்லோம்’ என்று சொன்ன மாதிரி!
’எங்கள் பெருமான் உனக்கொன்றுரைப்போங் கேள்’ என்று கடவுளுக்கே கட்டளை இட்டது மாதிரி ஒரு வித எழிலான திமிர்!

இப்போ நான் சொல்ல வந்தது என்னவென்றால் இந்த மனிதனைப் போல ஒரு மனிதனை ஈழத்துக் கவிப்பரப்பில் நாம் ஏன் காண முடியவில்லை என்பது தான். எனக்கு எப்போதும் இருக்கிற ஆதங்கம் இது.

சரி அது போகட்டும். இந்த ஆள் தன்னை ஒரு பொழியத் தயாராக இருக்கும் ஒரு கருக்கொண்ட மழைமுகில் கூட்டம் என்று சொல்லி விட்டுப் போனானே ஈழத்தில் ஒரு மழையே பொழிந்து விட்டுப் போயிருக்கிறது என்பதை அண்மையில் காணக் கிட்டியது.

ஈழத்து சோமசுந்தரப் புலவர் காட்டும் மழை வெள்ளம் அது.  கொஞ்சம் கால் நனைப்போம் வாருங்கள்.

“ எஃகிய பஞ்சினைப் போலத் - தமிழ்
எல்லாளமன்னனிருதயம் போல
வெஃகிய வெண்முகிற்கூட்டம் - இந்து
வெண்டிரை மேயவே முந்திடுமன்றே”

எஃகிய- தளர்ந்து பொருமி இருக்கிற, வெஃகிய- வெண்மையான முகில் கூட்டம். தளர்ந்து பொருமி இருக்கிற வெண்பஞ்சினைப் போலவும் எல்லாள (தமிழ் மன்னன்) மன்னனின் இதயத்தினைப் போலவும் வெண்முகில் கூட்டம் கருக்கொண்டு மழை பொழிவதற்காக கடல் நீரைப் பருகி மேலே எழும். (எல்லாளன் துட்டகைமுனுப் போர் மகாவம்சத்தில் தமிழருக்கும் சிங்களவருக்கும் எதிராக நடைபெற்ற முதல் சுதந்திரப் போர் என்பதான ஒரு வரலாற்றுப் படிமம் பலசர்ச்சைகளையும் வாதப்பிரதி வாதங்களையும் புத்திஜீவிகள்  மட்டத்தில் கிளப்பியதை நீங்கள் அறிந்திருக்கக் கூடும்.)

இப்போது வெண்முகில் நீரைப் பருகி கருமுகிலாகி விட்டது. அது உருண்டு திரண்டு பொழியத் தயாராகி விட்டது. அந்தக் கருமுகில் கூட்டம் எப்படி இருக்கிறது தெரியுமா? கற்றறியாதவர்களின் மனம் போலவும்; கடுகண்ணாவை (என்பது இலங்கையில் ஓரிடம். தொடருந்து  மலை ஒன்றை ஊடுருவிச் செல்லும் குகையைக் கொண்ட ஓரிடம்) குகை வழியில் நிறைந்திருக்கிற இருளைப் போலவும்; பொறாமை கொண்டவர்களது மனதைப் போலவும் கறுத்து பெருத்து கர்ப்பமாகி நிற்கிறது அந்தக் கருமுகில் கூட்டம். அந்தப் பாடல் இது தான்.

“ கல்லா தவர் மனம் போல - அன்றிக்
கடுகணைக் குகைவரு கணையிருள் போல
அல்லா தழுக்காறு கொண்டோர் - மனம்
ஆமென வேயிருண்டங்கு சூல் கொண்டே”

இப்போது மின்னல் தெறிக்கிறது. கறுப்பு முகில் கூட்டத்தின் பின்னே மின்னி மின்னி மறைகிறது. கூடவே இடியோசையும் கேட்கிறது. அது எப்படி இருக்கிறது தெரியுமா? அது சூரியனைப் பார்த்து ஒரு நக்கல் சிரிப்புச் சிரித்து போருக்குக் கூப்பிடுவது போல இருக்கிறதாம். ஒருவித எள்ளல் சிரிப்பு மின்னலுக்கும்  போருக்கு அறைகூவல் விடுப்பது இடிமுழக்கத்துக்கும் என்னமாய் பொருந்திப் போகிறது பாருங்கள். அந்தப் பாடல் இது.

