Tuesday, January 27, 2009

நம்பிக்கை

எங்கும் சோகம்,அவலம்,பீதி,ஓலம்.......

ஈழத்தின் சோகம் உலக எல்லை வரைப் பரந்திருக்கும் தமிழர்களின் மனங்களிலும் பாரிய பாரமாய்க் கனக்கிறது.வீதியில் 2 தமிழர்கள் சந்தித்தால் கேட்கும் முதல் கேள்வி "ஊர் புதினம் ஏதாவது தெரியுமோ?",வேலையில் 2 தமிழர்கள் சந்தித்தால் கேட்கின்ற முதல் கேள்வி,"நெற்றில நியூஸ் பாத்தனீங்களோ? என்ன லேற்றஸ்ட்?"தோழிகள் தொலை பேசி எடுத்தால் கேட்கும் முதல் கேள்வி,"ஊரில உங்கட ஆக்கள் சுகமோ?"அக்காள் கதைத்தால் கேட்பது "என்னவாமடி நடக்கப் போகுது?" தங்கை பதட்டத்தோடு உலகின் ஒரு மூலையில் இருந்து தொலைபேசி எடுத்துக் கேட்பாள்,"அக்கா,எங்கட ஆக்கள் எல்லாம் என்ன பாடோ தெரியாது."களைத்துப் போய் வேலையால் வீடு வந்தால் வயதான பெற்றோர்,வானொலிகளிலும் பத்திரிகைகளிலும் வராத நம்பிக்கை மிகுந்த சொற்களை விழிகளில் தேக்கி,"பிள்ளை உந்த கொம்பியூட்டரில ஏதாவது கடசியாப் போட்டிருப்பங்கள் ஒருக்காப் பாத்துச் சொல்லுறியே" கெஞ்சும் இந்த விழிகளுக்கு எல்லாம் என்ன நம்பிக்கையை நான் தர?

எங்கும் அவலத்தின் ஓலம்!மரணத்தின் வாடை!ஆதரவு தேடி அலையும் கரங்கள்!உணவும் மாற்றுடையும் மருந்தும் நிற்க நிழலும் இல்லா நிலை! உலகின் புறக்கணிப்புகள்! எட்டாத தூரத்தில் நாங்கள்! என் இனமே!.... என் சனமே!.........

நம்பிக்கை இன்னும் மீதமிருக்கிறதோ? வ.ஜ.ஜெ.ஜெயபாலன் கவிதை ஒன்று.

நம்பிக்கை


துனை பிரிந்த குயிலொன்றின்
சோகம் போல
மெல்ல மெல்ல
கசிகிறது ஆற்று வெள்ளம்.

காற்றாடும் நாணலிடை
மூச்சுத் திணறி
முக்குளிக்கும் விரால் மீன்கள்.

ஒரு கோடை மாலைப் பொழுது அது.
என்னருகே
வெம்மணலில்
ஆலம் பழக் கோதும்
ஜந்தாறு சிறு வித்தும்
காய்ந்து கிடக்கக் காண்கிறேன்.

என்றாலும்,
எங்கோ வெகு தொலைவில்
இனிய குரல்எடுத்து
மாரி தன்னைப் பாடுகிறான்
வன்னிச் சிறான் ஒருவன்.

வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்வோம்.

என் இனமே.....என் சனமே.....

3 comments:

  1. ஒவ்வொரு நாளும் பதட்டமாகவும் கவலையாகவும் கழிகிறது. இனவெறியின் உச்சகட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது, காலம் கைக்கட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த துயர் என்று முடியும்? எம் மக்களுக்கு எப்போது சுதந்திரக் காற்றும் நிம்மதியான சுவாசமும் நிச்சயம்? தோழி நம்பிக்கை வைக்கலாம்...அவர்கள் வீழ மாட்டார்கள். இறுதி வரை போராடியே தீருவார்கள்...

    ReplyDelete
  2. வாருங்கள் உமா,

    ஆம், இன்னும் ஒரு துளி நம்பிக்கை மீதமிருக்கிறது.

    உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றி உமா.

    ReplyDelete
  3. உலகத் தமிழர்களின் நம்பிக்கை வீண் போகாது. நிச்சயம் ஒரு நாள் எமக்கு விடிவு வரும். அதுவரை நம்பிக்கையுடன் கடவுளைக் கும்பிடுவோம்.

    கௌரி

    ReplyDelete