Tuesday, December 30, 2014

மண்ணெண்ணை வண்டில்



ஊர் தோறும் மணி அடித்துக் கொண்டு வண்டிலில் வரும் மண்ணெண்ணை கிராமங்களின் முன்னய இமேஜ்களில் ஒன்று. 45 கலன் பீப்பாவும் ஒற்றைமாடும் வண்டிலும் மணியும் அளவுக் குடுவைகளும் தான் வியாபாரத்தின் மூலதனம்.

காலம் கொண்டு சென்று விட்டதில் இந்த மண்னெண்ணை வண்டிலும் ஒன்று.

உங்கள் ஊரில் எப்படி?

Thursday, December 18, 2014

ஓரு சிந்தனைப் பொறி


ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு தருணங்கள் வாய்க்கும் பொறி ஒன்று தட்ட. என் நண்பர் ஒருவர் சொல்வார் தனக்கு காலையில் குளிக்கும் போது அவ்வாறான பொறிகள் வந்துதிக்கும் என்று.

சிலருக்கு காலையில் கண் விழிக்கும் போது பெருமழைபெய்து ஓய்ந்த பின் கஞ்சல்கள் குப்பைகள் எல்லாவற்றையும் மழை கழுவி ஒதுக்கிய பின் ஏதோ ஒரு தடத்தில் அல்லது ஒரு தடங்கலில் சுத்தமான பூமிப்பரப்பில் துல்லியமாய் ஒதுங்கி நிற்கும் ஒரு பொருளைப்போல துலக்கமாக ஒரு பொறியை மூளை வெளிப்படுத்தி நிற்கும்.

ஆராய்ச்சி கூட அதை உறுதிப்படுத்துகிறது. உங்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்சினை மனதை அழுத்திக் கொண்டு இருக்கிறதென்றால் என்ன செய்வது என்று தெரியவில்லை என்றால் அதனைப் போட்டு குழப்பிக் / குழம்பிக் கொண்டிருக்காமல் அதனைச் சற்றே ஒதுக்கி வைத்து விட்டு அல்லது ஆறப்போட்டு விட்டு அல்லது அதற்குப் போதுமான நேர அவகாசம்; கொஞ்சம் நேரம் கொடுத்து விட்டு மற்றய உங்கள் நாளாந்த வேலைகளைச் செய்யுங்கள்.

ஒரு நாள் இரண்டு நாள் கூட அதற்குக் கொடுக்கலாம். ஒன்று அவ்விடயம் தானாகவே ஒரு முடிவுக்கு வந்திருக்கும் அல்லது அதனை எதிர் கொள்ளும் பலத்தை உங்கள் மனம் பெற்றிருக்கும் அல்லது மனம் உணர்வு நிலையில் இருந்து மேலேறி அறிவு நிலையில் பிரச்சினையை எதிர் கொள்ளும் தகுதியைப் பெற்றிருக்கும். அல்லது விடி காலையில் நீங்கள் நித்திரை விட்டு எழும் போது அவ் விடயத்துக்கான தீர்வினை உங்கள் மூளை நீங்கள் உறக்கத்தில் இருக்கும் போது தீர உங்கள் ஆழ் மனதோடு உறவாடி தீர்வினைப் பெற்றிருக்கும்.நீங்கள் நித்திரை விட்டெழும் போது திடீரெண ஒரு பொறியாக உங்கள் மனதில் அது ஒளிரும்.

நீங்கள் உறக்கத்தில் இருக்கும் போதும் மூளை உறங்குவதில்லை என்றும் அது தீர்வுகளைத் தேடி உங்களுக்காக வேலை செய்த படியே இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

எனக்கும் அவ்வாறான தருணங்கள் வாய்த்திருக்கின்றன. அதனால் இதனை நான் நம்பிக்கையோடு சொல்ல முடியும். அதனால் தீர்வுகள் தேவைப்பட்டால் ஒன்றும் செய்ய வேண்டாம் நேரம் கொடுங்கள். நேரம்; நேரம் மட்டும் தான். தீர்வுகள் தன் பாட்டில் தெரிய வரும்.அல்லது அதனை வீரியத்தோடு எதிர் கொள்ளும் பலத்தை மனம் பெற்றிருக்கும். அல்லது ஒரு பொறி தட்டும்.

இப்போது ஒரு விதமான பொறி தட்டியது. அது கீதமஞ்சரியுடய பதிவினைப் பார்த்ததால் தட்டிய பொறி.அவர் பல்துறை விற்பன்னர். அவரை காண நீங்கள்http://geethamanjari.blogspot.com.au/ இங்கு செல்லலாம். அவர் தமிழை எளிமையாய் ஆளத் தெரிந்தவர்;இலக்கியத்தின் பால் தீவிர நாட்டம் கொண்டவர்;கூச்ச சுபாவமும் அடக்கமும் மிக்கவர்.அவுஸ்திரேலியாவில் காலூன்றி இருப்பவர். இப்போது OZ TAMIL இற்கு ஒரு புதுச் செழுமையினை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

ஆம்! அவுஸ்திரேலிய பழங்குடி மக்களின் வாழ்வியலை ஆங்கில இலக்கிய உலகுக்கு படைத்தளித்த ஹென்றி லோஷனின் கதைகளை - ஒரு கால கட்ட அவுஸ்திரேலிய மக்களின் வாழ்வியலை கதைப்பிரதிகளாய் உலவ விட்ட ஹென்றி லோஷனின் கதைகளை அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தி OZ தமிழுக்கு புது வளம் சேர்த்திருக்கிறார்.