“ செங்கதிரோன் தனை யெள்ளி - நின்று
சிரிப்பது போல விடையிடை மின்னி
அங்கவனோடறை கூவி எதிர்த்
தார்ப்பது போல விடித்து முழக்கும்”

இப்போது மேகத்தின் உருவம் சித்தரிக்கப்படுகிறது. திரண்டு நிற்கும் அக் கருமேகம்  எப்படி இருக்கிறது தெரியுமா? அது கையை உடைய மலையைப் போன்ற யானையைப் போலவும் கரும் கற்குன்றைப் போலவும் பெரிய காண்டாமிருகங்களின் கூட்டத்தைப் போலவும் கருமை மிக்க இராவணனுடய பெரிய போர் படையைப் போலவும் திரண்டு நிற்கிறது. இனி பாடலைப் பார்க்க வேண்டாமா?

“கைம்மலை கன்மலை போலப் - பெருங்
காண்டா மிருக நிரைகளைப் போல
மைம்மலி ராவணனேவும் - மூல
மாபலமென்னவும் வந்து குவிந்து”

திரண்டு நிற்கின்ற இந்தக் கருமேகக் கூட்டங்கள் இப்போது மழை பொழியத் தயாராகி விட்டன.அந்த மழை எப்படி இருக்கிறதென்றால்,

” கொடைமடம்படு குமண மன்னவன்
கூறு சித்திரப் புலவ னுக்கருள்
மடை திறந்திடுன்ஹ் கொடைவி தங்கள்போல்
வயிறு ளைந்துமா மழை சொரிந்ததுவே.

மழை சொரிகிறது. அது கொடைக் குணத்திலே சிறந்து விளங்கிய குமணமன்னன் பெருஞ்சித்தனார் என்னும் புலவருக்கு கருணையோடு வழங்கிய தானத்தைப் போல கருமுகில்கள் மழையைப் பொழிகிறது.  புலவனுக்கும் கொடுத்த தானத்தைப் போல மழை! ஒரு மனுஷனுக்கு கற்பனை எப்படி எல்லாம் ஒப்பிடச் சொல்கிறது பாருங்கள்.

இப்போது வானில் இருந்து மழை பூமியை நோக்கிக் கீழிறங்குகிறது. எங்கெங்கெல்லாம் அக் கொடையைப் போன்ற மழை பொழிகிறது என்று பார்க்க வேண்டான்மா? அது இலங்கையில் உள்ள மூன்று பிரதான மலைகளின் மீது வந்து மோதிப் பொழிகிறது. அதிலொன்று சிவனொளிபாதமலை. மற்றது பேதுருதாலகாலமலை. மூன்றாவது கதிரமலை. இன்னொரு இடமும் ஒன்று உண்டு. உயர்வான மரங்கள் உள்ள வன்னிக்காடு. இதனை நான் சொல்லவில்லை. அவரே சொல்கிறார். இப்படி.

” பாத பங்கய மலையின் மீதினும்
பகரு பேதுரு மலையின் மீதினும்
ஓது கதிரைமா மலையின் மீதினும்
உயர்ந்த வன்னியா ரணிய மீதினும்”

பாத  - சிவனொளிபாத; பங்கயம் - மலை.

இப்போது மலையில் இருந்து - பாத பங்கய மலையில் இருந்து அருவி பாய்கிறது. அது எப்படி இருக்கிறதென்றால் புத்த பகவான் அருளிச் செய்த அருளுரையைப் போல பாய்கிறது பேராறு. இலங்கையில் உள்ள பெளத்த மக்களுக்கு சிவனொளிபாதமலை புனிதமான இடம். இந்துக்களுக்கு கதிரமலை மாதிரி. அதனால் தானோ என்னவோ பாத பங்கயத்திலிருந்து பாய்கிற அருவியை அவர் புத்த பகவானின் அருளுரைக்கு ஒப்புவமை சொல்கிறார்.இனி அந்தப் பாடலைக் காண்போம்.

“ அரசு நீழலிற் புத்த மாமுனி
ஆரு வற்சரம் பெற்ற யோகினைப்
பரவு பாரினுக் கருளு மாறுபோற்
பரவு பாரினுக் கருளுமாறு போற்
பாத பங்கயத் தருவி பாயுமே”

இனி பேதுருதாலகாலமலையின் மீது எப்படி அருவி பாய்ந்தோடி வருகிறது என்று பார்ப்போம். அது கல்வாரி மலையிலே இறைகுமாரனான யேசுபிரான் ஆற்றிய மலைப்பிரசங்கம் போல பெருகி வருகிறது. இங்கு பேதுருதாலகால மலையை யேசுபிரானின் மலைப்பிரசங்கத்தோடு ஒப்பிட்டமைக்கு ஏதேனும் விசேட காரணம் இருக்க வேண்டுமே? ஆம். இருக்கிறது. அது யேசுநாதரின் சீடர் ஒருவரின் பெயர் பேதுரு என்பது நினைவுக்கு வருகிறதா? இந்தப் பாடல் இதோ கீழே வருகிறது.

