Friday, May 10, 2013

ஒரு ஞாபகார்த்தத்துக்காக (1) .............



பிரசுரித்தமைக்கு நன்றி: ஞானம், கலை இலக்கிய சஞ்சிகை, மே 2013, இதழ் 156, பக்: 48 - 49, வெளியீடு; கொழும்பு, இலங்கை.

இலட்சுமணக் கோடுகளும் எல்லை தாண்டாத கலைஇலக்கியங்களும்



கையெழுத்துப் பிரதிகளும் அச்சுயந்திர சாலைகளும் மையூறும் பேனாக்களும் தலைப்பாகை கட்டிய தமிழுமாக கொலுவீற்றிருந்த இலக்கியம் காட்சிப்பொருளாய் வரலாற்றுப் பக்கங்களின் கடந்து போனதொரு அத்தியாயமாய் ஆகிப் போயிற்று.

கால ஒளியில் துலங்கும் ஒரு நட்சத்திரமாய் எதிர்காலத்தில் அது நின்று ஜொலிக்கக் கூடும்.

விரும்பியோ விரும்பாமலோ பூகோளம்அவற்றைக் கடந்து வெகுதூரம் வந்தாயிற்று. மாற்றங்கள் மாறாது நிகழ, டிஜிட்டல் என்றொரு மாய உலகம் சிருஷ்டிக்கப் பட்டு புதிய உலகப்பண்பாடு ஒன்று தனித்தனி வீடுகளுக்குள்ளும் குடியிருக்கும் சிறு சிறுஅறைகளுக்குள்ளும் புகுந்து கொண்டு வாழ்வின் ஒவ்வொரு நிமிடங்களையும் புத்துருவாக்கி திருப்பித் தந்திருக்கிறது.

அது வீட்டில் இருந்து தொடங்கி, வீதியில் இறங்கி, வாகனங்களில் பயணித்து, அலுவலகத்தில் உட்புகுந்து, மீண்டும் வீதி வாகனம் வழி திரும்பி, வரவேற்பறையில் உட்கார்ந்து ரீவி பார்த்து, சமையல் அறையில் பதார்த்தங்கள் செய்து, உலகு பரந்த உறவுகளோடு உரையாடி உறங்கப் போகும் வரை ஒரு மனிதனை தன் அத்தனை செயல் பாடுகளூடாகவும்  அவனைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. இதனை முதலாம் இரண்டாம் மூன்றாம் உலக நாடுகள் என்று பார்த்தால் என்ன, வளர்ந்த நாடுகள் வளர்ந்து வரும் நாடுகள் என்று பார்த்தால் என்ன; செல்வந்த நாடுகள் வறிய நாடுகள் என்று வகை பிரித்துக் கொண்டாலென்ன? - இவை எல்லாவற்றிலும் அது வேறுபாடு எதுவும் காட்டாமல் புகுந்து கொண்டு விட்டது.

உலகத்தில் 4000க்கும் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன. அதில் எட்டே எட்டுத் தான் செம்மொழிகள் எனக் கொண்டாடுகிறோம். அதில் தமிழ் ஒன்று என்று பெருமைப் பட்டுக் கொள்ளுகிறோம். யாதும் ஊரே! யாவரும் கேளிர்!! என நாம் இந்தியா இலங்கை என்ற எல்லைகளுக்கப்பால் உலகம் முழுக்கப் பரந்து போனோம்.

- அதற்குக் காரணம் என்னவாக இருப்பினும் கூட

சுதேச அரசியலை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு; புலம்பெயர்ந்தோரின் புலம்பல் இலக்கியம் சொல்லும் ஏக்கப் பாடல்களைத் இன்னும் ஒரு புறமாக வைத்து விட்டுத்  தமிழ் வாழும் உலகைப் பார்த்தால் அது போக வேண்டி இருப்பது வெகு தூரம்.

