Monday, February 21, 2011

பழந் தமிழ்

’மாற்றங்கள் எப்போதும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும்.’அதற்கு மொழி ஒன்றும் விதி விலக்கல்ல.கால ஓட்டத்துக்கேற்றவாறு மொழியும் தன்னைப் பல வழிகளில் புத்துருக்கியும், சிலவற்றை விட்டொழித்தும், புதிய சிலவிடயங்களைப் பெற்றும் தன்னை நிலை நிறுத்தி வந்திருக்கிறது.சில சொற்கள் வழக்கொழிந்தும் புதிய சில சொற்கள் வந்து சேர்ந்தும் அது தன்னை வாழ் நிலையில் வைத்திருக்கிறது.

18ம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்த தமிழ் இது.அப்போதைக்கும் இப்போதைக்கும் தான் எத்தனை இடைவெளி! எத்தனை மாற்றம்!! என்று கொண்ட ஆச்சரியத்தின் விளைவு புனைவு கொண்ட இந்தப் பதிவு.

அப்போது பாவனையில் இருந்த சில சொற்களை வைத்து ஒரு சம்பவத்தைப் பின்னி இருக்கிறேன். சொற்களுக்கான பொருளைக் கண்டு பிடிக்க முடிகிறதா? முடிந்தால் சற்றே சொல்லிச் செல்லலாமே!

*********************************

ஞாட்புக்கு முற்பட்ட காலம் அது!

18ம் நூற்றாண்டு!!

சாளரத்தைத் திறந்து வெளியே பார்த்தாள் சந்தனா.அது ஓர் அதிகாலைப் பொழுது! மழை பெய்து ஈரலிப்பாக இருந்தது நிலம்.சில் என்ற குளிர்காற்று முகத்தில் வீசியது.தோட்டப் புறம் நிலவொளியில் மங்கலாய்த் தெரிந்தது.கிணற்றங்கரையை அண்டிய வெளியில் செம்மண் பூமியில் செழிப்பாய் வளர்ந்திருந்த துவர்க்காய் மரங்களும் கிஞ்சுகத்தில் படர்ந்திருந்த தாம்பூலவல்லிக் கொடிகளும் அதற்கருகாக அமைந்திருந்த காரவல்லிப் பந்தலும் கண்களுக்கு மங்கலாய்த் தெரிந்தன.தூரத்தே கொஞ்சம் புற்பதிகள் அசைவதையும் கண்கள் கண்டு கொண்டன.நேரம் அண்னளவாக 4.45 மணி இருக்கும் போலத் தோன்றியது.கீழ் திசையில் பிரகாசமாய் ஒரு நட்சத்திரம்.

புழைக்கடைக் கதவைத் திறந்து வெளியே வந்தாள் சந்தனா.வாய்க்காலும் வரம்புகளும் மரங்களுமான பெரிய வளவு அது.அங்கே வத்சலையும் வந்சமும் நின்றிருப்பது தெரிந்தது.முன்னொரு காலத்தில் பகடுகளும்,மேதிகளும், குரச்சைகளின் ஒலியுமாக இந்த இடம் களை கட்டி இருக்கும் என அறிந்திருந்தாள் சந்தனா.அவை எல்லாம் அழிந்து போய் இன்று அந்த இடத்தை வத்சலை நிரப்பி இருக்கிறது.

கிணற்றங்கரை நோக்கி விரைந்தாள் அவள்.அது சற்றே தொலைவு.கபோதம் ஒன்று விழித்துக் கொண்டு சிறகடித்தது.மண்டூகம் ஒன்று தூரமாய்க் கத்துவது காதில் வந்து விழுகிறது.அதற்கு,நேற்றய மழை தந்த குதூகலம் போலும்! மண்நிலம் மழையினால் கழுவுண்டு ஓலைகளையும் குப்பைகளையும் ஒரு புறமாய் ஒதுக்கி அவள் நடந்து போக வழி சமைத்திருந்தது. செம்பட்டுக் கம்பளம் போல நடைபாதை.தூரத்தே கச்சோதம் வெளிச்சத்தைச் சிந்தி சிந்தி மறைவதும் கண்ணுக்குத் தெரிகிறது.கடவுள் வழிகாட்டுகிறாரோ? அதிகாலைப் பொழுதுகள் அழகானவை; அலங்காரமானவை.மழையினால் கழுவுண்டு விடிகினற பொழுதுகள் இன்னும் அம்சமானவை.

உள்ளங்கால் ஈரம் உணர சில்லென வீசிய குளிர்காற்று முகத்தை வருடிச் சென்றது.சிமிக்கிகளைப் போல மந்தாரப் பூக்கள் பாதையின் இரு மருங்கும் தொங்கியிருக்க அவைகளுக்குள் சிற்சில சுரும்பும் கேசவமும் சிறகடிக்கும் ரீங்காரமும் காதில் விழுகிறது.கோகிலத்தின் குரலும் தூரமாய் கேட்கிறது.உடனே சந்தனாவுக்கு அவந்திகையின் நினைவு எழுந்தது.அண்மைக்கால சினேகிதமாய் அவளோடு ஒட்டி உறவாடும் உறவது.கசனத்தைக் கண்டு நேற்று அவள் தந்தை தன் பயணத்தை நிறுத்திச் சற்றே தாமதமாய் புறப்பட்டது அவளுக்கு ஏனோ சட்டென்று நினைவு வந்தது.ஏன் தந்தை இன்னும் சகுனங்களில் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பது தான் இன்னும் அவளுக்குப் புரியாத புதிர்.