“ ஏசு வென்றிடும் ஞான பண்டிதன்
ஏறி மாமலை கூறு நீதி போற்
பேசு மாமுகில் சொரிய வாங்கியே
பேதுருமலை யருவி பாயுமே”

பேதுருமலையை கல்வாரி மலைக்கும் மழைநீரை மலைப்பிரசங்கத்துக்கும் ஒப்பிட்டு பேதுருதாலகால மலையை பேதுரு என்ற சீடனின் பெயராகக் கொண்டு கிறீஸ்தவத்துக்கும் ஒப்பிட்டுச் சொன்னது எத்துணை பொருத்தம்!

இப்போது நாங்கள் கதிர்காமம் போய் கதிரமலையைக் காணப்போகிறோம். இது இன்று வரை இந்துக்களின் புனித தலம். வள்ளியை முருகன் கண்டு காதல் கொண்ட இடம் என்பது இந்துக்களது ஐதீகம். இங்கு ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். சோமசுந்தரப்புலவர் வாழ்ந்த காலம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலம். சைவத்துக்கெதிராக கிறீஸ்தவ சமயம் பரவிக்கொண்டிருந்த காலப்பகுதி. இந்த நடைமுறைக்கெதிராக சைவமும் தமிழும் என்ற போர் கொடியைப் பிடித்துக் கொண்டு போராடக் களமிறங்கியவர் ஆறுமுக நாவலர். யாழ்ப்பாணத்து நல்லூரில் பிறந்தவர். அவருடய பிரசாரங்கள் பிரசங்கங்கள் வரலாற்றுப் பரப்பில் வியந்து பேசப்படுவன. ஆறுமுகம் என்ற அவரது பெயருக்கு ‘நாவலர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டதே அவர் எத்துணை நா வல்லோனாகத் திகழ்ந்தார் என்பதற்கு சாட்சி சொல்லும்.

இப்போது நாங்கள் கதிரமலைக்கு வருவோம். அங்கு பெருகி வருகிற அருவி எப்படி இருக்கிறது தெரியுமா? அது நாவலரின் கண்டனப் பிரசங்கம் போல பாய்கிறது.அந்தப் பாடல் இதோ இது தான்.

“உண்ட செந்தமிழ் சைவ நூலமு
தோங்க நல்லைவந்தருளு நாவலன்
கண் டனப் பிரசங்க மாமெனக்
கதிரைமாமலை யருவி பாயுமே”

இன்னும் பல பல பாடல்கள் எப்படி எங்கெங்கெல்லாம் மழை பெருகி ஓடியது அதன் விளைவுகள் என்னென்ன என்றெல்லாம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் நிலங்களில் அது என்னென்ன விளைவுகள ஏற்படுத்தியது என்பதை எல்லாம் சொல்லுகிற விதமான பாடல்கள் பல உள்ளன. அவற்றை எல்லாம் விரிக்கப் புகுந்தால் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என நீங்கள் ஓடி விடுவீர்கள்.பதிவு ஏற்கனவே நீண்டும் தான் போய் விட்டது. அதனால் அவற்றை மிகச் சுருக்கி,மேற்கூறிய குறிஞ்சி நிலமான மலையில் இருந்து கீழிறங்குகின்ற மழை அருவி எப்படி இருக்கின்றது என்பதை மாத்திரம் பார்த்து, அப்பால் போவோம்.

“ பூங்குறிஞ்சி முகட்டினில் ஏறிப்
பொளிந்த தெள்ளமுதாகிய வெள்ளம்
பாங்கி லாதப ரத்தையை நாடிப்
படரு வேரிற் படர்ந்து பள்ளம்”

மலைகளில் இருந்து கீழிறங்குகின்ற வெள்ளம் பரத்தையர்களை நாடி போகின்றவர்களைப் போல கீழிறங்கி ஓடுகிறது. பாங்கிலாத பரத்தையர் - ஒழுக்கமில்லா விலைமாதர்.

