Monday, March 2, 2009

தலைப்பாகைத் தமிழ்

வழக்கொழிந்த தமிழ் சொற்களுக்காக;


நாட்டு வளம்

ஒன்று:-

சீவக சிந்தாமணியிலே ஏமாங்கதம் என்றொரு நாடு, அது பற்றிய வருணணை இது,

"காய் மாண்ட தெங்கின் பழம் வீழக் கமுகி னெற்றிப்
பூமாண்ட தீந்தேன் தொடை கீறி பருக்கை போழ்ந்து
தேமங்கனி சிதறி வாழைப் பழங்கள் சிந்தும்
ஏமங்கதமென்று இசையாற் றிசைபோய துண்டே"

நயம்: தென்னைகள் காய்த்துக் குலுங்குகின்றன.பாரம் தாங்காமல் அவை பழுத்து வீழ்கின்றன.அது வீழ்கின்ற அதிர்ச்சியினாலே, அதற்குக் கீழே நிற்கின்ற கமுகு மரங்களின் இனிய தேனைப் பொதித்து வைத்திருக்கின்ற பாழைகள் கீறுப் பட்டுப்(வெடித்து) பூங் கொத்துகள் தாறு கிழிகின்றன.அவற்றுக்கு அயலிலே இருக்கின்ற மாம்பழங்கள் கொட்டுப் படுகின்றன,வாழைப் பழங்கள் சிந்துப் படுகின்றன, ஏமாங்கதம் என்ற நாட்டிலே!

எவ்வளவு வளம் நிறைந்த நாடு பார்த்தீர்களா? நாட்டிலே மட்டுமா! ஏட்டிலே! பாட்டிலே யுமல்லவா வளம் கொளிக்கின்றது?

வழக் கொழிந்த சொல்;

தொடை- பாளை, போழ்ந்து- வெடித்து.


இரண்டு:-

தமிழ் இலக்கியப் பரப்பில் ஒளவையாருக்கும் ஒட்டக் கூத்தருக்கும் நடக்கும் வித்துவச் சண்டை எப்போதும் பிரசித்தம்.இது அதனோடு சேர்ந்த ஒரு பாடல் தான்.சுருக்கம் கருதி அதனைத் தவிர்த்து விட்டு நாட்டு வர்ணணையோடு மட்டும் நிற்கிறேன்.இது ஒட்டக் கூத்தர் பாடிய பாட்டு,

"வெள்ளத் தடங்காச் சினை வாளை
வேலிக் கமுகின் மீதேறித்
துள்ளி முகிலைக் கிழித்து மழை
துளியோடிறங்கும் சோநாடா..."

நயம்: கரை புரண்டு வரும் வெள்ளத்துக்குள் குதித்தோடி வரும் கருக்(சூல்) கொண்ட வாளை மீன் வேலியிலே நிற்கின்ற கமுகு மரத்தின் மீது துள்ளிப் பாய்ந்து,மழை பொழியத் தயாராய் இருக்கின்ற முகிலையும் கிழித்து, மழைத் துளியோடு கீழே இறங்குகின்ற வளத்தினைக் கொண்ட சோழ நாட்டவனே...என்று போகிறது அப்பாடல்.

எவ்வளவு செழிப்பான பூமி பார்த்தீர்களா?

வழக் கொழிந்த சொல்;

சினை கொண்ட - கருவுற்ற, சூல்கொண்ட, கற்பமடைந்த.


மூன்று:-

இது புகழேந்தியாரின் சோழ நாட்டு வர்ணணை.புகழேந்தி ஒளவையாருக்கும் ஒட்டக் கூத்தருக்கும் இளையவர்.புகழேந்தி பாடுகிறார் இப்படி,

"பங்கப் பழனத் துழுமுழவர்
பலவின் கனியைப் பறித்ததென்று
சங்கிட் டெறியக் குரங்கிளநீர்
தனைக் கொண்டெறியும் தமிழ் நாடா..."