பொது உலகம் புது வெளியில்: நாமோ இன்னும் பழைய இருட்டில். இலட்சுமணன் கீறிய பாதுகாப்பு வளையத்தைத் தாண்டாத சீதை போல மரபு வெளியில் இன்னும் பழம்பெருமை பேசிய படிக்கு.
எல்லாம் நன்மைக்கேஎன்பதன் தாற்பரியத்தை  ஏந்தியவாறு  செல்ல அது சொல்வது யார் காதிலும் கேட்பதாயில்லை. தமிழினுடய தளம் இப்போது வேறுதமிழ் இணையத்துக்குள் புகுந்து தசாப்தங்கள் தாண்டி விட்டது. உலகத் தமிழர் என்று ஓரு புதிய அடையாளம் தமிழுக்கு வாய்த்திருக்கிறது. தாம் தாம் வாழும் நாடுகளின் பண்பாடுகள் வாழ்க்கை முறைகள் முன்னெப்போதும் இல்லாத வாறு தமிழுக்குள் ; வாழ்க்கை முறைக்குள் சுவறுகின்றன. புதிய எல்லைகளை புதிய பார்வைகளை அவை தமிழ் பண்பாட்டுக்குத் தருகின்றன. எல்லைகளற்ற கல்வி வேலைவாய்ப்புகள் புதிய புதிய விதைகளை வாழ்க்கை முழுக்கத் தூவிச் செல்கின்றன. கல்வியிலும் பொருளாதாரத்திலும் வேலைவாய்ப்பிலும்  வாழ்க்கை முறையிலும் அவை தம் வனப்பினை எழுதிச் செல்கின்றன.

கலை இலக்கியங்கள் இவற்றை ஆவணங்களாய் ஆபரணங்களாய் ஆக்கியதாய்; தனக்குச் சூட்டிக் கொண்டதாய் தெரியவில்லை.

நம் சந்ததிக்கு நாம் எதை விட்டுச் செல்லப் போகிறோம்? பண்பாட்டுத் தொடரோட்டத்தில் தடி இப்போது நம் கையில். தொன்மையில் அல்ல தொடர்ச்சியில் இருக்கிறது பண்பாட்டுக்கான கையளிப்பு என்பர் எனின்  மாறிச் செல்லும் அதன் இயல்புகளை நாம் பதிந்து செல்லக் கூடாதா?

விடுபட்டபேசாப்பொருள்கள்என்னென்னெ? ஏன் அவை விடுபட்டன? - இக்கேள்விகள் புலம்பலின் ஒப்பாரியிலும் அரசியல் கூப்பாடுகளிலும் தொலைந்து போய் விடக் கூடாது. கலை இலக்கிய கர்த்தாக்கள் தம் வலிய கரங்களை சற்றே இளக்கி புது வெள்ளம் பாய இடம் தரவேண்டும்.

முதலில் மனதால்.

ஒரு வருடம் ஒன்றில் புலம்பெயர்ந்த நாடுகளில் எத்தனை அரங்கேற்றங்கள் நிகழ்கின்றன?
எத்தனை கவிதைகள் புனையப் படுகின்றன?
எத்தனை எத்தனை இசை வல்லுனர்கள் பட்டம் பெற்று வெளியேறுகிறார்கள்?
வாசிக்கும் வல்லமையுடன் எத்தனை எத்தனை விதமான வாத்தியக்கருவிகளும் கலைஞர்களும்மெளனப்பொக்கிஷங்களாய்கடலுக்குள் முத்தாய் புதையுண்டு போயிருக்கிறார்கள்?

-
இவர்களிடம் இருந்து ஏன் ஒரு புதிய படையல்சொந்தப் பார்வையில்புத்துருவாக்கம் பெறவில்லை? மரபு தாண்டாத கேள்விகளாய் - இவை இன்னும் ஏன் கற்பப் பைக்குள்ளேயே படுத்துறங்குகின்றன? சமாதி நிலை கொள்கின்றன?

ஏதோ ஒரு நூற்றாண்டில் பாடியதையே மீண்டும் மீண்டும் பாடி -
ஏதோ ஒரு நூற்றாண்டில் ஆடிய பரதத்தையே மீண்டும் மீண்டும் ஆடி -
வாசித்துக் காட்டிய விற்பன்னங்களையே மீண்டும் மீண்டும் வாசித்து -
பழம்பெருமையையே மீண்டும் மீண்டும் மேடைகளில் முழங்கி -
இன்னும் இன்னுமாய்......

புதிய களங்களும் புதிய உத்திகளும் புதிய வாய்ப்புகளும் நம் முன்னே சீண்டுவாரற்று விரிந்து கிடக்கின்றன

கற்பனையும் செயலாக்க வல்லமையும் ஆர்வமும் புழுதி மண்டிக் கிடக்கிறது.