இந்த இடத்தில் மீண்டும் ஏனோ அந்த காளமேகக் கிறுக்கன் நினைவுக்கு வந்து போகிறான்.அந்த மனுஷன் தான் பரத்தையிடம் போனதையும் பாடி வைத்துப் போயிருக்கிறான். ( பதிவு ஏற்கனவே நீண்டு தான் போய் விட்டது. எண்டாலும் கொஞ்சம் பொறுங்கோ. :)

இவர் - காளமேகத்துப் புலவன் போன பரத்தை ஒரு தெலுங்குக் காறி. அவர் அவவிட்ட பட்ட பாட்ட சொல்லுகிறார் நம்மட ஆள். இப்படி.

“ ஏமிரா ஓரி என்பாள் எந்துண்டி வஸ்தி என்பாள்
தாமிராச் சொன்ன எல்லாம் தலைகடை - தெரிந்ததில்லை
போமிராச் சூழும் சோலை பொருக் கொண்டைத் திம்மி கையில்
நாமிராப் பட்ட பாடு நமன் கையில் பாடு தானே”

இந்த மனுஷனுக்கு தெலுங்கும் தெரிந்திருக்கிறது. ( திம்மி என்பது அவள் பெயர். ஏமிரா ஓரி - அடே என்னடா? எந்துண்டி வஸ்தி -  எங்கிருந்து வருகிறாய்? ) அடே என்னடா? எங்கே இருந்து வருகிறாய் என்பாள்.நேற்றிரவு அவள் கதைச்சதில எது தொடக்கம் எது முடிவு எண்டு எதுவும் விளங்கயில்ல. ( ஐயா அவ்வளவு ‘தெளிவா’ இருந்திருக்கிறார்.) இருட்டான சோலையைப் போல ஒரு கொண்டை வச்சிருக்கிற அவளிட்ட நான் பட்ட பாடு இருக்கே! அது யமனிண்ட கையில நான் பாட பாடப்பா என்கிறார் மனுஷன்.செத்துப் பிழைச்சு வந்திருக்கிறார் மாப்பிள்ள. :)

ஆனாலும் இந்த புலவனின் வித்துவச் சிறப்பும் விடுகதைப் பாங்கும் சிலேடை நயமும் மிக்க பாடல்கள் இன்னும் இன்னும் நயந்தும் வியந்தும் வாசித்து இன்புறத் தக்கவை.

இப்போது மீண்டும் இலங்கைக்கு வருவோம். வெள்ளம் இப்போது கடலைச் சென்றடையப் போகின்றன. அதன் அறிகுறியாக மீன் கொத்திப்பறவைகளும் கொக்குகளும் நாரைகளும் கழிமுகத்திடையே தென்படுகின்றன.அங்கு இந்தப் பறவைகளுக்கும் துள்ளிக் குத்தித்து கொண்டாட்டமாக நீந்தித்திரியும் மீன்களுக்குமிடையே ‘வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டம்!’

“செப்பு மத்தளங் கொட்டும் கரம் போற்
சிறைய சைத்துச் சிரலினம் மேவும்
கொக்கு நாரையும் மீனினங் கொத்திக்
கொண்டெழுந்து விழுங்கி விக்கும் மே”

மத்தளம் அடிக்கின்ற கைகளைப் போல மீன் கொத்திப் பறவைகள் தம் சிறகுகளை அடித்துக் கொண்டு வெள்ளம் பாய்கிற இடங்களுக்கு வந்து சேருகின்றன.அதே நேரம் கொக்குகளும் நாரைகளும் மீன் வகைகளைக் கொத்திக் விழுங்கி விக்குகின்றன.  சிரல் - மீன் கொத்திப் பறவை.

வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டத்தின் இடையில் தானே இருக்கிறது திருமணம் என்றொரு தூண்டில்.அந்தத் தூண்டிலின் நுனியில் இருக்கும் சிறு துண்டு ருசியில் வந்து சிக்குகின்றன மீனினங்கள். அங்கு ஒரு கல்யாண ஆரவாரம்.

“ மங்கலந் திகழ் மாப்பிள்ளை மார் வர
மாமன் பக்கம் வரவெதிர் கொள்ளல் போற்
பொங்கு வெள்ளப் புதுமனை நீர் வரப்
புரளு மீனிரை போயெதிர் கொள்ளுமே”

திருமணத்திற்காக மங்கலம் நிறைந்த மாப்பிள்ளையும் அவர் சுற்றத்தாரும் மணமகள் வீடு நோக்கி வர, அவர்களைப் பெண் வீட்டாரும் அவர் சுற்றத்தாரும் (மாமன் பக்கம்)எதிர் கொண்டு வரவேற்று அழைத்துச் செல்லுதலைப் போல பொங்கிப் புரண்டு வருகிற புதிய ஆற்று வெள்ளத்தை புரளுகின்ற இயல்புள்ள மீன்கள் நிரை நிரையாக வந்து எதிர்கொண்டு அழைத்துச் செல்லுகின்றனவாம்.( மீனிரை) ஒரு மாப்பிள்ளை வரவேற்புக் காட்சி ஒன்று அங்கு அரங்கேறுமாற் போல...

