Tuesday, February 10, 2009

அழிவின் விளிம்பில்.....!

உள் நோக்கி ஒரு பார்வை,

இயற்கை ஒரு நியதிக்குட்பட்டு இயங்கி வருகிறதென்பதும்,பிரபஞ்சத்தின் இரகசியம் ஆத்மாவால் கண்டறியப்பட வேண்டியதென்பதும்,இயற்கைத்தாயின் சீற்றத்திற்கு நவீன விஞ்ஞானத்தாலும் விடை கண்டு பிடிக்க முடியவில்லை என்பதும் கடந்த காலங்கள் எமக்கு உணர்த்தும் பாடங்கள் ஆகும்.

இந்த கண்ணுக்குப் புலப்படாத நீதியை கடவுள் என்று இந்து மதம் சுட்டும்.எல்லா மதங்களும் அன்பையே விதைக்கின்றன.அவை எல்லாம் நல்வழியையே புகட்டுகின்றன.வாழும் வழிகளை வகுத்துத் தந்தன.எந்த ஒரு தாக்கத்திற்கும் சமனும் எதிருமான மறு தாக்கம் உண்டென்பதை நவீன விஞ்ஞானமும் ஏற்றுக்கொண்டிருக்கிறது.விஞ்ஞானம் முடிவடைகின்ற இடத்தில் மெய்ஞானம் ஆரம்பமாகும் என்பார்கள்.இவற்றை உணரத் தான் எமக்கு நேரம் இருக்கவில்லை.

இன்று நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற இயற்கை அனர்த்தங்கள் இயற்கையோடு நாம் பேணிக்கொள்ள மறுத்த தோழமை இன்மையினதும் புறக்கணிப்பினதும் நேரடிப் பின் விளைவுகளே.விஞ்ஞானம் என்ற பெயரிலும் தொழில் நுட்பம் என்ற பெயரிலும் வாழ்க்கை வசதிகளுக்கு நாம் கொடுத்த முக்கியத்துவத்தை நல்ல பண்புகளுக்கு நாம் கொடுக்கத் தவறினோம். அன்பு,இரக்கம்,அகிம்சை,சமத்துவம்,பொதுநோக்கு அழிந்து சுயநலம், ஆணவம் ஆகியவற்றை ஆட்சி செய்ய அனுமதித்தோம்.

அதன் விளைவுகளே இன்றய உள்நாட்டுப் போர்.மனிதனால் மனிதனை மனிதனாக மதிக்க முடியவில்லை.இனத்தால்,மதத்தால்,மொழியால்,பிரதேசத்தால்,நிறத்தால்,அந்தஸ்தால் மனிதர்கள் பிளவு பட்டுப் போயினர்.ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் சமன் பாடில்லை,சுயநலமும் ஆதிக்க மனப்பாண்மையும் மனிதத் தலைவர்களை முழுமையாக ஆட்கொண்டு விட்டன.மனச்சாட்சியை மறந்த மனிதன் தனது தேவைக்காக எதுவும் செய்யத் தலைப்பட்டு விட்டான்.

மேலும் நாங்கள்,பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்,எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான், கணணியை கண்டான் காகிதம் மறந்தான் என்றெல்லாம் பெருமைப் படலாம் தான். கூடவே, ஆயுதம் கண்டான் அழிவுகள் செய்தான்,ஆணவம் கொண்டான் ஆட்களைக் கொன்றான், உண்மைகள் மறந்து அழிந்தே போனான் என்பதினையும் கூடவே சேர்ப்போம்.

சுனாமிக் காலத்தில் பூமி தன் அச்சில் இருந்து .3 அளவு விலகி இருக்கிறது என்று செய்திகள் தெரிவித்த போது, கடலுக்கடியில் பல மைல்கள் நீளத்திற்கு பாரிய பிளவு ஏற்பட்டிருக்கிறது என்று கணிப்புகள் தெரிவிக்கப்பட்ட போது,இரண்டு வருடங்களுக்கு முன் 2012ல் உலக அழிவு வர இருக்கிறது என்று ஆவணப் படம் ஒன்றில் சொல்லப் பட்ட போது உதடு மீறாத புன்னகையோடு அவற்றைப் புறக்கணித்தவர்களுக்குள் நானும் ஒருத்தி தான்.

இயற்கையை - அதன் நியதியைக் - கவனிக்க மனிதன் மறுத்து விட்டான்.அதன் இயக்கம்,நிரந்தரமற்ற மனித வாழ்வின் இரகசியம் பற்றி எவருக்கும் அக்கறை இருக்கவில்லை.இயற்கையின் வளங்களை இரக்கமின்றி அழித்தோம்.மரங்களை கொன்றொழித்தோம்.இரசாயணங்களால் காற்றை மாசு படுத்தினோம்,யுத்த தளபாடங்களால் பூமியை நஞ்சாக்கினோம் அற்ப எண்ணை வளங்களைப் பெற அந்நாட்டுக் குடிகளை ஆயிரமாயிரமாய் கொன்று குவித்தது இன்னொரு அரசு.மதம், நிறம், இனம், மொழி, நாடு என்று இறந்த மக்கள் தொகை தான் எத்தனை!

