Saturday, March 24, 2012

மனுஷி! குறும்படம் பேசும் பெண் மொழி




சுமதி.ரூபனின் கை வண்ணத்தில் உருவான குறும்படம் “மனுஷி”

இது மெளனமாய் பேசும் பெண்ணின் மொழி.



ஆண்களில் எத்தனை பேருக்கு இந்தப் பாஷை புரியக் கூடும்?

Sunday, March 18, 2012

கிடுகு வேலியும் மூக்குப் பேணியும்

ஒருவரை அல்லது ஒரு நிகழ்ச்சியை ஞாபகப் படுத்த ஏதேனும் ஒரு பாடல் வரி அல்லது ஒரு இசைக்குறிப்பு அன்றேல் ஏதேனும் ஒரு சிறிய பொருள் அல்லது நடைபெறும் ஒரு சிறு சம்பவம் போதுமானதாக இருக்கும்.பழைய நினைவுகளையும் வாழ்க்கையையும் அது மீட்டுத் தந்து விட்டுப் போயிருக்கும்.

அது போலத் தான் இந்தக் கிடுகுவேலியும் மூக்குப் பேணியும்!யாப்பாணத்தை; ஊரை; அங்கு வாழ்ந்த வாழ்வை இந்தப் படங்கள் நினைவு படுத்திப் போகிறது.



கிடுகு வேலி யாழ்ப்பாணத்து இமேஜ்களில் முக்கியமானது.யாழ்ப்பாண மக்களின் கட்டுப்பாடான மற்றும் கட்டுப் பெட்டிக் கலாசாரத்தை குறிப்பாகச் சுட்டிக் காட்டுவதற்கு ’கிடுகுவேலிப் பாரம்பரியம்’என்ற சொல்லைக் குறியீடாகப் பயன்படுத்தும் அளவுக்கு கிடுகுவேலிகள் அங்கு தனித்துவமாக விளங்குவதையும் குறியீடாகக் கையாளப்படுவதையும் வரலாற்றுப் பரப்பில் தெளிவாகக் காணலாம்.



அது போலத்தான் மூக்குப் பேணியும்.அதன் தனித்துவமான வடிவமும் அன்னாந்து குடிப்பதற்கேற்ற வகையில் இருக்கும் அதன் நளினமும் அன்றாடப் பயன்பாட்டில் யாழ்ப்பாணத்தார் மூக்குப் பேணியைப் பயன்படுத்திய பாங்கும் யாழ்ப்பாணத்துப் பாரம்பரியத்தின் இன்னொரு இமேஜ்.

இந்தப் படங்களை கூகிளில் பார்த்த போது ஊர் சோகம் சூழ்ந்தது. அதனால் பதியத் தோன்றிற்று.

Saturday, March 10, 2012

பெண்: சில சந்தேகங்கள் - சில கேள்விகள்

Rain Graphic #24
Rain | Forward this Picture

இங்குள்ள தொலைக்காட்சியில் சில காலங்களுக்கு முன்னால் ஒரு விளம்பரம் ஒன்று ஒளிபரப்பாயிற்று.2,3 வயதளவான பெண் குழந்தை ஒன்று சுயாதீனமாகத் தாயின் அறைக்குச் சென்று முக ஒப்பனைப் பொருட்களைப் பார்த்து தேர்ந்தெடுத்து தன்னை ஒப்பனை செய்து கொள்கிறது.சம வயதான காரை வைத்து விளையாடிக்கொண்டிருந்த பையன் அவளைப் பார்த்து விட்டு இயல்பாக அவனது கார் கைநழுவிப் போக அப்பெண்குழந்தையைப் பார்த்துக் கொண்டு நிற்கிறது.முதல் காதல் என்ற படி முடிகிறது முக ஒப்பனை ஒன்றுக்கான விளம்பரம்.