ஏற்கனவே நவீனன் ராஜதுரை ( காவலூர் ராசதுரை அவர்களின் மகனார்; மொழிபெயர்ப்புத் துறையை அரச அங்கீகாரம் பெற்ற தன் தொழில் துறையாகவும் கொண்டிருப்பவர். அண்மையில் தான் காவலூர் ராசதுரை அவர்களை நாம் இழந்திருந்தோம் என்பதை உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள்) அவர்கள் முன் மாதிரியாக இருந்து சிறு நூலொன்றை வெளியிட்டிருக்கிறார். எனினும் அது பல வருடங்களுக்கு முன்னால் வெளி வந்தது.கணணி இணையம் போன்ற வார்த்தைகள் அறிமுகமாவதற்கு முற்பட்ட பொழுதுகள் என நம்புகிறேன்.எனினும் அவருடய சிறு நூல் முதலடியை எடுத்து வைக்க இப்போது அது ஒரு பெரு நூலாக பெரு மலராக கீத மஞ்சரி தமிழுக்கு அதனை தந்திருக்கிறார்.

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் கீத மஞ்சரி!!

நான் சொல்ல வந்தது இந்த பொறி என்பது பற்றி அல்லவா?

கீதாவோடு என் அந்தப் புத்தக மகிழ்ச்சியைக் கொண்டாட உரையாடிய போது தட்டியது அந்தப் பொறி.

நாம் மாதாந்தம் நடாத்தும் உயர்திணை இலக்கிய சந்திப்பில் கலந்து கொண்ட போது ஏற்பட்ட அறிமுகம் ஒன்றில் நாட்டியக்கலாநிதி கார்த்திகா கணேசரின் அறிமுகத்தின் பேரில் கீதாவின் இன்னொரு அழகிய பரிமானம் ATBC வானொலியில் செவ்வாய் இரவுகளில் இசை மழையாய் இலக்கிய சலங்கைகளின் ஒலிகளோடு ஒலிக்கிறது. அது இசைத்தமிழ். இலக்கியத் தமிழின் இன்னொரு நவீன வடிவம்.(அது பற்றி எத்தனையோ பேர் சிலாகித்து விட்டார்கள். எனக்குத் தான் இன்னமும் கேட்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.)

இது பற்றிய பேச்சு எழுந்த அந்த சந்தர்ப்பத்தில் தட்டிய பொறி அது. நாம் வாழுகிற ஓசானியக் கண்டத்தில் புலம்பெயர்ந்திருக்கிற தமிழ் சமூகத்தவர் மத்தியில் மூன்று நான்கு தலைமுறைகளைத் தாண்டி விட்ட இந்தக் கால கட்டத்தில் - டிஜிட்டல் உலகத்துக்குள் நாம் ஒன்றரக் கலந்து விட்ட மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு விட்ட இந்தக் கால கட்டத்தில் நம் புதிய பரம்பரைக்கு - இங்கு பிறந்து ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டிருக்கிற தமிழ் பிள்ளைகளுக்கு நாம் எதை பொக்கிஷமாகக் கொடுத்துச் செல்லப் போகிறோம்? அதற்கு நாம் என்ன செய்கிறோம் என்ற கேள்வியில் விளைந்தது தான்  அந்தப் பொறி.

தமிழை வளம் படுத்துகிற அதே வேளையில் அதனை அடுத்த பரம்பரைக்கு கடத்த வேண்டிய கடப்பாட்டிலும் நாம் இருக்கிறோம் அல்லவா? இந்த சந்தர்ப்பத்தில் பதிவு நீண்டு விட்டதென்ற தயக்கம் இருக்கின்ற போதிலும் நினைவில் முட்டிக் கொண்டு நிற்கிற ஒரு சம்பவத்தை இங்கு பதிவு செய்ய எழுகிற ஆவலை அடக்க முடியவில்லை.

அப்போது 9ம் 10 ம் வகுப்புகளில் HSC தேர்வுக்கு தமிழை எடுக்க விரும்பாத ஆனால் தமிழை வாழ்க்கைக்காக படிக்க விரும்புகிற மாணவர்களுக்காக வகுப்புகள் எடுத்துக் கொண்டிருந்தேன்.அன்றைக்கு அவர்களுக்கு படிப்பிக்க வேண்டி இருந்த புத்தக அத்தியாயம் கவிதை. பாரதி தாசனின் கவிதை. அது துன்பம் நேர்கையில் யாழ்எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா என்ற பாடல்.