இந்த மீனிரைகளுக்குப் பின்னாலே  பரிசத்தோடு பரிவாரக் கூட்டம்.  யார் யாரெல்லாம் பரிசுப்பொருளோடு புது வெள்ளத்தை; புது மாப்பிள்ளையை எதிர்கொள்கிறார்கள்? அடுக்கடுக்காய் வரும் நண்டுகள் குடை பிடிக்கின்றன.திருக்கை (மீன்) ஆலவட்டம் எடுக்கிறது. அச்சத்தை வர வைக்கக் கூடியதான சுறா வாள் ஏந்தி வருகிறது. நல்ல குணமான கணவாய்களோ கவரி வீசுகின்றன.

இவர்களுக்கு முற்புறத்திலே ஆமைகள் பரிசப் (சீதனப்) பொருட்களைச் சுமந்து நிற்கின்றன.முரல் மீன்கள் குழல் ஊதி நிற்கின்றன.கடல் அலைகள் மத்தளம் கொட்டுகின்றன. (கொட்டுமேளம்) (அந்த சுபமுகூர்த்தத்தில் ) கடலானது  நதியை ஏற்று ( வாரி அணைத்து ) பந்தத்தில் ஒன்றுகலக்கிறது.

அவ்விரு பாடல்களும் இவை தான்.

“ அடுக்கு ஞெண்டு குடைகள் பிடிக்க
ஆல வட்டந் திருக்கை எடுக்க
நடுக்குஞ் சுறவு நாந்தகமேந்த
நல்ல கணவாய் கவரியிரட்ட”

”முன்னே யாமை பரியஞ் சுமக்க
முரல்கள் சின்ன மூதி நிற்க
மன்னு திரைகள் முழவ மியம்ப
வாரி மணக்கும் நதியையே”

தமிழகத்துக் காள மேகத்துக்கு இடி முழக்கத்தோடு ஈழத்தில் ஒரு வெளளப் பெருக்கு......



(ஈழத்துப் பாடல்கள் ’தமிழ் இலக்கியம்’ என்ற புலவர் இளங்கோ அவர்கள் தொகுத்து ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலையால் செப். 1996ல் வெளியிட்ட 10ம் 11ம் வகுப்புக்குரிய தொகுப்பில் இருந்து பெறப்பட்டது. மூலம்; தமிழ் அறிவகம், சிட்னி; 894.811)