மனிதன் மனிதனைக் கொல்வது போக, இயற்கையின் கோப தாண்டவம் இப்போது ஆரம்பமாகி விட்டது.அதற்குப் பதில் சொல்லும் காலம் நெருங்கி வந்து விட்டது. குண்டு வெடிப்புகளால் ஏற்படும் உயிரிழப்புப் போக,கடல் பொங்கி எழுந்து இலட்சோபலட்சம் மக்களைக் கொண்டு சென்றது. சூறாவளி வந்து சூறையாடிச் சென்றது,சென்ற ஆண்டு ஒலிம்பிக்கின் முன் சீனாவில் நிலநடுக்கத்தால் ஆயிரமாயிரம் மக்கள் மாண்டு போயினர்.பெரும் பாலானோர் குழந்தைகள் என்பது தான் அதில் இன்னும் கவலை தரும் செய்தி(ஒரு குழந்தைக் கொள்கையைக் கொண்ட நாடு சீனா).எரிமலைகளோ பொங்கி வழியத் தயாராக இருக்கின்றன.

இப்போது அவுஸ்திரேலியக் கண்டத்திலேயே ஒரு மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு,அதே நாட்களில் அருகிலிருக்கும் அடுத்த மானிலத்தில் வரலாறு இது வரை காணாத வெப்பம்! காடுகள் தீப் பற்றி எரிகின்றன.மனித வலுவையும் நவீன சாதனங்களையும் மீறிக் கட்டுக்கடங்காது பற்றி எரிகிறது தீ.இறந்தோர் எண்ணிக்கை இரண்டு நாட்களில் மட்டும் 174,பாடசாலை ஒன்று முழுவதுமாகத் தீக்குள், பிள்ளைகள் எத்தனை என்பதைக் கண்டறிய முடியவிலை!ஊர் ஒன்று எரிந்து முழுவதுமாக நாசமாகியிருக்கிறது.இன்னும் போக முடியாதவாறு பற்றி எரிகிறது தீ,நவீன தொழில் நுட்பங்களால் ஒன்றும் செய்ய முடிய வில்லை என்ற உண்மையை ஜீரணிக்க முடியவில்லை,எவராலும்.

அடுத்த மாநிலத்தில் வெள்ளத்தோடு வந்த முதளை 5 வயதுக் குழந்தையை முழுதாகச் சாப்பிட்டு விட்டது,வீதிகளில் வள்ளத்தில் போகிறார்கள் மக்கள்.இவ்வாறு அடிக்கடி நடக்கப் போகிறது என்று அறிவுறுத்துகிறது அவுஸ்திரேலிய அரசு.

நாட்டின் தலைவர்கள் தலமைத்துவப் பண்பு, தூர நோக்கு,மக்கள் நலன் என்பவற்றை மறந்து மேலதிக்கம்,விவேகமற்ற தந்திர பரிபாலனம்,அதிகார துஸ்பிரயோகம் என்பவற்றுள் ஆட்பட்டுப் போயினர்.முன்நாள் அமெரிக்கத் தலைவர் ஜோஜ்புஷ் உம் அவுஸ்திரேலியாவின் முன்னாள் அதிபர் ஜொன்ஹெவேட்டும் பூகோளம் வெப்பமடைதல் பற்றி எந்த வித அக்கறையும் கொள்ளாது தம் விவேகமற்ற வெளி நாட்டுக் கொள்கைகளில் முனைப்போடு இருந்ததை உலகம் அறியும்.

பூகோளம் வெப்பமடைவதால் துருவப் பிரதேசத்துப் பனி உருகி கடல் மட்டம் உயரப் போகிறது என்றொரு செய்தி!

இன்று உலகம் எதிர் கொள்ளும் இன்னொரு சவால் உலகப் பொருளாதாரத்தின் சரிவு!

இப்போது உலகமே ஒரு பிரமாண்டமான அணுகுண்டாக அல்லவா உருமாறி இருக்கிறது.வல்லரசுகள் தயாரித்து வைத்திருக்கும் அணுகுண்டுகள் போதாதா பூகோளம் வெடித்துச் சிதற!

மது, புகை, போதைவஸ்து, எயிட்ஸ்,கான்சர் என அழிவோர் இன்னொருபுறம்.கற்பழிப்பு,கொலை, காணாமல் போவோர்,சிறையில் சித்திரவதைப் படுவோர் என்று ஒரு புறம்.வறுமை,தொற்று நோய்,அடிப்படைவசதிகள், வேலைவாய்ப்பின்மை இவைகளால் இறப்போர் இன்னொருபக்கம்.

தாயகத்தில் இருந்து வரும் செய்திகளும் உலகின் பாராமுகமும் இஸ்லாமிய தேசத்தில் நடக்கும் போர் அக்கிரமங்களும் இன்னும் வயிற்றில் புளியைக் கரைக்கின்றன.நாளாந்தம் மக்கள் செத்து மடிகிறார்கள்.கேட்போர் இன்றி மக்கள் நாலு புறமும் சுற்றி வளைக்கப்பட்டு குண்டு மாரி பொழிகிறார்கள்.போதாதென்று கட்டு நாயக்கா விமான நிலயத்தில் தப்பி ஓட நின்ற தமிழ் இளைஞர்கள் இரகசியப் புலனாய்வுப் படையினரால் கைது செய்து கொண்டு போகப் படுகிறார்கள்.சித்திரவதைகளை நினைக்கவே நெஞ்சு நடுங்குகின்றது.

பாலூட்டி சீராட்டி வளர்த்த எம் பிள்ளைகள்!

அழிவின் விழிம்பில் உலகம்!

No comments:

Post a Comment