ஓர் இளவரசியைப் போல இவற்றை எல்லாம் கண்டும் கேட்டும் உணர்ந்தவாறும் நடந்து சென்று கிணற்றில் தண்ணீரை முகர்ந்து தன் மீது விரைவாக ஊற்றித் தன்னை உவளித்து உலர்த்திக் கொண்டு வீட்டுக்குள் வந்து சேர்ந்தாள் சந்தனா.இனி அவள் தாமதிக்கக் கூடாது.அவள் நவநீத நிறம்.வலப்புற சூழி கொண்ட குந்தளம்.கங்கதம் கொண்டு அதனைச் சீர் செய்து கொண்டாள்.அருகிலே இருந்த படிமக்கலத்தின் உதவியோடு அங்கராகம் இட்டுக் கொண்டாள்.மாலதியும் மெளவலும் நினைவுக்கு வர அவையும் அங்கு அரங்கேறின.

படிமக்கலத்தின் முன்னால் உள்ள முக்காலியில் உட்கார்ந்து கொண்டாள்.அந்த யெளவன மங்கைக்கு செவிப்பூ வெகு வசீகரம்.அங்குலியில் உகிர் அழகாகச் சீர் செய்யப் பட்டிருந்தது.அவை மொட்டுக்களை ஒத்திருந்தன.அவள் ஒட்டமும் அதரமும் மாதுளம் பூ.உள்ளே இருப்பனவோ மாதுளை முத்துக்கள்.அருகே அழகைக் கூட்டிய படி அங்கிதம் ஒன்று.அது சிறுவயது விளையாட்டால் கிடைத்த பரிசு.கிலுத்தைத்தில் இருந்து கூர்ப்பரம் வரை அணிகள் அழகு செய்தன.அவள் சியாமளவல்லி. தவளவண்ண சேலையில் சோபிதமாய் அவள் நின்ற நிலை ஒரு கவிதை.முகமோ மஞ்சரி.அவள் கோகில வாணி,ஞமிலினதும் வெருகலினதும் தோழி.அவள் எகினத்தின் சாயல்.

ஆனால் அவளுக்கு வைரிகளும் இருந்தார்கள்.துந்துளம் அவள் பரம வைரி.பிபீலிகையும் நளிவிடமும் அவள் வீட்டின் விருந்தாளிகள் என்பதில் அவளுக்கு பலத்த ஆட்சேபம் இன்றுவரை இருக்கிறது.கூடவே இப்போது நிலந்தியும் சேர்ந்து விட்டிருக்கிறது.இது பற்றி எத்தனையோ தரம் அவள் தந்தையிடம் முறைப்பாடு செய்தாயிற்று. எனினும் எந்த விடயமும் இன்று வரை நடந்த பாடாயில்லை.

அதே போல அவளுக்குச் சில ஆசைகளும் இருந்தன.அரச கதைகளைக் கருத்தூன்றிப் படிப்பதால் விளைகின்ற ஆசைகள் அவை.சாரங்கத்தையும் நேமியையும் சிதகத்தின் கூட்டையும் காணவேண்டும் என்பது அவள் நெடு நாளைய கனவு.தோழி ஒருத்தி கொண்டு வந்து கொடுத்திருந்த சசலத்தைப் பார்த்து அவளுக்கு வியப்போ வியப்பு!சசலம் கொண்டு அவள் செய்யும் நுட்பமான தையல் வேலைக்கு அவள் தோழியர் கூட்டம் அடிமைப்பட்டுக் கிடக்கும்.கோமளவல்லியான அவள் ஞெள்ளல் பொருந்தியவள்.பொற்பும் போதமும் நிறைந்தவள்.பிங்கல அனிகலன்களை அவள் அணிந்து கன்னல் மொழி பேசி வந்தால் காண்போர் மனம் கொள்ளை கொண்டு போகும்.

அவள் புறப்பட்டு விட்டாள்.இனித் துச்சில் புறமாக ஓதம் வந்ததால் பங்கமுற்றிருந்த பகுதியைத் தாண்டி நடந்தால் சற்றே வெளிச்சம் தென்படும்.தால வரிசை செறிந்த மார்க்கம் புலப்படும்.அதனைக் கடந்தால் விடங்கம் அலங்கரித்த மறுகு வரும்.அதனூடு போனால் பாகசாலை தெரியும்.அவள் விரைந்து நடந்தாள். கபித்தமும் சிந்தகமும் அவ்விடத்தைச் சுற்றி வளர்ந்து இருந்தன.அவற்றினிடையே ஒன்றிரண்டு ஆசினியும் அலங்கரித்தன.அவை செழுமையைப் பறைசாற்றிய வண்னம் அந்த இடத்துக்கு ஒரு வித சோபிதத்தை அளித்துக் கொண்டிருந்தன.