Tuesday, September 22, 2015

இலக்கியச் சந்திப்பு - 24 -




மரங்களும் இலைகளும் பூக்களும் கையசைக்க முகிலுக்கு அப்பால் இருந்து சூரியன் புன்னகைக்கும் மாதம்!
வசந்த கால வாரம்!
வசந்தகால உற்சவங்களும் தெருவோரக் கொண்டாட்டங்களும் வார இறுதிகளில் களைகட்ட ஆரம்பித்து விட்டன.
நாங்களும் கொண்டாட வேண்டாமா?
கடந்த மாத சந்திப்பு இரு புதிய இளைஞர்களின் வருகையினால் புதுப் பார்வையை; விஸ்தீரனத்தை;வியப்பை; புதியதொரு வாசனையை சந்திப்புக்கு வழங்கி இருந்தது. ஆம், கார்த்திக் என்ற பெயர் கொண்ட பாரத இளைஞனும் பிரவீணன் என்ற நாமம் கொண்ட ஈழத்து இளைஞனும் சந்திப்புக்கு புது வாசம் சேர்த்தார்கள். 
வழக்கம் போல பானுவும் கமலாம்மாவும் ஆதரவு சேர்த்தார்கள்.
கீதா வர இயலாமையை முன் கூட்டியே தெரியப்படுத்தி இருந்தார். கார்த்திகா சுகயீனமுற்றிருந்திருந்தார் என்பதை நாம் முன் கூட்டியே அறிந்திருந்தோம்.
சிட்னியின் தென்பகுதியில் இருந்து சந்திப்பன்று காலை சீதா என்றொரு சகோதரி அழைப்பில் வந்து சந்திப்புக்கு வர முடியா ஆதங்கத்தை வெளிப்படுத்தி, சந்திப்பினை ஸ்கைப்பில் தர முடியுமா எனக் கேட்டிருந்தது மனதுக்குத் தனிப்பட்ட உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தது.
அது பற்றிய குறிப்புகளை எழுதி பதிவேற்றும் முன்னாடியே வந்து விட்டது அடுத்த சந்திப்பு!
இம்மாத சந்திப்பை தாவரவியல் பூங்காவில் வைப்பதற்கு ஒரு காரணம் உண்டு.வசந்த காலத்தின் இயற்கை அழகை ரசித்த படி புத்தக உலகத்துக்குள் போவது ஒரு ரம்யமான அனுபவமாய் இருக்கும் என்பது ஒரு காரணம்.
இன்னுமொன்றுண்டு.
இப்போதான பூக்களைப் போல பூத்திருக்கும் புத்தகங்களை நம் அங்கத்தவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.
கீதா. மதிவாணன் ஹென்றி.லோஷன் என்ற அவுஸ்திரேலிய செவ்வியல் படைப்பாளியின் கதைகளைத் தேர்ந்தெடுத்து தமிழுக்கு புது வண்ணம் சேர்த்திருக்கிறார்.
கார்த்திகா. கணேசர் ‘காலந்தோறும் நாட்டியக் கலை’ என்றதொரு புத்தகத்தை புலம்பெயர்ந்த மண்ணில் இருந்து புதிய பார்வைகளோடு அளித்திருக்கிறார்.
பிரவீணன். மகேந்திரராஜா - விஞ்ஞானக் கதைகளை ‘ஏலியன் கதைகள்’ என் ற தலைப்பில் தந்து தமிழுக்கு விஞ்ஞான வண்ணம் தீட்டி இருக்கிறார்.
ஜே.கே என்பார் ‘கொல்லைப் புறத்துக் காதலிகளை’ நம்மூடாக அறிமுகம் செய்ய ஆவல் பட்டிருந்தார்.
கன்பராக் கவிஞை ஆழியாழில் கருநாவு கவிதைத் தொகுதி உள்ளடக்கம் சார்ந்து மிகக் கனதியானது.
இவைகள் எல்லாம் எந்த சத்தமும் இல்லாமல் முழுமையான பரிபூரண குழந்தைகளாக தமிழ் தாய் மடியில் அமைதியாக அமர்ந்திருக்கின்றன.
அவைகளைப் பரந்து பட்ட தமிழ் சமூகத்துக்கு அடையாளம் காட்ட வேண்டியது நமது கடமையாகும். 
அவற்றின் பயன்பாட்டுப் பார்வையில் இருந்து அவற்றை திறம் காணுதலும் அதன் வரலாற்றுப் பெறுமதியை உலகறியச் செய்யவும் நாம் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம்.
அவைகள் பற்றிய கலந்துரையாடலாக இம்மாத சந்திப்பு வசந்த கால உற்சவத்தோடு சித்திக்கிறது.
ஆர்வலர்கள் மரங்களினதும் பூக்களினதும் புன்னகைகளுக்கு தலையசைத்து விட்டு அவற்றின் முற்றலில்அமைந்திருக்கும் கூடாரத்தில் பூத்திருக்கின்ற புத்தகப் பூக்கள் பற்றி கலந்துரையாடவும் செயற்பாட்டுத் தார்ப்பரியங்களைப் பேசவும் வாருங்கள்.
ஊர் கூடித் தேரிழுப்போம்.
இம்மாதம் 26.9.15 சனிக்கிழமை என்பதும் மாலை மூன்று மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமாகிறது என்பதும் உங்கள் மேலதிக கவனத்திற்கு!
சந்திப்போம்; தமிழால் இணைந்திருப்போம்!!

Sunday, September 20, 2015

ஏன் நாங்கள் இப்படி ஆயிட்டம்?



சனிக்கிழமை மாலை. எல்லோரும் ஓய்வாய் இருக்கும் ஓரு நாள்.

அது ஒரு மாலைநேர மழைநாளும் கூட. வின்ரர் பொழுது என்பதால் கணப்பும் மிதமாக இருப்பிடத்தைச் சூடேற்றிக் கொண்டிருந்தது.

தேநீரும் கொறிக்க சிலதுமாக சொகுசு நாற்காலியில் காலை மேலே தூக்கிப் போட்டுக்கொண்டு இருப்பதிலும் ஒரு செளகரிகம் உண்டு தானே!