நயம்: சேறு பொருந்திய வயலிலே உழுகின்ற உழவர்களுக்குத் தண்ணீர் விடாய்க்கிறது( தாகமெடுக்கிறது).அதற்கு அவர்கள் ஒரு உபாயம் செய்கிறார்கள்.குரங்குகள் எல்லாம் பலாக்கனிகளைப் பாழ் படுத்துகின்றன என்று பாவனை செய்து கொண்டு குரங்குகளுக்கு நிலத்தில் கிடக்கும் சங்குகளைப் பொறுக்கி எறிகிறார்களாம். உடனே குரங்குகள் கோபம் கொண்டு செவ்விளநீர்களைப் பறித்து உழவர்களின் மேல் விட்டெறிகின்றனவாம். அதன் மூலமாக உழவர்கள் தாக சாந்தி செய்துகொள்ளும் மக்களைக் கொண்ட தமிழ் நாட்டவனே என்று தொடர்கிறது அப் பாடல்.(கவிஞர் சொல்ல வருகின்ற கருத்து இதன் பின்னர் தான் வரும்,சுருக்கம் கருதி அவை இடம் பெறவில்லை.)

வழக்கொழிந்த சொல்;

பங்கம் - சேறு.


நான்கு:-

சரி ஈழ நாட்டு வளத்தையும் சற்றுப் பார்ப்போமே!பறாளை விநாயகர் பள்ளில் எங்கள் சின்னத் தம்பிப் புலவர் இப்படிப் பாடுகிறார்.

"மஞ்சளாவிய மாடங்கள் தோறும்
மயில்கள்போல் மடவார்கணஞ் சூழும்
அஞ்ச ரோருரக பள்ளியின் மீமிசை
அன்ன வன்னக் குழாம் விளையாடும்
துஞ்சு மேதி சுறாக்களை சீறச்
சுறாக்களோடிப் பலாக்கனி கீறி
இஞ்சி வேலியின் மஞ்சளிற் போய் விழும்
ஈழ மண்டல நாடெங்கள் நாடே"

நயம்; முகில்களை எட்டுகின்ற மாடங்கள் தோறும் மயில்களைப் போன்ற இளம் பெண்கள் சூழ்ந்திருக்கிறார்கள்.தாமரைக் குளத்தில் அழகான தாமரைப் படுக்கையின் மீது அன்னக் கூட்டங்கள் விளையாடுகின்றன.அதற்குள் (குளத்துக்குள்)உறங்கிக் கொண்டிருக்கும் எருமை மாடுகள் சுறாக்களுக்கு இடஞ்சலாக இருப்பதால் அவைகள்(சுறாக்கள்)(இடமில்லமையால் மேலே துள்ளி)ஓடிப் பலாக் கனிகளைக் கீறி இஞ்சி வேலியின் அருகிலிருக்கும் மஞ்சள் செடியின் மேல் விழும் நாடு எங்கள் ஈழ நாடு என்கிறார் சின்னத் தம்பிப் புலவர்.

வழக்கொழிந்த சொல்:

மஞ்சு- முகில்,பள்ளி - படுக்கை(பள்ளியறை-படுக்கையறை), மேதி - எருமை.


ஐந்து:-

கம்பன் காட்டிய ஈழ வளத்தைப் பார்க்காமல் போக முடியுமா என்ன? அவர் பாடுகிறார் இப்படி,

"மாகாரின் மின் கொடி மடக்கின ரடக்கி
மீகார மெங்கனு நறுந்துகள் விளக்கி
ஆகாய சங்கையினை யங்கையினி னள்ளிப்
பாகாய செஞ்சலவர் வீசு படு காரம்"

நயம்; கார் மேகங்களுக்கிடையே மின்னுகின்ற மின் கொடிகளாகிய மின்னல்களை வலிந்து மடக்கி அடக்கிப் பிடித்து விளக்குமாறு (துடைப்பம்)போல் செய்து மீகாரமாகிய மேல் வீடுகள் (மாடி வீடுகள்,மேல் மாடம்)தோறும்(உட் பரிகைகளில்) வீழ்ந்து கிடக்கின்ற நறுந் துகள் - பூக்களில் இருந்து கொட்டுப் பட்டுக் கிடக்கின்ற மகரந்தத் துகள்களை நீங்குமாறு நன்கு விளக்கி(பெருக்கி,இல்லாது செய்து) பக்கத்திலே ஓடுகின்ற அருவியிலே ஓடுகின்ற தண்ணிரை உள்ளங் கைகளிலே மொண்டு( முகர்ந்து) கொண்டு வந்து தெளிக்கின்ற மாளிகைகள் நிறைந்த நாடு என்கிறார் கம்பர்.எத்தனை அழகான கண்ணுகர் கனி இது!!