அது போல கோடியல் ஒன்றுக்கான விளம்பரம் ஒன்று இப்படியாக அமைந்திருந்தது. பிள்ளைகள் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.தாகம் எடுக்கிறது. எல்லோருமாக சமையலறைக்குள் ஓடி வருகிறார்கள்.எல்லோரும் 10,12 வயது மதிக்கத்தக்க குழந்தைகள். ஆண்பிள்ளை ஓடி வந்து குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து ஒரு குவளையில் கோடியலில் கொஞ்சத்தையும் தண்ணீரையும் கலந்து மட மடவெண்று குடித்து விட்டு ஓடி விடுகிறான். பெண்குழந்தை வருகிறது. குளிர்சாதனப் பெட்டியைத் திறக்கிறது. கோடியலை எடுத்து குவளைக்குள் ஊற்றுகிறது. தண்ணீரை விட்டுச் சரி பார்க்கிறது. நிறத்தில்/ கலவையில் அதற்கு திருப்தி ஏற்படவில்லை. மீண்டும் சற்றே கோடியலை அதற்குள் கலந்து கரண்டியால் கலக்கி மேசையில் வைத்துக் குனிந்து சரிபார்த்து பின்னர் குடித்து விட்டு விளையாட ஓடுகிறது.

இவ்வேறுபாடு இயற்கையாகவே வடிவமைக்கப் பட்டிருக்கிறதா என்ற கேள்வி எனக்குள் பல காலங்களாக உண்டு.உண்மையில் ஆணும் பெண்ணும் சமமாக வாழ முடியுமா என்ற கேள்வியும் ஆணும் பெண்ணும் தனித்தனியாகத் தாங்கும் சுமைகளும் வலிகளும் புறத்தோற்ற வேறுபாடுகளும் இயல்பு நிலைகளில் இருக்கும் அடிப்படை வேறு பாடுகளும் இயற்கை இரு பாலாருக்கும் கொடுத்திருக்கின்ற பொறுப்புகளும் ஆணையும் பெண்ணையும் இரு வேறு முனைகளிலேயே வைத்திருக்கின்றனவா என்பது தான் அப்படி ஒரு சந்தேகம் ஏற்படக் காரணம்.

அதாவது பெண்ணினுடய இயல்பும் உடல் தோற்ற அமைப்பும் பெண்ணுக்கென சில இயற்கையாக இருக்கின்ற கடைமைகளும் போல அடிப்படை குண இயல்பும் இரு பாலாருக்கும் வேறுபட்டனவாக இருக்கிறதா?

சரி அப்படி இருக்கிறதென வைத்துக் கொண்டால் அந்த அடிப்படையில் இருந்து பெண்ணுக்கு வழங்கப் படக்கூடிய உரிமைகள் தகுதிகள் என்ன என்ற கேள்வி அடுத்து எழுகின்றது.குடும்ப அமைப்பும் அது சார்பான வினாக்களும் இன்னொரு தளத்தில் இருந்து பார்க்கப் படவேண்டியவை.வேலைக்குப் போவதா? வீட்டில் இருந்து குழந்தைகளைப் பார்ப்பதா? தன் சுயத்தை அடையாளம் காண்பதா? தன்னை வளர்த்துக் கொள்வதா? எதை இழக்கிறோம் எதைப் பெறுகிறோம் என்பதெல்லாம் அவரவர் தேவைகளை/விருப்பத்தைப் பொறுத்தது.

இவை எல்லாவற்றுக்கும் அப்பால் ஒரு பெண் சுயமரியாதையோடும் கண்னியத்தோடும் உலகத்தால்/சமூகத்தால் சகமனிதனால் நடத்தப் படுகிறாளா? அவளுக்கு மனிதனாக வாழக்கூடிய அவளுக்கான கெளரவம் சமூகத்தால் வழங்கப் படுகிறதா என்பது தான் நம் முன்னால் இப்போதுள்ள கேள்வி. ஈழத்துத் தமிழ் பெண்கள் இராணுவத்தால் பெண் என்ற காரணத்தால் அவமானப்படுத்தப்பட்டார்கள்; மானபங்கப்படுத்தப்பட்டார்கள்;தண்டிக்கப் பட்டார்கள்;இறுதியில் சாகடிக்கப்பட்டார்கள்.அது ஒரு புறமாக நிகழ,விதவைகளாகவும் தனியாகவும் வாழுகின்ற பெண்கள் மீதான சமூக வக்கிரங்கள் இன்னும் தொடர்ந்த வண்ணமாகத் தான் உள்ளன.