 தொலைக்காட்சியில் ஒரு ஆவணப்படம் ஓடிக்கொண்டிருந்தது.

BBC தயாரிப்பு.

உண்மைக்கும் தத்துரூபத்துக்கும் தரத்துக்கும் அணுகுமுறைக்கும் ஆற்றலுக்கும் ஒரு வரலாற்று உதாரணமாக உலகமே ஏற்றுக் கொண்ட உன்னதத்தின் பெயர் BBC.

 British Broadcasting Corporation!

அன்றும் அப்படியான ஒரு நிகழ்ச்சிதான். வனங்களில் மிருகங்களின் வாழ்க்கை முறை பற்றிய - குறிப்பாக புலியின் வாழ்க்கை வரலாறு.

மான்கள் துள்ளி ஓடுவதும் புலி துரத்துவதுமான ஒரு காட்சி. அதிலும் ஓர் இளமான் உயரமாயும் நீளமாயும் பாய்ந்தோடுகிறது. காட்டில் தானாக வளர்ந்த வாளிப்பு! ஒரு வித மதாளிப்பு! குருத்துப் பருவம்!அந்தரவெளியில் ஒரு துள்ளலுமாக ஒரு நீளப் பாச்சலோடு உறுதியாக புல் வெளியில் கால் பதித்து பின் அதே வேகத்தில் மீண்டும் மேலெழும்புகிறது. அதன் உயிர் தப்புவதற்கான ஓட்டம் புல் வெளியில் கால் பதிக்கிற முறையில் சிறப்பாகப் பதிவாகிறது.

 கமறா துல்லியமாய் மான்கூட்டத்தைப் பின் தொடர்கிறது. தப்பி ஓடிய மான்கூட்டத்துக்குள் புலியோ அந்த துள்ளி ஓடிய இளமானை குறி வைத்து என்னமாய் பின் தொடர்கிறது என்பதும் அது எவ்வாறு தன் இரையைக் கவ்விக் கொள்கிறதும் என்பதும் BBC தரத்தை மீண்டும் உறுதி செய்யப் போதுமானதாக இருந்தது.

என் குடும்பத்தோர் எல்லோரும் அதை ஆழ்ந்து ரசிக்கவும் ஒன்றிப் போகும் படியாகவும் இருக்க என்னால் மாத்திரம் அவ் இளமானின் இழப்பை; இறப்பை; அதன் கடசி நேரத் துடிப்பை; தாங்க முடியவில்லை.

ஏன் நாங்கள் இப்பிடி ஆயிட்டம்?

(கொஞ்ச நாளாய் நான் ஏன் இப்பிடி ஆயிட்டன் என்று நீங்கள் என்னைக் கேட்காமல் இருந்தால் சரி. :) உண்மையாகவே கொஞ்சநாளா என் பதிவுகள் எல்லாம் ஒரு திணுசாத் தான் போய்க் கொண்டிருக்கிறது என்பதை நானும் உணர்கிறேன். வாசகர்கள் பொறுத்தருள்க!)

 வன்முறையை பார்த்து ரசிக்கும் வன்மம் மனித சமுதாயத்தில் எப்போது ஒட்டிக் கொண்டது?

‘முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டிலே என்று தன் காதலன் மறைந்த பின்னால் பூத்த தன் கொல்லையின் முல்லையைப் பார்த்துக் கோவித்துக் கொண்ட காதலியைக் கொண்டிருந்த சமுதாயம்-

காவல் மரத்துக்கு எந்தத் தீங்கும் செய்து விடாதே மன்னா என்று எதிரி நாட்டு குடிமகன் போரிட வரும் நாட்டின் அரசனிடம் மரத்துக்காகவே தூது போன வரலாற்றைக் கொண்டிருந்த ஒரு சமுதாயம் -

உன்னுடய காதலுக்கு சாட்சி யாரடி எனக் கேட்க, ஒரு கொக்கு பார்த்துக் கொண்டிருந்ததே! அது தான் நம் காதலுக்குச் சாட்சி என -

பூக்களையும் மரங்களையும் பறவைகளையும் தமக்குச் சமமாகக் கொண்டாடிய ஒரு அன்பும் அறமும் சார்ந்த ஒரு பண்பாட்டின் வேரில் இருந்து கிளர்ந்த ஒரு செவ்விய பண்பாட்டின் லாவன்யத்துக்குச் சொந்தக்காரரான நாம் இன்று நிற்கின்ற இடம் எது?

