Wednesday, August 26, 2009

இலக்கியத்தில் விருந்தோம்பல்



இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு

என்கிறது திருக்குறள்.செல் விருந்தினை ஓம்பிவிட்டு வரு விருந்தினைப் பார்த்திருப்பவருக்கு நல்விருந்து வானவர்களிடமிருந்து வர இருக்கிறது என்றும் மேலும் கூறிச் செல்கிறது குறள்.

நாட்டுக்கு நாடு; இடத்துக்கிடம்; வீட்டுக்கு வீடு; பண்பாட்டுக்குப் பண்பாடு உபசரிக்கும் முறைகளும் விருந்துகளும் வேறுபாடுடயன.தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பும் முறை பற்றி ஒரு பாடல் உண்டு.அது விருந்தினை அளிப்பவருக்கு இருக்க வேண்டிய ஒன்பது பண்புகள் பற்றிக் கூறுகின்றது.

'விருந்தின னாக ஒருவன் வந்து எதிரின்
வியத்த;நன் மொழி இனிது உரைத்தல்;
திருந்துற நோக்கல்;'வருக'என உரைத்தல்;
எழுதல்;முன் மகிழ்வன செப்பல்;
பொருந்துமற்று அவன்தன் அருகுற இருத்தல்;
'போம்' எனில் பின்செல்வ தாதல்;
பரிந்துநன் முகமன் வழங்கல்;இவ் வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே!'

ஒருவர் விருந்தினராக நம் எதிரில் வந்தால்

*புது மகிழ்ச்சியைக் காட்ட வேண்டும்
*உபசாரமான இனிய சொற்களைப் பேச வேண்டும்
*அன்பு கனிந்த முகத்தோடு அவரைப் பார்க்க வேண்டும்
*வாருங்கள் என்று வரவேற்க வேண்டும்
*இருக்கையில் இருந்தால் இழுந்து வரவேற்க வேண்டும்
*மகிழ்ச்சியான சொற்களைப் பேச வேண்டும்
*விருந்தினருக்குத் தக்க முறையில் இருக்க வேண்டிய நெருக்கத்தில் இருக்க வேண்டும்
*அவர்கள் விடை பெறும் போது அவர்கலோடுபோக வேண்டும்
*அவர்களுக்கு வெற்றிலை பாக்கு சிற்றுண்டி என்பன கொடுத்து உபசரிக்க வேண்டும்

என்று அந்த 9 பண்புகளையும் பாடல் வடிவில் கூறுகிறது தமிழ் இலக்கியம்.

மேலும், ஒளவையார் சற்றுக் காட்டமாக விருந்தினர் ஒரு வீட்டுக்கு வருவதும் உபசரிப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை இப்பாடலில் சற்று இடித்தே உரைக்கிறார்,

'மாடில்லான் வாழ்வு,மதியில்லான் வாணிப, நன்
நாடில்லான் செங்கோல் நடாத்துவதும் - சூடும்
குருவில்லா வித்தை,குணமில்லாப் பெண்டு,
விருந்தில்லா வீடு விழல்'

என்கிறார்.செல்வமில்லாதவனுடய வாழ்க்கையும் மதிநுட்பமில்லாதவனுடய வாணிபமும் நல்ல நாடில்லாதவனுடய செங்கோலும் நல்ல ஆசிரியனில்லாத கல்வியும் நல்ல குணமில்லாத பெண்களும் விருந்தினரில்லாத வீடும் வீண் -பயனற்றது என்கிறார் அவர்.

அக்காலத்தில் சில குடும்பத்தினர் சிறப்பாக பெண்கள் விருந்தினரைச் சிறப்பாகப் போற்ற வில்லைப் போலும். அது பற்றியும் ஒளவையார் சில இடங்களில் பாடியுள்ளார்.

அன்பில்லாமல் இட்ட அமுதினை உண்ணும் போது ஏற்பட்ட வலியினை அவர் பாடுகிறார் இப்படி,

காணக்கண் கூசுதே! கையெடுக்க நாணுதே!
மாணொக்க வாய் திறக்க மாட்டாதே!- வீணுக்கென்
என்பெல் லாம்பற்றி எரிகிறது;ஐயையோ!
அன்பிலாள் இட்ட அமுது!

விருந்தினரை உபசரிக்காத குடும்பத்துப் பெண்டிரைப் பற்றியும் அவர் பல இடங்களில் சாடியுள்ளார்.'கூறாமல் சன்னியாசம் கொள்' என்றும் 'நெருப்பினிலே வீழ்ந்திடுதல் நேர்' என்றும் அவ்வாறான குடும்பத்துப் பெண்டிரைக் கொண்ட கணவர்மாருக்கு அவர் புத்திமதியும் கூறுகிறார்.பின்வரும் பாடல் அது போன்ற ஒன்று தான்.குணக் கேடு கொண்ட மனைவியைக் கொண்ட கணவன் படும் பாட்டை அவர் இப்படி விபரிக்கிறார்,