அதற்கான தயார் படுத்தலின் போது சுவாரிசமாக இருக்கக் கருத்தி ஐபாட் இல் சினிமாவில் வந்திருந்த பாடலையும் எடுத்துப் போயிருந்தேன். அந்தக் கவிதையிலே ஒரு இடம் வருகிறது,’அறம் இதென்றும் யாம் மறம்  இதென்றுமே அறிகிலாத போது’ அவர் திருக்குறளிலே ஒரு சொல் இயம்பிக் காட்ட மாட்டாயா என்று கேட்கிறார். நீங்கள் அப்படியான குழப்ப சந்தர்ப்பத்தில் ( உதாரனமாக ஒரு சந்தர்ப்பத்தைச் சொல்லி) என்ன செய்வீர்கள் என்று கேட்டேன்.பருவ வயதுக்கே உரியதான பல வித பதில்கள். எதிர்மறையான கருத்துக்கள்.கிண்டல்கள், கேலிகள்,சிரிப்புகள், புக்கணிப்பான பதில்கள்....(இதைப்பற்றியே தனி ஒரு பதிவு போடலாம்)

எனக்கு உடனே “குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா” பாடல் நினைவுக்கு வந்தது. கைவசம் ஐபாட்டும் இருந்ததால் அந்தப்பாடலை போட்டுக் கேட்க வைத்து ஒவ்வொன்றிலும் நிறைவைக் காணும் மனநிலையை அடைதல் எப்படி குறைகாணா மனநிலையை பெற்றுக் கொள்ளுதல் ஏன் அவசியம் எபது பற்றி உரையாடினோம். .அதிலொரு மாணவி சங்கீதம் கற்பவர். தனக்கு அந்தப் பாடல் தெரியும் என்றார். பாடச் சொல்ல அழகாக பாடினாள்.

இன்னொரு மாணவி அவள் வெகு புத்தி சாலி; தமிழ் படிக்க மட்டும் கள்ளம் பஞ்சி அவவுக்கு;  வீட்டுப்பாடத்தை வெண்பலகையில் எழுதி, எழுதிச் செல்லுமாறு கூறினாலே தன் கைப்பேசியில் படம் எடுத்துக் கொண்டு போபவள். பெற்றோரின் நச்சரிப்பின் பேரில் தமிழ் கல்விச் சாலைக்கு வருபவள். உடனே சொன்னாள் ”எனக்கு இன்னொரு பாடல் தெரியும்” என்ன பாடல் என்றதற்கு “ அவள் அப்படி ஒன்றும் அழகில்லை” அது எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்றாள்.

இப்படித்தான்; இவ்வாறு தான்  இன்றய காலத்து பிள்லைகள் தமிழைத்  தம்மோடு தொடர்பு படுத்துகிறார்கள். பாடல்கள் ஊடாக; இசை ஊடாக; திரைப்படங்கள் ஊடாக; வாத்தியங்கள் ஊடாக; ஆடைகள் ஊடாக; உணவுகள் ஊடாக; கொண்டாட்டங்கள் ஊடாக.....!

நாம் இவற்றினூடாகச் சென்று தான் பண்பாட்டையும் தமிழியத்தின் ஆழ அகலங்களையும் வாழ்க்கை முறையையும் நியமங்களையும் சொல்லிக் கொடுக்க வேண்டி இருக்கிறது.

தமிழை தமிழாகச் சொல்லிக் கொடுத்தல்; பாடசாலை கல்வி அமைப்பு போன்ற அமைப்பு சார் நிறுவனங்கள் தம்மை மறுசீரமைப்பு செய்து கொள்ள மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் தம்மை மறு புனரமைப்புச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஒன்று இருக்கிறது.

கீதாவின் வானொலி வடிவ இலக்கிய இசை நிகழ்ச்சி OZ தமிழ் இலக்கியத்துக்கும் புதிய பரம்பரையின் எதிர்காலம் கருதியும் CD வடிவில் இலக்கியத்தை புதிய தமிழ் பரம்பரைக்கு கொண்டு வந்து சேர்க்க முன் வர வேண்டும்.

தமிழ் இலக்கியத்துக்கு புத்தக வடிவில் வளம் சேர்த்தது போல நம் புதிய பரம்பரைக்கும் அவர்களுடய மேலும் புதிய உலகப்போக்குக்கு ஏற்ற முறையில் புதிய வடிவில் இனிப்பு மருந்து தடவிய மாத்திரை போல அவற்றைத் தர வேண்டும். அவற்றுக்கான தகுதியும் திறமையும் நேரமும் வசதியும் கீதாவுக்கு இருக்கிறது என்பது என் நம்பிக்கை.

அது பலனளிக்கும் என்பது என் ஆசிரியானுபவம்!






(பல நாள் பதிவெழுதாததால் ஒரு கட்டுக் கோப்புக்குள் பதிவு அமையப்பெற வில்லை என்ற குறைபாடு இருக்கிற பொழுதிலும் உடனேயே பதிவேற்றுகிறேன். நீண்டு போயிற்று; தொடர்பறுந்து போயிற்று என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே புரியவில்லை என்று நினைப்பவர்கள் சற்றே பொறுத்தருள்க. ஒரு காட்டாறு மனதிலிருந்து பெருகிற்றெனக் கொள்க!)