Saturday, January 17, 2009

குழந்தைகள் உலகம்

என் நண்பர்கள் என்னைப் பற்றி வைக்கின்ற நேர்மையான விமர்சனம் விடயங்களை நான் தத்துவார்த்த ரீதியாகவே பார்க்கின்றேன் என்பதாகும்.அது மிகவும் உண்மை என்பதை இந்த வலைத்தளத்தை ஆரம்பித்த பிறகு முழுமையாக உணர்கிறேன்.

வாரத்திற்கு 2 விடயங்களைப் போடலாம் என்று நினைத்து விடயங்களைப் பட்டியல் இட்டபோது இந்த உண்மை எனக்குப் புலனாயிற்று.என் நண்பர்கள் என்னை மன்னிக்க!எனக்கு ஆர்வம் மிக்க விடயங்கள் ஜனரஞ்சகமாக இருப்பதில்லை என்பது உண்மை தான்.இன்று நீங்கள் சொன்னபடி இருக்க முயற்சிக்கிறேன்.நீங்கள் என்னோடு மிகுந்த பொறுமையாக இருக்க வேண்டியதும் அவசியம் என்பதால் இந்த அறிமுகம் இங்கு அவசியமாயிற்று.

விடயத்திற்கு வருகிறேன்.குழந்தைகள் உலகம் எப்போதும் வசீகரமானவை.சிட்னிக்கு வந்த ஆரம்ப நாட்களில் என் வேலை early child hood center ல் அமைந்திருந்தது.அங்கு 3-5 வயது வரையான மாணவர்கள் வருவார்கள்.அதில் ஒரு மாணவன், லூக் என்று பெயர்.மிகுந்த குழப்படி என்பது எல்லோரது அபிப்பிராயமாகவும் இருந்தது( சக மாணவர்கள் உட்பட).முழுக்க முழுக்க கத்தோலிக்க அவுஸ்திரேலியர்களால் சூளப் பட்ட அந்த வளாகத்தில் நான் வந்து சேர்ந்த முதல் நாளே எனக்கு லூக் கைப் பற்றிய பிரத்தியோக அறிவுரை வழங்கப் பட்டது.எனக்கு அது முதல் வேலை என்பதால் மிகுந்த சிரத்தையோடு அவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டேன்.

எனது அறிமுகம் குழந்தைகளிடத்தில் சுவரிஸத்தைத் தூண்டியிருந்ததை உடனடியாகக் காணமுடிந்தது.நிறம்,கூந்தல்...இன்னபிற இத்யாதிகள்.எனினும் வேலையில் எனக்கு சிரமமிருக்கவில்லை.ஒரு வாரத்தில் என் வேலைகளை கற்றுக் கொண்டுவிட முடிந்தது.

அவர்களின் மதிய உணவின் பின்னர் பெரும்பாலான மாணவர்கள் தூங்குவது வழக்கம்.ஒரு சிலமாணவர்கள் தூங்குவதில்லை. அவர்களுக்கான விளையாட்டுகளை ஒழுங்கு செய்து வைக்க வேண்டியதும் மேற்பார்வை செய்ய வேண்டியதும் எனது கடமை.

அன்றும் வழமை போல் மேசையில் வண்ணங்கள் தீட்டுவதற்கான உபகரணங்களை ஒழுங்கு செய்து விட்டு பார்த்துக் கொண்டிருந்தேன்.லூக் அமைதியாக வண்ணம் தீட்டிக்கொண்டிருந்தான்.அருகில் சில மாணவர்கள் வண்ணக் கழிகளினாலான உருண்டைகளில் உருவங்கள் செய்து கொண்டிருந்தார்கள்.அவர்களுக்குச் சற்றுப் பின்னால் உருவங்களை இணைக்கும் விளையாட்டுக்களை சில குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

பின்னால் சென்று மற்றக் குழந்தைகளின் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த தருணம் ஒன்றில் மேசையில் இருந்து கூப்பாடு எழுந்தது.முறைப்பாடு என்னவென்றால் லூக் வண்ணக் கழிகளால் செய்த உருவத்தை கலைத்து விட்டான் என்பதாகும். லூக்கைப் பார்த்தேன்.லூக் மிக அமைதியாக வண்ணம் தீட்டிக்கொண்டிருந்தான். முகத்தில் எந்த சலனமும் இல்லை.என்னால் நம்பமுடியவில்லை.