'இருந்து முகந்திருத்தி,ஈரோடு பேன்வாங்கி,
'விருந்து வந்ததென்று' விளம்ப,- வருந்தி
ஆடினாள்;பாடினாள்;ஆடிப் பழமுறத்தால்
சாடினாள் ஓடோடத் தான்'

ஆனால்,மிகக் கோபக் காரரான காளமேகம் சற்று வேடிக்கையும் நகைச்சுவயும் ததும்ப ஒரு பாடல் பாடுகிறார்.நல்ல வெய்யில் நேரம்! தொண்டை எல்லாம் வரண்ட தாகம்! இடைச்சி ஒருத்தி மோரோ மோர் என்று கூவியவாறு மோர் கொண்டு போகிறாள்.வாங்கி அருந்திப் பார்க்கிறார் காள மேகம்.அதுவோ மிக தண்ணீர் மிக்கதாகப் படுகிறது அவருக்கு.பெண் கையால் கிட்டிய மோர் அல்லவா! வைய மனம் வரவில்லை;நகைச்சுவையோடு பாடல் பிறக்கிறது அவருக்கு, இப்படி;

'கார்' என்று பேர் படைத்தாய்
ககனத்து உறும்போது
'நீர்' என்று பேர் படைத்தாய்
கொடுந்தரையில் வந்ததற்பின்
வார் ஒன்று மென்முலையார்
ஆய்ச்சியர்கை வந்ததற்பின்
'மோர்' என்று பேர் படைத்தாய்
முப்பேறும் பெற்றாயே'

மோரே! நீ வானத்தில் இருக்கும் போது மேகம் என்ற பெயரைக் கொண்டிருந்தாய்.பரந்த மண்ணுலகைச் சேர்ந்தவுடன் நீர் என்று பெயர் கொண்டாய். கச்சையணிந்த மென்மையான தனங்களையுடைய இடைச்சியர் கையில் சேர்ந்தவுடன் மோர் என்ற பெயரை பெற்றுக் கொண்டாய்.இவ்வாறு கார்,நீர், மோர் என்று மூன்று பெயரையும் பெற்றதால் முப்பேறும் பெற்றுவிட்டாய்.அதிகளவு நீர் கலக்கப்பட்ட மோர் என்பதை சிறிய எள்ளலும் நகைச்சுவையும் இழையோடப் பாடியிருக்கிறார் காள மேகம்


'மோப்பக் குழையும் அனிச்சம் - முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து'

அல்லவா?

Saturday, August 1, 2009

பாலி ஆறு நகர்கிறது


அங்கும் இங்குமாய்
இடையிடையே வயல் வெளியில்
உழவு நடக்கிறது
இயந்திரங்கள் ஆங்காங்கு
இயங்கு கின்ற ஓசை
இருந்தாலும்
எங்கும் ஒரே அமைதி

ஏது மொரு ஆர்ப்பாட்டம்
இல்லாமல் முன் நோக்கி
பாலி ஆறு நகர்கிறது.
ஆங்காங்கே நாணல்
அடங்காமல் காற்றோடு
இரகசியம் பேசி
ஏதேதோ சலசலக்கும்.
எண்ணற்ற வகைப் பறவை
எழுப்பும் சங்கீதங்கள்.
துள்ளி விழுந்து
'துழும்' என்னும் வரால்மீன்கள்.

என்றாலும் அமைதியை
ஏதோ பராமரிக்கும்
அந்த வளைவை அடுத்து
கருங்கல் மறைப்பில்
அடர்ந்துள்ள நாணல் அருகே
மணற் கரையில் இரு மருங்கும்
ஓங்கி முகடு கட்டி
ஒளி வடிக்கும்
மருத மர நிழலில்
எங்கள் கிராமத்து
எழில் மிகுந்த சிறு பெண்கள்
அக்குவேறு ஆணிவேறாய்
ஊரின் புதினங்கள்
ஒவ்வொன்றாய் ஆராய்ந்து
சிரித்து
கேலி செய்து
சினந்து
வாய்ச்சண்டை யிட்டு
துவைத்து
நீராடிக் களிக்கின்றார்

ஆனாலும்
அமைதியாய்
பாலி ஆறு நகர்கிறது
அந் நாளில்
பண்டார வன்னியன்
படை நடந்த அடிச் சுவடு
இந்நாளும் இம்மணலில்
இருக்கவே செய்யும்
அவன் தங்கி இளைப்பாறி
தானைத் தலைவருடன்
தாக்குதலைத் திட்டமிட்டு
புளுதி படிந்திருந்த
கால்கள் கழுவி
கைகளினால் நீரருந்தி
வெள்ளையர்கள் பின் வாங்கும்
வெற்றிகளின் நின்மதியில்
சற்றே கண்ணயர்ந்த
தரை மீது அதே மருது


இன்றும் நிழல் பரப்பும்
அந்த வளைவுக்கு அப்பால்அதே மறைப்பில்
இன்றும் குளிக்கின்றார்
எங்களது ஊர் பெண்கள்
ஏது மொரு
ஆர்ப்பாட்டம் இல்லாமல்
பாலியாறு நகர்கிறது.

வ.ஐ.ச.ஜெயபாலன்,
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் என்ற நூலில் இருந்து.