பாகசாலையை நெருங்கியதும் உள்ளே சில ஆட்களும் குமுதமும் தெரிந்தன.ஏனென்றால் அது பாதிக் குந்தும் கூரையும் கொண்டமைந்த பாக சாலை.அதனால் அங்கு உலூகலம்,வட்டிகை,நவியம்,முசலம்,சூர்ப்பம், தாம்பு, குழிசி,என்பன கிடப்பதும் தெரிந்தன.ஞிகிழியில் இருந்து வந்த வெளிச்சத்தில் மும்மரமாய் வேலை செய்து கொண்டிருந்த தொண்டர்கள் தென்பட்டனர்.அவர்கள் மீது தென்பட்ட சுவேதம் தவள நிற பெளவம் போல மிளிர்ந்து தனிச் சோபையை அவர்களுக்கு அளித்துக் கொண்டிருந்தது.அது தொண்டுமை தந்த பரிசு அவர்களுக்கு.அது பக்தித் தொண்டுமை!


அதனருகே பதிவான சிறு குடில் பகுதி கீசகம் கொண்டு முழுமை பெற்றிருந்தது.அதற்கருகே நறுமருப்பும் உருளரிசிச் செடிகளும் இறும்பு போல அடர்ந்திருந்தன.அதற்குள் சசம் பதுங்கி இருப்பது வழக்கம் என்பது ஒரு சிலருக்கே தெரியும். சந்தனாவுக்கு அது தெரிந்திருக்க நியாயமில்லை.தெரிந்திருந்தால் அதுவும் வேண்டும் என்று கேட்டிருப்பாள்.

இவற்றை எல்லாம் பார்த்த படி ஞெள்ளல் கொண்ட பாவனபக்தியோடு மதுரமான சந்தனா சசியோடு விரைந்து நடந்தாள்.அவள் கம்பீர மகிஷி.சுதந்திர ராணி.இயற்கையோடு உறவாடும் உள்ளத்தினள்.பக்தி கொண்ட பாவை.அவள் மனமெல்லாம் நேமி நாதம் கேட்கும் ஆசை.

சயந்தன தரிசனத்துக்காகத் தான் இந்த அவசரமெல்லாம்.”

********************** *******

எங்கே, சொற்களுக்குப் பொருளைக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.

சுரும்பு -
கேசவம் -
கோகிலம் -
அவந்திகை -
கசனம் -

உவளித்து -
படிமக்கலம் -
நவநீதம் -
சூழி -
குந்தளம் -
கங்கதம் -
அங்கராகம் -
மாலதி -
மெளவல் -

அங்குலி -
உகிர் -
ஒட்டம் -
அதரம் -
அங்கிதம் -
கிலுத்தம் -
கூர்ப்பரம் -

சியாமளம் -
மஞ்சரி -
கோகிலம் -
ஞிமிலி -
வெருகல் -
எகினம் -

துந்துளம் -
பிபீலிகை -
நளிவிடம் -
நிலந்தி -

சாரங்கம்
நேமி -
சிதகம் -
சசலம் -
கோமளம் -
ஞெள்ளல் -
பொற்பு -
போதம் -
பிங்கலம் -
கன்னல் -

துச்சில் -
ஓதம் -
பங்கம் -
தால வரிசை -
மார்க்கம் -
விடங்கம் -
மறுகு -
பாக சாலை -
கபித்தம் -
சிந்தகம் -
ஆசினி -

குமுதம் -
உலூகலம் - வட்டிகை -
நவியம் -
முசலம் -
சூர்ப்பம் -
தாம்பு -
குழிசி -

சுவேதம் -
தவளம் -
பெளவம் -

சீசகம் -
நறுமருப்பு -
உருளரிசி -
சசம் -

மதுரம் -
சசி -
நேமிநாதம் -
சயந்தனம் -

Sunday, February 13, 2011

புலவர் குறுங்கோழியூர்க் கிளார்



இவர் வேளான் மரபினர்.(விவசாயக் குடி வழி வந்தவர்).இவர் உறையூரைச் சேர்ந்தவர் என்பர்.இவர் மூன்று பாடல்களை புறநானூறு என்ற சங்க இலக்கியத்தில் பாடி இருக்கிறார்.அவை முறையே 17,20,22ம் பாடல்களாக அமைந்துள்ளன. அவருடய பாடல்கள் நீண்டவையாக அமைந்து கானப்படினும்; அதில் பொதிந்து நிற்கின்ற கருத்துக்கள்,சொல்ல வந்த பொருளைச் சொல்லும் பாங்கு,எடுத்துக் காட்டும் விடயங்கள் - அவரது புலமைக்கும் ஆற்றலுக்கும் மதி நுட்பத்துக்கும் சான்றாக அமைந்துள்ளன.

அவரது 17வது பாடல் ஒரு வரலாற்றுக் குறிப்பைத் தன்னுள்ளே தாங்கி நிற்கின்றது.அதனை வேறொரு சந்தர்ப்பத்தில் தனியாகக் காண்போம்.அது தனியாகப் படித்து இன்புறத் தக்க இயல்பு வாய்ந்தது.அவரது 22 வதாக அமைந்திருக்கின்ற பாடல்,’நாட்டில் வேளாண்மைத் தொழிலை செயலாற்றுக. அதுவே உனக்கு மேன்மையைத் தரும்’ என்று அரசர்க்கு சொல்வதைப் போன்ற பொருளைத் தந்து நிற்கிறது.இப்போது நாம் பார்க்க இருக்கின்ற பாடல் 20 வதாகும்.