அவளுக்கு கொடுக்க மறுக்கப்பட்டவை எல்லாம் சாதாரண ஒட்டுமொத்த மனித சமூகத்துக்குமான சாதாரண மனித உரிமைகள் இல்லையா?

life time living என்றொரு புத்தகம் ’மனைவிகள் கவனிக்க’ என்ற தலைப்பில் மனைவிமாருக்கு கீழ்வரும் அறிவுரையை வழங்கி இருக்கிறது.

ஒவ்வொரு மனைவியும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய ஐந்து விடயங்கள்:

1.கணவரின் எடையை அடிக்கடி கவனியுங்கள்.எடை அளவுக்கு மீறும் போது சமையலைத் தக்கபடி மாற்றுங்கள்.

2.ஒவ்வொரு வருடமும் கணவரின் உடல் நிலையை காலோடு தலைவரை பரிசோதிக்கச் சொல்லுங்கள்.

3.ஏதேனும் கோளாறு தென்பட்டால் டாக்டர் கொடுக்கும் மருந்துகளை வேளை தவறாமல் சாப்பிடும் படி கவனித்துக் கொள்ளுங்கள்.

4.அலுவலகத்தில் தன் வேலையைச் செய்து முன்னேறுவதற்கு ஊக்குவியுங்கள்.ஆனால் முதுகு ஒடிய வேலை செய்யும் படி நச்சரிக்காதீர்கள்.

5.கணவன் வீட்டுக்கு வருவது மன அமைதிக்காக, மகிழ்ச்சிக்காக, ஓய்வுக்காக.அவற்றை அவருக்குக் கொடுங்கள்.

பங்களாதேஷ் கவிஞரும் நாவலாசிரியருமான தஸ்லீமா நஸ்ரின் பெண்களுக்கு ஆண்கள் செய்யும் கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுத்து வருபவர்.அதனால் பழைமை வாதிகளின் கடும் எதிர்ப்பையும் விமர்சனங்களையும் அவர் எதிர்கொண்டு வருகிறார்.’லஜ்ஜை’(வெட்கம்)என்ற அவரது புத்தகத்தில் அவர் இப்படி எழுதி இருக்கிறார்.

“’அவர்கள்’ தங்கள் காலின் கீழே உனக்கு இடமளித்திருக்கிறார்கள்.’அவர்கள்’ உன்னைப் சமையல் அறைக்குத் துரத்துகிறார்கள்.அவர்கள்’ உன்னை படுக்கை அறைக்குத் தூக்கிச் செல்கிறார்கள்.பிறகு அவர்கள் உன்னை படுக்கையில் இருந்து கீழே தள்ளுகிறார்கள்.’அவர்கள்’ உனக்குப் பாதுகாப்புத் தருகிறார்கள்.அவசியமான போது ‘அவர்கள்’ பாதுகாப்பை அகற்றி விடுகிறார்கள்.’அவர்கள்’ உன்னைக் காலால் உதைக்கிறார்கள்.’அவர்கள்’ உன்னை அடிக்கிறார்கள். ‘அவர்கள்’ மனிதப் பிறவிகள் அல்ல; ஆண்கள்” என்று அவர் ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.



சரி, இதனால் இதிலிருந்து விடுபட பெண்ணுக்குக் கல்வி அறிவு அவசியம் என்ற கருத்து மேலோங்கியது.அவளுக்குத் தன்னுடய பலம் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்ற குரல்கள் உரத்து ஒலிக்க ஆரம்பித்தன. அதன் ஒரு குரலாக ஒரு முறை தந்தை பெரியார் கூறியது இச் சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகிறது.ஆறு முழம் சேலையையும் மூன்று மணி நேரச் சமையலையும் அவர்களிடம்(பெண்களிடம்) இருந்து அப்புறப்படுத்துங்கள். கறண்டிக்குப் பதிலாக ஒவ்வொரு பெண்களின் கைகளிலும் புத்தகங்களையும் ஆறு முழச் சேலைக்குப் பதிலாக இலகுவாக அணியத்தக்க ஆடைகளையும் கொடுங்கள் என்றார்.