மரபுகளைப் பிடித்திழுத்து ஈழத்துக் கலைக்குழந்தைக்கு பலவந்தமாய் சூப்பி மாட்டி பாரதத்தாயின் சேலைத்தலைப்பை பிடித்தபடி பின்னுக்கு பின்னுக்கு நின்றதில்  கழிந்து போயிற்று ஈழக் கலை இலக்கியத்தின் கடந்த காலங்கள்.

ஈழத்தமிழ் தீவிரங்களின் நிலைக்களன். தனக்கான தனியான பார்வையும் பாதையும் கொண்டது அது. இப்போது புலம்பெயர்ந்தோரின் உலகமும் எண்னிமமும் அதனோடு இணைகிறது.அமானுஷமான பண்பாட்டு அச்சுறுத்தலுக்கெதிரான கலை இலக்கிய கடமைகளும் அதற்குப் பிரத்தியேகமாக இருக்கின்றன

குறும் படம் ஒன்றைக் அதன் அத்தனை தாற்பரியங்களோடும் கைத்தொலைபேசி ஒன்றினாலேயே உருவாக்கி விடலாம்!

சிறந்த கவிதை ஒன்றை உள்ளூர் கலைஞர்களின் கலைக் கருவிகளினால் மெல்லிசைப்பாடலாய் கொஞ்சம் மினைக்கெட்டால் பாடி மகிழ்ந்து குறுந்தகட்டில்  பொதித்து வைத்து விடலாம்.

பொப்பிசையை / துள்ளிசையை நினைத்துப் பார்ப்பீர்களாக!

வெளிச்சத்துக்கு வராத விடயங்களை இலக்கியமாக்க தேவை மொழியும் மனத்துணிச்சலும் நேர்மையும் கொஞ்சம் மனசும் மட்டும் தான்.

கனவுத் தொழில்சாலைகளை பாரதம் உற்பத்தி செய்தால், மகிழ்ச்சி! ஆனால் ஈழத்தாய் தன் இயல்பு மாறாது குறும்படங்களை உற்பத்தி செய்யட்டும்.

பாரதத்து சினிமாப்பாடல்கள் வெகு அருமை. ஆனால் அதில் புதைந்து போய் விடாமல் ஈழ மங்கை மெல்லிசைப்பாடல்களில் தன்னை வெளிப்படுத்தட்டும்.

இலங்கைத்தமிழையும் இந்தியத்தமிழையும் இலக்கிய தராசால் தரநிர்ணயம் செய்யட்டும் புத்தகங்கள்.

நம் பாரம்பரிய கலை வடிவங்கள் எண்ணிமத்தை ஏற்றுக் கொண்ட படி புது விசை கொண்டெழட்டும்.

போர்கால இலக்கியம் போல் புலம்பெயர் இலக்கியங்களும் புதிய திசையை உலகுக்கு காட்டட்டும்.

மலையகத்தின் வெப்பியாரமும் இஸ்லாமியரின் வியாகூலமும் ஒரே தீரத்தோடு கருத்தில் எடுக்கப்படட்டும்.

நாம் பெரு அலைகளில் அடிபட்டுப் போய் விடக் கூடாது! நம் சுயத்தை நாம் மீட்டெடுக்க வேண்டும். அடையாளத்தை அழுத்தமாய் பதிய வேண்டும்.

பிரசுரமாக்க; படைப்பினைப் பகிர்ந்து கொண்டு மகிழ, யூரியூப்பும் வலைப்பூக்களும் வலைத்தளங்களும் மின் சஞ்சிகைகளும் கூட இருக்கவே இருக்கிறது

டிஜிட்டல் உலகில் நாம் செய்யக்கூடியது என்ன என்ற கேள்வியை உங்கள் சிந்தனைக்கும் ஆற்றலுக்கும் விட்டு விடுகிறேன்.

தேங்கிய குட்டையில் எத்தனை நாளைக்கு மீன் பிடித்த படியும்....

அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்த படியும்....

வீண்பெருமையை மேடைகளில்  பேசிய படிக்கும்......

இலட்சுமணன் கீறிய வட்டத்தைத் தாண்டி வெளியே வா சீதா!
வானுக்குக் கீழே ஒரு பெரும் பூகோளப் பரப்பு உனக்காகக் காத்திருக்கிறது.



ஈழத்தின் வடபுலத்தில் இருந்து புலம்பெயர்ந்து ஓசானியாக் கண்டத்தில் வாழும் கமலேஸ்வரியின் மகள் யசோதா.பத்மநாதன் எழுதியது.
22.4.2013. மாலை.




No comments:

Post a Comment