இப் புலவரது பாடல் நாயகன் சேரமான் இரும்பொறை என்ற மன்னன்.இவன் செங்கோண்மையும் வள்ளல் தன்மையும் கொண்ட சிறந்த போர் வீரனாவான்.இவன் தலையலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனோடு போர் செய்து தோற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியவன்.கபிலர் என்ற புலவனின் நண்பனாகவும் விளங்கிய இம்மன்னன் பாரி வள்ளல் காலத்தைச் சேர்ந்தவனாக இருக்க வேண்டும் என்று அறிஞர் கொள்வர்.

படித்துப் படித்து இன்புறவும் தக்கனவாக அமைந்திருக்கின்ற இவர் கையாளும் தமிழின் அழகும் பாடு பொருளும் அவற்றைச் சொல்லும் திறமும் அவற்றோடு இழையோடியிருக்கும் நேர்மை கலந்த அன்பின் ஊட்டமும் இப்புலவனின் அறிவழகுக்குச் சாட்சி.புறநானூற்றுப் புதையலில் இது ஒரு முத்து.

சரி, இனி இந்தப் பாடலையும் அதன் சொற் சுவையையும் பாருங்கள்!

“இரு முந்நீர் குட்டமும்,
வியன் ஞாலத்து அகலமும்,
வளி வழங்கு திசையும்,
வறிது நிலைஇய காயமும் என்றாங்கு,
அவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியை!

அறிவும் ஈரமும் பெருங் கண்ணோட்டமும்,
சோறு படுக்கும் தீயொடு
செஞ் ஞாயிற்றுத் தெறல் அல்லது,
பிறிது தெறல் அறியார் நின் நிழல் வாழ்வோரே!
திருவில் அல்லது கொலைவில் அறியார்;

நாஞ்சில் அல்லது படையும் அறியார்;
திறன் அறி வயவரொடு தெவ்வர் தேய அப்
பிறர் மண் உண்ணும் செம்மல்! நின் நாட்டு
வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது,
பகைவர் உண்ணா அருமண் ணினையே!

அம்பு துஞ்சும் கடி அரணால்,
அறம் துஞ்சும் செங்கோ லையே
புதுப் புள் வரினும் பழம் புள் போகினும்
விதுப்புற அறியா ஏமக் காப்பினை!
அனையை ஆகல் மாறே
மன்னுயிர் எல்லாம் நின் அஞ் சும்மே!”

இந்தப் பாடலின் பொருள் என்னவென்றால், ‘சேர மன்னனே! பெரிய கடலாழமும்,அகன்று விரிந்த நிலப் பரப்பும், காற்று வீசும் திசைகளும்,குற்றமில்லாத ஆகாயமும் - என இவ்வாறானவற்றை அளந்து அறிய வேண்டுமானாலும் அறியலாம்.ஆனால் உன்னுடய ஆற்றலையும் புகழையும் அளந்து அறிவதற்கு இயலாது.அத்தகைய சிறப்புடையது உன்னுடய அறிவின் கூர்மையும் அன்பின் ஈட்டமும் யாவற்றையும் நுட்பமாக உணரும் கண்ணோட்டமுமாகும்.(கண்ணோட்டம் - ஒரு விடயத்தை விமர்சன நீதியாகப் பார்க்கும் ஆற்றல்).இதனை வள்ளுவர்,

‘கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் - அஃது இன்றெல்
புண் என்று உணரப் படும்’ என்பார்.

சேரனே!அரிசியைச் சோறாக்கும் நெருப்பும்,சூரியனுடய இயல்பான கோடை வெப்பமும் அல்லாது உன்னுடைய வெண்கொற்றக் குடையின் கீழ் வாழும் மக்கள் வேறு விதமான வெப்பத்தை அறிய மாட்டார்கள்.மற்றும் உன்னுடய நாட்டு மக்கள் வானத்தில் தோன்றும் செழுமையான வில்லை அறிவார்களே அன்றிப், பகைவர்கள் போர் தொடுக்கும் வில்லை அறிய மாட்டார்கள்.அவர்கள் நிலத்தில் உழுகின்ற கலப்பையை அறிவார்களேயன்றிப்,பகைமை கொண்டு போர் செய்யும் பகைவர்களது ஆயுதங்களை அறிய மாட்டார்கள்.

ஆற்றல் மிக்க வீரர்களைத் துணையாகக் கொண்டு, பகைவர் அழியுமாறு போர் செய்து, அவர்கள் நாட்டைக் கைக்கொள்ளும் மேன்மையுடையவனே! உன்னுடைய நாட்டில் உள்ள வீரத் தன்மை பொருந்திய கருவுற்ற மகளிர் விருப்பம் மிகுதியால் மண்ணைத் தம் கையால் எடுத்து சுவைக்கும் வகையில் கொள்வார்களே யன்றிப் பகைவர் ஒரு சிறிதேனும் உன் மண்ணைக் கொள்ள மாட்டார்கள்.