நம்முடய பண்பாட்டுப் பின்னணியிலோ எனில் அது இன்னும் சற்றே வேறுபட்டுக் காணப்படுகிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.போர் தொடுத்து வைத்த ஆண்களின் இழப்பு/பற்றாக்குறை,திருமணமான ஆண்களின் இழப்பினால் ஏற்பட்ட இளம் விதவைகளின் அதிகரிப்பு என்பவற்றுக்கப்பாலும் பெண்கள் படிக்கவே செய்தனர்.நல்ல உத்தியோகங்களிலும் அமர்ந்து சுய பொருளாதார மேம்பாட்டை அடைந்தும் விட்டனர்.அவ்வாறு இருக்கின்ற பட்சத்திலும் இவ்வாறு ‘வளர்ந்திருக்கிற’ பெண்ணை மணமுடிக்கத் ஆண்கள் தயங்குகின்றனர்.

இவ்வாறான பெண் ஒன்று மிக அதிக அளவு சீதனம் கொடுக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகிறாள்.இரண்டு ஆணுக்கு சாதாரண வீட்டையும் குடும்பத்தையும் பார்க்கிற பெண் - மேலும் ‘அடங்கி’ நடக்கிற பெண் தான் அவர்களின் விருப்பத் தேவையாக இருக்கிறாள். இன்னும் ஆண்களுக்கு சுயத்தோடு கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிற பெண் தம் வாழ்வை ‘பயமுறுத்துகிற’ ஒருத்தியாகவே தெரிகிறாள்.

இந்த விதத்தில் நம் நாட்டுப் பெண்கள் பல பக்கங்களாலும் சவால்களையும் பிரச்சினைகளையும் எதிர் கொள்கிறாள் என்றே தோன்றுகிறது. மேலும் அது எதிர்காலத்தில் ஒரு பெரும் சமூகப் பிரச்சினையாக அது வடிவெடுக்கும் அபாயமும் உள்ளது என்பது என் அனுமானம்.இதற்கு இப்போதிருந்தே சமூக ஆர்வலர்கள் ஏதேனும் செய்தாக வேண்டும்.

வெளி நாடுகளில் அத்தகைய நாகரிகமும் பண்பாடும் வந்தாயிற்று. கல்வியறிவும் உரிமைகள் பலவும் வழங்கப்பட்டாயிற்று என்பதையும் ஒத்துக் கொள்ளவே வேண்டும்.அரசாங்கம் பல சலுகைகளைப் பெண்களுக்குச் சட்டப்படி வழங்குகிறது.என்றாலும் 8ம் திகதி பெண்கள் தினத்தன்று காலை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 40ஐ நெருங்கிக் கொண்டிருக்கின்ற தொழில் மற்றும் கல்வி ரீதியாக வெற்றிகளை ஈட்டிய அவுஸ்திரேலியப் பெண்ணிடம் பெண்கள் தினம் பற்றிக் கேட்கப் பட்ட போது அவர்களது பதில் குழந்தை பெற்றுக் கொள்ளும் வயதெல்லை இயற்கையால் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் ஒரு வித மன நெருக்கடிக்குத் தான் ஆளாகி இருப்பதாகவும்;வெளியே ஆண்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் பொருத்தமான gentle men வெளியே இல்லை என்பது அவரது பதிலாக இருந்தது. கூடவே பொருத்தமான சோடியை இனம் கண்டு திருமணமாகி பிள்ளைகளைப் பெற்ற தம்பதியினர் பலர் - தோழிகள் - தற்போது விவாக ரத்தாகி இன்னும் சவாலான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் அவர் கூறிய மேலதிக தகவலாகும்.


எங்கு தவறு நேர்கிறது? குடும்ப அமைப்பிலா? ஆண்பெண் உறவிலா? மாற்றம் ஒன்றே மாறாதது என்ற நியதியை மறந்து அல்லது அதற்கேற்ப இசைந்து கொடுக்கமுடியாது போனதாலா? பெண் வளர்ந்ததற்கேற்ப ஆண் வளராமல் அல்லது மாறாமல் போன காரணமா? அல்லது அன்பென்ற இழை அறுந்து பணமும் பதவியும் சுயநலமும் மேலோங்கிப் போன காரணமா?

அண்மையில் இணையத் தேடல் ஒன்றில் ஒரு சகோதரி (www.sandanamullai.blogspot.com.au)ஒரு குழந்தைக்கான முதற்பெயரில் ஏன் தந்தையினுடய பெயர் மட்டும் பொறிக்கப் படுகிறது? தாயாருடய பெயரின் முதல் எழுத்தினையும் சேர்க்கலாமே என்று கேட்டிருந்தார்.