வழக்கொழிந்த சொல்;

மாகார்-கார் மேகம், காரம்-வீடு, மீகாரம்-மேல்வீடு, மின் கொடி-மின்னல், அங்கை -அகங்கை,உள்ளங்கை.


ஐந்து பாடல்கள்; பத்துச் சொற்கள்.பத்து வந்து விட்டது தானே?


இன்னும் ஒரு சொல் இருக்கிறது. அதனை விட்டு விட்டுப் போக மனம் வரவில்லை.அந்தச் சொல்,

கார்த்திகைப் பூ - செங்காந்தள் மலர்.


(கார்த்திகை மாதங்களில் வரண்ட பிரதேசங்களில் பூப்பது. சிவப்பும் மஞ்சளும் அதனுடய நிறம். 6 மெல்லிய நீளமான ஓரங்கள் சுருள் சுருளாக அமைந்த அடியில் அகன்று முன் புறம் உள் நோக்கிக் குவிந்த இதழ்களைக் கொண்ட அழகிய பூ.கொடி வகையைச் சார்ந்தது. ஈழத்தில் வேலி ஓரங்களில் கார்த்திகை மாதங்களில் பூத்திருக்கும்.

ஈழ விடுதலைப் போரில் முதல் போராளி இறந்தது ஒரு கார்த்திகை மாதம்.அதனால் இது ஈழத் தமிழர்களின் தேசியப் பூ. மஞ்சளும் சிவப்பும் எங்கள் தேசிய நிறம்.)


விடுதலை வேள்வியில் ஆகுதி ஆகிய அனைத்து போராளிகளுக்கும் பொது மக்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் "தலைப்பாகைத் தமிழின்" மண்டியிட்ட வணக்கங்கள்.

ஓம் சாந்தி.



நான் தெரிவு செய்திருக்கும் மூன்று பேர்;

1) ஜெயன் மகாதேவன் - சீரிய சிந்தனைகளின் சொந்தக் காரன்.
http://jeyan15.blogspot.com

2) உமா பார்வதி -அன்பாலும் ஜீவகாருண்யத்தாலும் என்னை ஆகர்ஷித்தவர்.
http://umashakthy.blogspot.com

3) கானா பிரபா - பண்பான மனிதர்.
http://kanapraba.blogspot.com

வழக்கொழிந்த தமிழ் சொற்கள் பற்றி (குறைந்த பட்சம் 10) நீங்கள் ஒரு பதிவு போடுவதோடு மேலும் 3 பதிவர்களை நீங்கள் தெரிவு செய்யவும் வேண்டும்.

ரசிகாவுக்கு நன்றி.
http://rasigarasigan.blogspot.com

2 comments:

  1. மணிமேகலா அட்சய பாத்திரம் உங்கள் கைகளுக்கே வந்துவிட்டதா? நம்பவே முடியவில்லை. உங்களது இலக்கியத் தாகத்துக்கு தீனீ தருவதற்கு என்னிடம் ஏதுமில்லை ஆனாலும் ஆர்வத்தோடு வாசித்தேன். அது உங்களுக்கு சந்தோசம்தானே?

    நிறைய எழுதுங்கள் நாங்கள் உங்கள் வீட்டுக்கு வந்து கொண்டே இருப்போம்.

    ReplyDelete
  2. நன்றி குட்டிப் பெண்ணே!

    "இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு" தானே!

    அடிக்கடி வந்து போனால் ம்கிழ்ச்சியாக இருக்கும்.

    ReplyDelete