நீர் மிகுந்த அகழிகளை உடைய நீண்ட மதில்கள் சூழ்ந்த பாதுகாப்பும்,அறநெறி நிலவும் செங்கோண்மையும் உடைய மன்னனே! தீமை காட்டும் நிமித்தங்கள் புதிதாகத் தோன்றினாலும், முன்னமேயே காணப்பட்ட நல்ல நிமித்தங்கள்(அறிகுறிகள்) விலகுவதாகக் காணப்பட்டாலும் நிலை தளராத பாதுகாப்புடையது உன்னுடைய நாடு.அத்தகைய பாதுகாப்பைக் குடிகளுக்கு வழங்குபவன் நீ.ஆதலால் இத்தகைய சிறப்பு வாய்ந்த மன்னனுக்கு எந்தத் தீங்கும் வந்துவிடக் கூடாது என்று அன்புடைய உன் நாட்டு மக்கள் சற்றே கவலை கொள்ளவும் செய்கிறார்கள் என்கிறார்.

மேலும், இம்மன்னன் தோற்றுப் போகக் கூடிய விதமாக நிமித்தங்கள் (அறிகுறிகள்) தென்படுவதால் மக்கள் சற்றே கவலை கொள்வதாகக் குறிப்பிடுவது இப் புலவனின் மதி நுட்பத்தினதும் நேர்மைத் திறத்தினதும் மன்னன் மீது கொண்ட அன்பினதும் அழகே!அவை பரிசு பெறும் எண்னங்களைத் தாண்டிய, தன்னலம் அற்ற அன்பினதும்; மன்னன் மீது கொண்ட மதிப்பினதும் பாற்பட்டது.

இம்மன்னன் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனோடு போர் செய்து தோற்றுப் பின்னர் தனதாட்சியை மீண்டும் கைப்பற்றிக் கொண்டதாக வரலாறு சொல்லும்.அவ்வாறு நடந்து விடுமோ என்ற ஒரு சிறு கவலை இப்பாடலிலும் தொனித்து நிற்கக் காணலாம்.

பாடிப் பரிசு பெறுவதையும் தாண்டி உண்மை உரைத்த சிறப்பாலும் பாடல் பேசும் பொருளின் தரத்தாலும் மன்னனின் மகிமையை உரைத்த புலமைத் திறத்தாலும் இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

அவர் புலவர் பெருமான்; குறுங்கோழியூர்க் கிளார்.

Tuesday, February 8, 2011

கிளிப் பூ

கிளிப்பூ(parrot flower) என்றுஅழைக்கப் படும் இவ் அபூர்வ மலர் வட தாய்லாந்திலும் பர்மாவிலும் இந்தியாவின் குறிப்பிட்ட சில இடங்களிலும் காணப்படுகிறது.ஒக்ரோபர் நவம்பர் மாதங்களில் பூப்பதாம்.இதன் தாவரவியல் பெயர் Impatiens psittacina என்பதாகும்.

கிளியைப் போலவே இருக்கிறது இல்லையா?

இயற்கை எத்தனை அழகுகளைத் தான் தன்னுள்ளே கொண்டு விளங்குகிறது!கிறீஸ்துவுக்கு முற்பட்ட நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க மேதை பிளேட்டோ கூறினார்,’யார் நம்புவார்? கண்விழி போன்ற சிறிய ஓர் குமிழுக்குள்ளே பிரபஞ்சக் கோளங்களின் பிம்பங்களைக் காணும் பேராற்றல் அடங்கியிருக்கிறது என்று.’

இவ்வகிலம் முழுக்க இயற்கையின் பேராற்றலும் அழகுச் செல்வங்களும் மலிந்து கிடக்க, நாம் ஏன் இவற்றை அழித்து இயந்திரங்களை ஆக்கி நாமும் இயந்திரமாக ஓடுகிறோம்?













(படங்கள் நன்றி;கூகுள் இமேஜ்)

Tuesday, February 1, 2011

ஈழத்துக் கவிப் புலமை


ஈழத்துச் சின்னத்தம்பிப் புலவரை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.இவரது தந்தையார் ஒரு வித்துவான். ஒல்லாந்தரின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்திருந்தவர்.பெயர் வில்வராய முதலியார்.அரசாங்கப் பதவி வகித்தவர். அவரது மகனார் நம்முடைய புலவர். அவருக்குப் படிப்பிலே நாட்டம் குறைவு. ஏழு வயதுப் பாலகனுக்கு விளையாட்டிலே தான் ஆர்வம் அதிகம்.

ஒரு நாள் இவர் தன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். வடதேசத்து முதலியார் ஒருவர் வில்வராயரைத் தேடிக் கொண்டு யாழ்ப்பாணம் வருகிறார். அவருக்கு இடம் தெரியவில்லை. அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைக் காண்கிறார் அவர். அதில் ஒரு பையனை - அது தான் நம்முடைய சின்னத் தம்பியாரை அழைத்து முதலியாரின் வீடு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்.பையன் மனதில் பாடலில் பதில் இயல்பாகப் பிறக்கிறது.பாடலில் பதில் சொல்கிறான் இவ்வாறு,

“பொன் பூச்சொரியும் பொலிந்த செழுந் தாதிறைக்கும்
நன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம் - மின் பிரபை
வீசு புகழ் நல்லூரான் வில்லவரா யன்கனக
வாசலிடைக் கொன்றை மரம்”

அதாவது வில்வராயன் என்பவருடய வீட்டு முகப்பில் கொன்றை மரமானது அந்த வாசலைத் தங்க மயமாக்கிக் கொண்டு நிற்கிறது என்பது அப்பாடலின் பொருள்.