அதனைப் பார்த்ததும் உடனே எனக்கு இன்னொன்று நினைவுக்கு வந்தது.திருமணத்தின் போது பெண்ணுக்கு திலகமிடுகிறார்கள். தாலி கட்டுகிறார்கள்.திருமணமானவள் என அடையாளப்படுத்துகிறார்கள்.ஆனால்,ஆணுக்கு தெரியத்தக்கதாக - திருமணமானவர் எனப் புரிந்து கொள்ளத் தக்கதாக - என்ன இருக்கிறது? இருந்ததென்றால் எவ்வாறு அது இல்லாமல் போயிற்று?

தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்!
Welcome Graphic #9
Welcome | Forward this Picture

Saturday, March 3, 2012

மனப்பூங்கா - நிகழ்வு பற்றிய பகிர்வு




25.02.2012 அன்று மாலை வேளை பரமற்ரா பூங்காவில் இலக்கியம் பேச பகிர கூடுவதாக ஏற்பாடு.எனக்குத் தெரிந்த மிகச் சிறு நண்பர் கூட்டத்துக்கு மட்டும் அழைப்பிதழை அனுப்பி இருந்தேன்.

இப்படி ஒரு நிகழ்ச்சியைச் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆவல்.The poet என்ற திரைப்படத்தை SBS தொலைக்காட்சியில் பார்த்ததில் முளைவிட்ட இந்த ஆசை சிங்கப்பூர் எழுத்தாளர் மாநாட்டுக்குப் போன போதும் மலேஷிய நண்பர் தியாக.ரமேஷ் அனுப்பி வைக்கும் அழைப்பிதழ்களைப் பார்க்கும் போதும் மெல்ல மெல்ல வளர்ந்து ஒரு கட்டுப்படுத்த முடியா ஆசையாய் மேல் கிளர்ந்து அதனைப் புதுவருடத்தில் இருந்து அமுல்படுத்துவதாக எனக்குள் தீர்மானமாயிற்று.

இது பற்றி ஈழத்தில் இருந்து தற்போது இங்கு வந்திருக்கும் திருமதி.கோகிலா.மகேந்திரன் அவர்களோடு உரையாடியபோது நல்ல விஷயம் ஆரம்பியுங்கள் என்று உற்சாகம் தந்தார்.அழைபிதழ் ஒன்று தை இறுதியில் ஒருவாறு தயாராயிற்று.பெயர் ‘மனப்பூங்கா’

இதன் நோக்கம் என்னவென்றால் இலக்கிய ஆர்வலர்கள் தாம் எழுதிய ஆக்கங்களைப்; பார்த்து படித்து ரசித்தவற்றை ஒன்றுகூடி பகிர்ந்து கூடிக் கலைதல் மாத்திரமே! இங்கு பதவிகள் இல்லை; பெரியவர் சிறியவர் என்ற பாகுபாடில்லை;யார் ஏன் என்ற கேள்விகள் எழ வாய்ப்பே இல்லை.ஒரே ஒரு நிபந்தனை அவர்கள் வரும் போது தான் எழுதிய ஏதாவது ஒன்றை அல்லது படித்து ரசித்த ஏதாவதொன்றை நம்மோடு பகிர்ந்து கொள்ள கொண்டுவரவேண்டும்.

தொலைபேசியிலும் காரணம் சொல்லி அழைப்புச் சொல்லியும் சாட்டுச் சொல்லி காரணம் சொல்லி விலகியவர்கள் போக இறுதியாக நாலு பேர் கூடினோம்.