கோழிகளைச் சண்டைக் கோழிகளாக வளர்த்து அவை இரத்தக் களரிகளாக ஆகுவதை - அந்த உயிர் வதையை பார்த்து ரசிப்பவர்களாக ஆகி விட்டோம்.

தேனீக்கள் பாடு பட்டு பூப்பூவாய் குந்தி துளி துளியாய் சேகரிக்கும் தேனை நெருப்பிட்டுக் கொழுத்தி அவற்றை கொன்று அல்லது துரத்தி தேனை எடுக்கக் கற்றுக் கொண்டிருக்கிறோம்.

தன் பிள்ளைக்கென தாய்பசு வைத்திருக்கும் பாலை கன்றினைக் கட்டிப் போட்டு விட்டு நாம் கறந்தெடுத்துக் கொள்ளுகிறோம்.

நம் ஆசைக்காக நன்றியும் சிநேகிதமும் கொண்டாடும் நாய்களின் ஆண்மையை / பெண்மையை வலிக்க வலிக்கப் பறித்து விட்டு இப்பிராணி என் செல்லம் எனக் கொஞ்சுகிறோம். மிருகங்களின் மிக குறைந்த பட்ச சந்தோஷமும் அதிகபட்ச வாழ்வின் இருப்பும் அது தானே என்பது எப்படி நமக்கு மறந்து போயிற்று?

கம்பீரமான எருதுகளின் மூக்கில் துளையிட்டு நாணயக் கயிறு மாட்டி இழுக்கிறோம். என்னமாய் அதுக்கு நோகும் என ஒரு பொழுதேனும் யோசித்திருக்கக் கூடுமா நாம்?

பட்டுப் பூச்சிகளின் கொலைகளில் அரங்கேறுகிறது பட்டுப் புடவைகளின் புன்னகை.

ஆண் யானைகளின் கொலைகளில் நடை பெறுவது வெறும் அதன் தந்தங்களில் செய்யப்படும் கலைப்பொருட்களுக்கான  கண்கவர் விருந்துகள். (கூட்டமாகவும் குடும்பங்களாகவும் வாழும் யானைகள் வெளியே வரும் போது மனிதர்களைக் கண்டால் ஆண்யானைகள் மாத்திரம் மரங்களின் பின்னால் மெல்ல ஒழிந்து கொள்கின்றனவாம் தாய்லாந்துக் காடுகளில். அவைகளுக்கு ஏன் தாம் கொலைசெய்யப் படுகிறோம் என்பது நன்கு தெரிந்திருக்கிறது)

முதலைகள் கொல்லப்படுவது அவற்றின் தோல்களில் தயாராகும்  கைப்பைகளுக்காகவும் சப்பாத்துக்களுக்காகவும் என்பது எத்தனை அல்பமானது!

இவற்றில் மட்டுமா? மனிதர்களைக் கூட சண்டை போட வைத்து ரத்தம் வழிவதைப் பார்த்து கைதட்டி ரசிக்கவும் ஒரு கூட்டம் இருக்கத் தானே செய்கிறது குத்துச் சண்டைப் போட்டிகளில்.

இதில் அப்பாவி மிருகங்களை கொலை பண்ணி மனிதர்களாகிய நாம் உண்பது வெறும் வாய்க்கும் தொண்டைக்கும் மட்டுமான சொற்ப தூரத்துக்கானது என்பது இப்போதைக்கு ஒரு புறமாக இருக்கட்டும்.

இப்போது சீன உணவகங்களில் மீன்களும் நண்டுகளும்  உயிரோடு ஓடிக்கொண்டிருக்க நாம் குறிப்பிடும் உயிரினம் உங்கள் உத்தரவின் பேரில் தன் உயிரை உடனே  துறந்து உங்கள் பசிக்கு மருந்தாகும் இங்கு.

தனிப்பட்ட ஒருவர் ஏதோ ஒரு காரணம் நிமித்தம் உயிரொன்றைப் பறித்து விட்டால் ஆயுள் தண்டனை கொடுக்கும் அரசாங்கத்தில் இராணுவம் செய்தால் விருது கொடுத்து கெளரவிக்கும் ஓர் அரசின் ஆட்சியின் கீழ் -

கல்லிலே நம் காலைக் கொண்டு சென்று அடித்து விட்டு ‘கல்லடித்து விட்டது’ என்று முறைப்பாடு சொல்லும் கூட்டமல்லவா நாம்?

ஏன் நாங்கள் இப்பிடி ஆயிட்டம்?