அப்படியாகக் கருவிலேயே திருவுடையவராக இவர் இருந்தார்.அவர் வளர்ந்து பெரியவராகிப் பாடிய பாடல்களில் பறாளை வினாயகர் பள்ளு மிகப் பிரசித்தம் வாய்ந்தது.அதில் மழை வருவதைப் பற்றிய ஒரு பாடல் இப்படி அமைந்திருக்கும்.

‘கருமயிலாடக் குயிலினம் வாடக்
கவியினம் ஓடக் கரடிபுல்வாய்
பொருபுலி யாளித் திரள் மரை சாரற்
புறமுழை பதறிக் கொடுகிடவே
அருங்குழை தவளக் குலவரை தகரத்
தடதிகி ரியின்முத் துதிர் தரவே
சொரிமல ரகிலப் பலமர முறியச்
சோவென மாரி பொழிந்ததுவே!’

அதாவது மயில்கள் ஆடுகின்றன, குயில்கள் வாடுகின்றன, குரங்குகள் ஓடுகின்றன, கரடி முதலிய விலங்குகள் கொடுகுகின்றன, குலமலைகள் தகருகின்றன,மரங்கள் முறிந்து நொருங்குகின்றன.சோ என்று மாரி பொழிகின்றது.

இவ்வாறு மழையினைக் கண்டு களித்தவாறு மலை நாட்டுக்குப் பயணமாகிறார் புலவர்.மலை நாட்டினை நம்முடய சின்னத் தம்பிப் புலவர் எப்படிப் பார்க்கிறார் என்று இனிப் பார்ப்போம்.அவருடய கண்களுக்கு அந்த மலை நாடு,

“மஞ்ச ளாவிய மாடங்கள் தோறும்
மயில்கள் போல் மடவார் கணஞ்சூழும்
அஞ்ச ரோருக பள்ளியின் மீமிசை
அன்ன வன்னக் குழாம் விளையாடும்
துஞ்சு மேதி சுறாக்களைச் சீறச்
சுறாக்களோடிப் பலாக்கனி கீறி
இஞ்சி வேலியின் மஞ்சளிற் போய் விழும்
ஈழ மண்டல நாடெங்கள் நாடே”

தெரிகிறது.மஞ்சு அளாவிய - முகில்கள் அளாவிக் கொண்டிருக்கின்ற மாடங்கள் தோறும் மயில்கள் போல பெண்கள் கூட்டம் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.அருகிலே தாமரைப் பொய்கை. அங்கே அந்தத் தாமரைப் பொய்கையிலே அன்னங்கள் விளையாடுகின்றன.அவற்றினருகிலேயே எருமைகளும் தண்ணீருக்குள் ஆழ்ந்து படுத்துக் கிடக்கின்றன.(மேதி - எருமை)அவ்வாறு ஆறுதலாகப் படுத்துக் கிடக்கின்ற எருமைகளைத் துள்ளி விளையாடும் சுறாக்கள் சீண்டுகின்றன.அதனால் எருமைகள் சினந்து சுறாக்களை தம் கொம்புகளினால் இடிக்கின்றன.அதனால் அதிர்ச்சியுற்ற சுறாக்கள் தம் இயல்பினால் துள்ளி மேலெழுகின்றன. அவ்வாறு துள்ளி மேலெழுந்து அருகிலே இருக்கின்ற வேலியில் போய் விழுகின்றன. அவ்வேலியோ இஞ்சியும் மஞ்சளும் கலந்து அமைந்த வேலி.செழிப்பான வயலோர வேலி.அருகிலே பலா மரங்களும் செழிப்புற்று நிற்கின்றன. அவற்றிலே ’பன்றி வயிற்றில் மோதுகின்ற குட்டிகளைப் போல பலாக்கனிகள்’ பழுத்துக் குலுங்குகின்றன.இவ்வாறு பாய்கின்ற சுறாமின்கள் பாய்கின்ற வேகத்தில் இப்படியாக முற்றிப் பழுத்திருக்கின்ற பலாக்கனிகளைக் கீறிப் பிளந்து கொண்டு மஞ்சளும் இஞ்சியும் விளைந்து கிடக்கின்ற வேலிகளில் போய் விழுகின்றன.

இவ்வாறு மலை நாட்டின் இயற்கை வளத்தினைப் பாடுகின்றார் நம்முடைய சின்னத் தம்பிப் புலவர்.