நான் போனபோது நான் படித்து இரசித்த சங்கஇலக்கியத்தின் புறநானூற்றுப் பாடல் ஒன்றைக் கொண்டு சென்றேன்.அது பிசிராந்தையாரின் பாடல்.அது பற்றி ஏற்கனவே இங்கு பகிர்ந்து கொண்டுமிருக்கிறேன்.யாண்டு பலவாக.... என ஆரம்பிக்கும் பாடல் அது.நம் மூதாதையர் எத்தனை தெளிவோடும் இறுமாப்போடும் மகிழ்வோடும் வாழ்ந்திருக்கிறார்கள்! இப்போதைக்கும் கூட அது எத்துணை பொருத்தமானதாக இருக்கின்றது என்ற தொனியில் என் ரசனையை எடுத்துச் சொன்னபோது என் இலக்கிய நண்பர் பாஸ்கரன் ஏன் எல்லோரும் கடினமான வார்த்தைப் பிரயோகங்கள் உள்ள எளிதில் பொருள் விளங்கிக் கொள்ள முடியாவகையில் இருக்கும் பழங்கால இலக்கியங்களில் இருந்து பாடல்களை மேற்கோள் காட்டுகிறார்கள் - எத்தனையோ எளிய தமிழில் நல்ல கருத்தாளம் மிக்க பாடல்கள் தற்காலத்தில் இருக்கத் தக்கதாக - என்ற கேள்வியை முன் வைத்தார்.

அதற்கு அதனை நாம் தற்கால இலக்கிய எளிமைத்துவத்தோடு அவற்றை ஒப்பிட முடியாதென்றும் தமிழின் நீட்சியை இலக்கியத்தின் நீட்சியை பலநூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழ் மக்களின் பண்பாட்டை வாழ்க்கை முறையைப் பிரதிபலித்து நிற்பதால் அவை முன்னிலைப் படுத்தப் படுகின்றன என்ற பதிலை எடுத்துரைத்தேன்.

பின்னர் அது தமிழர் பண்பாட்டை நோக்கியதாக உரையாடல் திரும்பியது.தமிழர் பண்பாடு அரசரை முன்னிலைப் படுத்தியதாகவே இருந்து வந்திருக்கிறது.ராஜராஜ சோழனும் பல்லவ மன்னர்களும் முன்னிலைப் படுத்தப் படுவது போல அவர்கள் காலத்து புகழ் பெற்ற கட்டிடங்களைக் கட்டிய சிற்பிகளைப் பற்றிய தகவல் எங்கேனும் காணப்படுகின்றனவா? அரசன் தன் புகழுக்காக வெட்டியெறிந்த கைகள் எத்தனை? தலைகள் எத்தனை? என்ற கருத்தையும்; இன்றுவரை அரசர்களே புகழப்படுகிறார்கள் உதாரணமாக உலகமகா அதிசயமாக இன்றுவரைக் கருதப்பட்டு வரும் தாஜ்மஹால் அதன் பின்னால் இறந்த கலைஞர்கள் கூட்டம் மற்றும் சீனப் பெருஞ்சுவரின் பின்னால் சமாதியானோர் போன்ற தகவல்களை கார்த்திகாவும் பாஸ்கரனும் ஒரு தர்மாவேசத்தோடு முன்வைத்தனர்.

இவ்வாறு அவர்கள் தொடக்கிவைத்த விவாதம் மேலும் சங்க இலக்கியத்தில் கொண்டுபோய் சேர்த்தது.அங்கு நம்மைக் கொண்டுபோய் சேர்த்தவர் பாஸ்கரன்.மயிலுக்குப் போர்வை கொடுத்த பேகனையும் முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியையும் அவர் காரசாரமாக விமர்சனம் செய்ய அதற்குப் பதிலுரைத்த கவிஞர் செல்வம் ஒரு அரசனை அவன் திறனைப் போற்றிச் சொல்ல எழுந்த கவிதைகளே அவைகள் ஒழிய அவ்வரசன் அவ்வாறு செய்தான் என்று சொல்வதற்கில்லை.தற்காலக் திரைக்கவிஞர்கள்’அந்த நிலாவத் தான் நான் கையில புடிச்சேன் என்ராசாத்திக்காக ...’என்று பாடுகிறார்கள். பிடித்துக் கொடுத்தா விட்டார்கள்? அது தம் அன்பினைச் சொல்ல அவர்கள் இவ்வாறெல்லாம் பாடுகிறார்கள் எனப் பதில் சொன்னார்!

அட, இப்படி ஒரு பக்கம் இருக்கிறதா இதற்கு!எனத் தோன்றிற்று எனக்கு!உடனடியாக இலக்கிய நயம் மிக்க இன்னொருபாடல் மனதில் ஓடியது! செளக்கியமா கண்ணே செளக்கியமா என்ற பாடலில் வரும்...”நான் போட்டிருக்கிற மோதிரம் இப்போது காப்பாகப் போகும் படியாக மெலிந்து போனேன் இனி அது ஒட்டியாணமாய் ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்” என்றவிதமாக வரும் அப்பாடலைக் கற்பனை செய்து பாருங்கள்!மோதிரம் ஒட்டியாணமாய் போகின்ற அளவுக்கு ஒரு பெண்னால் மெலிய முடியுமா? ஆனாலும் அந்தக் கவிஞன் எத்தனை அற்புதமாய் மோதிரம் காப்பு ஒட்டியாணம் என வளைந்திருக்கின்ற 3 பெண்ணின் அணிகலன்களையும் பிரிவுத்துயரைச் சொல்ல பாவித்து விட்டான்!ஆஹா, கவிரசம்! என்று ஓடிய மனதைப் பிடித்து நிறுத்தி பூங்காவுக்கு கொண்டுவந்து சேர்த்த போது பாஸ்கரன் தான் இயற்றிக் கொண்டுவந்திருந்த உலக அரசியல் சம்பந்தமான கவிதையை வாசித்துக் காட்டினார்.அவர் வாராந்த மின் சஞ்சிகை ஒன்றையும் நடத்தி வருகிறார். அவரது மின் சஞ்சிகை www.tamilmurasuaustralia.com என்பதாகும். அதில் அவரது அக்கவிதை ’அரங்கேறும் நாடகம்’என்ற தலைப்பில் பிரசுரமாகி இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து செல்வம் தான் இயற்றிய நட்பு பற்றிய கவிதையை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.இந்தக் கவிஞர் செல்வத்தைப் பற்றிக் கொஞ்சம் நான் சொல்லவேண்டும்.திருச்சியைச் சேர்ந்த இளைஞன். ஒருமுறை ’மின்னம்பலத்தில் இருந்து பொன்னம்பலம் வரை’ என்ற மறவன் புலவு சச்சிதானந்தன் ஐயா அவர்களுடய thevaram.org என்ற இணையத்தளம் பற்றிய அறிமுகக் கூட்டத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு இக்கவிஞன் மிக அருமையான ஒரு கவிதையை வாசித்துக் காட்டி விட்டு மின்னலென சென்று விட்டார்.அவரைச் சென்று பாராட்ட நினைத்த எனக்கு அது கைகூடவில்லை. எனக்கருகில் அமர்ந்திருந்தார் ஒரு இந்தியப் பெண்மணி.(இந்தியப் பெண்களிடம் எப்படி ஒரு தேஜஸ் வந்து அவர்களோடு ஒட்டிக் கொள்கிறது என்று தெரியவில்லை.மூக்குத்தி ஜொலிக்க தெய்வீகக் களையோடு அவர் இருந்தார்.)

அவவின் பெயர் சாந்தி.தமிழ் பாடசாலை ஒன்றின் ஆசிரியை.அவவிடம் அக்கவிஞரைத் தெரியுமா எனக் கேட்டேன்.தன் கணவருக்கு (அண்ணா.சுந்தரம்) தெரியக்கூடும் கேட்டுச் சொல்கிறேன் என என் தொலைபேசி இலக்கத்தை வாங்கினார்.சரியாக நம் ஒன்றுகூடல் ஆரம்பிப்பதற்கு 3 மணி நேரம் முன்னால் செல்வத்தில் தொலைபேசி இலக்கம் எனக்கு SMS இல் வந்திருந்தது.தொடர்பு கொண்டபோது நடந்தாவது வந்துவிடமாட்டேனா என்று சொன்ன அந்த மகிழ்வான கவிஞ மனதை இப்போது நினைத்துக் பார்க்கிறேன்!