இது,

“வெளளத் தடங்காச் சினை வாளை
வேலிக் கமுகின் மீதேறி
துள்ளி முகிலைக் கிழித்து
மழைத் துளியோடிறங்கும் சோ நாட்”டுக்கும்

’பங்கப் பழனத் துழுமுழவர்
பலவின் கனியைப் பறித்ததென்று
சங்கிட்டெறியக் குரங்கிளநீர்
தனைக் கொண்டெறியும் தமிழ் நாட்டுக்கும்

வனப்பிலும் வளத்திலும் கவியின் சிறப்பிலும் வித்துவத் திறத்திலும் சற்றும் குறைந்ததல்ல வல்லவா?

அங்கே மழையைப் பொழிய விட்டு விட்டு செழிப்பான அந்த வளங்களையெல்லாம் கண்களால் கண்டு களித்த படி போவோம்.

இப்போது நூற்றாண்டுகள் கடந்து விட்டன.இப்போது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்துக்குள் நுழைந்து விட்டோம்.

அங்கே,நம்முடைய தங்கத் தாத்தா - எமக்கெல்லாம் கத்தரித் தோட்டத்து வெருளியையும் பவளக் கொடியையும் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என்று குழந்தைப் பாடல்களையும் தந்த நவாலியூர் சோம சுந்தரப் புலவரிடம் போவோம்.

அட இதென்ன!இலங்கையைப் பார்த்த கம்பன் அங்கெங்கோ சற்றுத் தொலைவில் நம்மைப் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.அவரைச் சற்றே மரியாதை செய்து கொண்டு அப்பால் போவோம்.அவன் கவிகளுக்கெல்லாம் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தவனல்லவா?

”மாகாரின் மின்கொடி மடக்கினரடக்கி
மீகார மெங்கணு நறுந் துகள் விளக்கி
ஆகாய கங்கையினை அங்கையினால் அள்ளி
பாகாய செஞ் சொலவர் வீசு படு காரம்”

இது இலங்கை வளம் சொல்லும் கம்பராமாயணத்துக் காட்சி.

ஆஞ்சனேயருக்கூடாக இலங்கையைப் பார்க்கின்றான் கம்பன்.அங்கே,பாகினைப் போல இனிய வசனங்களைப் பேசுகின்ற பெண்கள் மா கார் - கருமேகங்களுக்கிடையே ஓடிக்கொண்டிருக்கின்ற மின் கொடிகளைப் பிடித்து மடக்கிக் கைகளுக்குள் அடக்கி (விளக்குமாறினைப் போல அவற்றினை ஆக்கி) காரம் - வீடு.மீகாரம் - மேல் வீடு.அந்த மேல் மாடத்தினை,அதன் உட்பரிகைகளில் விழுகின்ற மலர்களின் மகரந்தப் பொடிகளைக் கூட்டுகிறார்கள்.அவ்வாறு அவற்றைச் சுத்தமாக்கிய பின்னால் அருகில் இருக்கின்ற அருவியிலே ஓடுகின்ற நீரினைத் தம் உள்ளங்கைகளினால் மொண்டு கொண்டு வந்து தெளித்து புளுதியினை அடக்குகிறார்கள் என்கிறான் கம்பன்.

இதோ மகாவலி கங்கை. தங்கத் தாத்தா இங்கே நின்று கொண்டிருக்கிறார். அவரிடம் வாருங்கள் ஏது சங்கதி என்று கேட்போம்.அவர் ஈழ நாட்டு நீர் வளத்தில் சொக்கி நிற்கிறார். வாருங்கள் அவர் சொல் நீரில் முக்குளித்து நீராடுவோம்.இதோ இப்போது கங்கை, மண்ணோடு மட்டுமல்ல கவிஞர் வாயில் இருந்தும் புறப்படுகிறது.

“சீரான எந் நாடு மெப்பதியு மூரும்
சோர்வான தாவரமும் மாமரமும் காவும்
பேரான கனிமரமும்பெருமரமும் தாவில்
பெட்பாரும் பென்னைகளும் வாழையொடு மேவி
நேராக ஓரிடத்து நிலையாகக் காண
நிலமடந்தை வைத்ததென நின்று பயனுதவும்
பேராதனைப் புதிய நந்தவன மகவை
பேணி அமுதூட்டிமகா வலிகங்கை பெருகும்”

சோர்வான தாவரங்கள் (சில தூங்கு மூஞ்சி மரங்கள்)சிலவும் மாமரமும் கனி மரங்களும் பெரு மரங்களும் இருக்கின்ற,பெட்பாரும் பென்னைகளும் வாழைகளோடு ஓரிடத்தில் நேராகவும் சீராகவும் நிலைத்துக் கலந்திருக்கின்ற நிலையைக் காணுகின்ற மகாவலி கங்கை ‘இது நிலமடந்தை - பூமித்தாய் வைத்ததெல்லோ என்று நினைத்து பேராதனையின் புதிய நந்தவன மகவை பேணி கவனித்து தன் தண்ணீரினால் அமுதூட்டிய படியே தாய்மை தன்மை இதுவாகும் என்று சொல்லத் தக்க படியாக விரைகிறது.

அப்படி மகாவலி கங்கையைப் பார்த்ததும் அவருக்கு மாணிக்க கங்கையிலே மூழ்கி கதிரமலையானைத் தரிசிக்கும் ஆசை மேலோங்கி விட்டது. அவர் அப்படியே மாணிக்க கங்கையில் மூழ்குதற்குப் புறப்படுகிறார். இப்போது கண்களால் அருகி கொட்டுகிறது; அது பத்தித் தமிழருவி.பாடலைப் பாருங்கள்!