நட்பு என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் எத்தனை முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும் ஒரு நல்ல நட்பு என்னவிதமான குணாதிசயங்களைக் கொண்டிருக்கவேண்டும் என்பதையும் மிக நயம்பட சொன்னார்.அழகானதொரு கவிதை அது.தொடர்ந்து தன்னுடய வாழ்வில் இருந்த தற்போது இறந்து போன தன் நண்பன் ஒருவனைப் பற்றி மனமுருகச் சொன்னார்.சிறுவயதில் இருந்தே தன்னோடு பின்னாலேயே சுற்றிக் கொண்டிருக்கும் தன் நண்பன் ஒரு முறை ரயில் பாதை ஓரம் தன்னுடய புது சைக்கிளை அவன் உருட்டியவாறு தான் அருகாக நடந்து வந்து கொண்டிருந்தார்களாம். திடீரென மிக அருகாக ரயில் வந்து விட்டதாம். தான் கரைக்குப் பாய்ந்து விட்டபோதும் தன் நண்பன் தன் சைக்கிளைக் காப்பாற்ற முயன்று கொண்டிருந்ததாகவும் தான் இழுத்து அவனைக் காப்பாற்றி சைக்கிளை இழந்ததாகவும் அந்த சொற்ப வேளையிலும் தன் உயிரை மதியாது இவருடய சைக்கிளைக் காப்பாற்ற முனைந்த அந்த நட்பின் திறத்தை சொல்லி அப்படிக் காப்பாற்றிய நண்பன் தன் கற்பமுற்ற மனைவி இறந்த செய்தி கேட்டு ( திருச்சியில்)தனக்கு பேஜரில் (அப்போது அது தான் புளக்கத்தில் அதிகம் இருந்ததாம்) தகவல் அனுப்பி விட்டு தான் அங்கு போய் சேர்ந்த போது இறந்து போயிருந்த செய்தியைச் சொல்லி இப்போது அவன் உயிரோடு இருந்திருந்தால் அவனும் தன்னோடு அவுஸ்திரேலியாவுக்கும் இப்போது இந்தக் கலந்துரையாடலுக்கும் வந்திருப்பான் என்றார்.

மனம் கனத்தது.பாஸ்கரன் தனக்கப்படி ஒரு நண்பன் ஈழத்தில் இருப்பதாகவும்; தன் குடும்பத்தையே ஒரு பெரும் றிஸ்க் எடுத்துக் காப்பாற்றி இங்கு அனுப்பி வைத்தது அவன் தான் எனவும் இன்றும் அவர் ஊரிலேயே இருப்பதாகவும் தான் 2,3, வருடங்களுக்கொரு முறை தொலைபேசியில் கதைத்தாலும் விட்ட இடத்திலிருந்து தம்முடய நட்பு தொடரும் எனவும் இத்தனை ஆண்டுகளாகியும் தன்னிடம் எந்த ஒரு பண உதவியும் கேட்பதில்லை என்றும் ஏன் தொலைபேசுவதில்லை எனக் கூடக் கேட்பதில்லை எனவும் சொல்லி அந்த நட்பின் அன்பில் மூழ்கினார்.

இப்படி ஒரு நட்பு எனக்குக் கிட்டவில்லையே என எனக்கு கவலையாக இருந்தது.அப்படி ஒரு நட்பு கிடைப்பதில் இப்போதுள்ள சிரமங்கள் கடினங்கள் பற்றி நான் சொன்னபோது அவர்கள் இருவரும் புன்னகைத்தனர்; கார்த்திகா மொளனம் காத்தார்.

புல்வெளியில் அவரவர் வசதிப்படி அமர்ந்திருந்த நமக்கு இயற்கைக்கும் இதயத்திற்கும் மிக அருகாக இருப்பதைப் போல ஓருணர்வு!ஒரு மணிநேரம் போனதே தெரியவில்லை.நல்லதொருவிதமாய் ஒருமணிநேரம் களிந்ததைப் போல ஒரு மன நிறைவு!
அடுத்த முறை வரும் போது மறக்காமல் பருகவும் பரிமாறவும் ஏதேனும் எடுத்து வரவேண்டும் என எனக்குள் தீர்மானித்துக் கொண்டேன்.

ஒவ்வொரு மாதமும் வரும் கடைசி ஞாயிறன்று 5.30 மணியில் இருந்து 6.30 மணிவரைக் கூடி பேசிக்கலைவதென தீர்மானமாகி எழுந்த போது ரிஷான் ஷெரீப் எழுதிய ‘காகங்கள் கொத்தும் தலைக்குரியவன்’ என்ற அவரது சிறுகதையை வாசிக்கும் படியும் ’விழிகள் சாட்சி’என்ற திரைப்படத்தைப் பார்க்கும் படியும் பாஸ்கரன் பரிந்துரைத்தார்.

நிறைவாக எழுந்த போது மெல்லியதாய் தூறல்!

மனதுக்குள்ளும்!!