“அதிரவரு மாணிக்க கங்கை தனில் மூழ்கி
அன்போடு சிவாய என அரு நீறு பூசி
முதிரும் அன்பால் நெஞ்ச முருக,விழியருவி
முத்துதிர, மெய்ப்புளக, மூரவுரை குளறப்,
புதிய செந்தமிழ் மாலை புகழ் மாலை சூடிப்
பொருவில் கந்தா சுகந்த வென்று பாடி
கதிரமலை காணாத கண் என்ன கண்ணே
கற்பூர ஒளி காணாத கண் என்ன கண்ணே”

என்று பாடிப் பரவுகிறார்.இதனைப் பார்க்கின்ற போது எப்படியும் ஒரு சிலப்பதிகாரப் பாடல் ஒன்று நினைவுக்கு வந்து போகும். அது,

“பெரியவனை மாயவனை பேருலகமெல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் கனிவாயும் செய்யக்
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார் தம் கண்ணென்ன கண்ணே”

என்பதை நினைக்கத் தோன்றும்.ஆனால் யாழ்ப்பாணத்தவருக்கு -அந்த யாழ்ப்பாண மண்ணுக்குரியவருக்கு இந்த மாணிக்க கங்கை பெருகுவதைப் பார்த்தால் நாவலர் உடனே ஞாபகத்துக்கு வருவார்.அவரது கண்டனப் பிரசாரங்கள் ஞாபகத்துக்கு வரும். அதனால் நவாலி என்ற யாழ்ப்பானத்துச் சிற்றூரைச் சேர்ந்த எங்கள் தங்கத் தாத்தா கதிரமலையின் அருவியைக் கண்டதும்,

“உண்ட செந்தமிழ் சைவ நூலமு
தோங்க நல்லை வந்தருளு நாவலன்
கண்டனப் பிரசங்கமாமென
கதிரமலையருவி காலுமே”

என்று ஞாபகமூட்டிப் பாடுகிறார்.அப்போது ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் அல்லவா. சமயப் பரம்பல் வெகு தீவிரமாக அமுல் படுத்தப் பட்டுக் கொண்டிருந்த பொழுது அது.ஆங்கிலம் ஆட்சி மொழியாகி தமிழ் இரண்டாம் பட்சமாகிக் கொண்டிருந்த வேளை. இவை இரண்டுக்கும் எதிராக தமிழையும் சைவத்தையும் மேலோங்கச் செய்யும் பொருட்டு நாவலர் எழுந்தார்.சைவத் தமிழ் பாடசாலைகள் பல ஆங்கில கிறீஸ்தவப் பாடசாலைகளுக்கெதிராக எழுந்தன. நாவுக்கு வல்லவராக நாவலர் திகழ்ந்தார்.

இங்கே மாணிக்க கங்கை கரை புரண்டோடுவதைப் பார்த்தவுடன் தங்கத் தாத்தா சோம சுந்தரராருக்கு நாவலரின் வாயிலிருந்து புறப்படும் அருவி ஞாபகத்துக்கு வந்து விட்டது.அதனால் கண்டனப் பிரசங்கமென இரைச்சலோடும் ஒரு வித ஆத்திரத்தோடும் மாணிக்க கங்கை பாய்வதாகத் தோன்றுகிறது அவருக்கு.

இந்தப் பொங்கிப் பிரவகித்து ஓடும் தண்ணீரைப் பார்த்ததும் புலவருக்கு இயற்கை அன்னை தனியாக வைத்திருக்கின்ற ஏழு வென்னீரூற்றுக்கள் நினைவுக்கு வந்து விட்டன. அவற்றைப் பற்றி இவ்வாறு பாடுகிறார்.

இதுவும் தங்கத் தாத்தா பாடி இருக்கின்ற பாடல் ஒன்று தான்.கந்தளாய் வென்னீரூற்றுப் பற்றியது.

“காதலனைப் பிரிந்தவளின் மனம் போல ஒன்று
கவி பாடிப் பரிசு பெறான் மனம் போல ஒன்று
தீது பழி கேட்டவன் தன் மனம் போல ஒன்று
செய்த பிழைக்கழுங்குமவன் மனம் போல ஒன்று
நீதி பெறா ஏழை துயர் மனம் போல ஒன்று
நிறை பழித்த கற்புடையாள் மனம் போல ஒன்று
காது மழுக்காறுடையான் மனம் போல ஒன்று
கனலேறு மெழுநீர்கள் உண்டு கன்னியாயில்”

ஏழு கிணறுகளுக்கும் ஏழு விதமான கொதி நிலை உண்டல்லவா? அவை எல்லாம் மேற்கண்டவாறு கொதித்துப் போயுள்ளன.இதில் நீராடி நல்லைக் கந்தனின் பாதம் பணிவோம்.

”ஏறு மயிலேறி விளையாடு முகம் ஒன்றே
ஈசனுடன் ஞான மொழி பேசு முகம் ஒன்றே
கூறுமடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறு படு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம்புனர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!”