லூக் எல்லாவற்றுக்கும் அடம் பிடிப்பான்.எல்லோரது கவனத்தியும் தூண்டும் விதமாகவும் சக மாணவர்களின் பொருட்களோடு முரண்டு பிடிப்பவனாகவும் இருப்பான்.அவன் வருகிற 3 நாட்களும் இன்னொரு உதவி ஆசிரியை வேலைக்கு வருவது வழக்கம்.மாணவர்கள் அவனைப் பற்றி முறைப்பாடு செய்வதும் அவன் "குழப்படிக்காரரின் கதிரை"யில் இருந்தபின் முகத்தக் கீழே தொங்கப் போட்டுக் கொண்டு வருவதும்,அவனது பெற்றோரிடம் முறைப்பாடு சொல்லப்படுவதும் அடிக்கடி நடக்கும்.

ஆனால் அன்று அவன் ஒன்றும் செய்யவில்லை என்று என் மனம் நம்பியது. அன்று அவன் அமைதியாகத் தன் வேலையைச் செய்து கொண்டிருந்தான்.நான் மிகச் சாதாரணமாகத்தான் சொன்னேன்."இல்லை லூக் அதனைச் செய்யவில்லை என்பதை நான் நன்கறிவேன்.நீங்கள் அவனைப் பற்றிப் பொய்யாக முறைப்பாடு செய்ய வேண்டாம்.நீங்கள் மறுபடி உருவங்களைச் செய்ய ஆரம்பியுங்கள்" என்றுவிட்டு அவர்களுக்குரிய வண்ணக் கதிரைகளில் ஒன்றில் அமர்ந்து மற்றொருவர் செய்யும் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

சிலநிமிடங்கள் கழித்து லூக் என்னிடம் வந்தான்.அவன் இவ்வாறு என்னிடம் கேட்டான்."யசோ, நீ உண்மையாக நான் அதைச் செய்யவில்லை என்று நம்புகிறாயா" என்று கேட்டான்."ஆம் குழந்தாய். நான் உண்மையாகவே நம்புகிறேன்" என்றேன்(உண்மையில் நான் அவ்வாறு தான் நம்பினேன்)."நான் அதைச் செய்யவில்லை யசோ" என்று விட்டு அவன் அழ ஆரம்பித்தான்.நான் அவனை அணைத்துக் கொண்டேன்.

அதன் பின்பான நாட்களில் நம்பினால் நம்புங்கள் லூக் நான் சொன்னபடி எல்லாம் கேட்டான்.வலிகளால் நிரம்பியிருந்த அந்த சிறு இதயம் 6 மாத ஒப்பந்தம் முடிவடைந்து நான் நிலையத்தை விட்டு வெளியேறிய அன்று கம்பிக் கடவின் பின்னால் தனியாக நின்று என்னைப் பார்த்துக் கொண்டு நின்றதை என் வாழ் நாளில் என்னால் மறக்க முடியாது.இது நடந்தது 12 வருடங்களின் முன்னால்.இன்றும் அந்த குழந்தை முகம் நினைவில் நிழலாடுகிறது.அவர்களுடய படம் இப்போதும் என்னிடம் உள்ளது.படத்தைத் தளத்தோடு இணைக்கும் வல்லமை வந்த பின் அதனைக் கட்டாயம் இங்கு சேர்க்கிறேன்.

இன்று அவன் பதின்ம வயது பிள்ளையாக இருப்பான்.அவன் எங்கிருந்தாலும் நன்றாக வாழ வேண்டும்."நண்டுப் பையா நல்லாரு".

கடந்த வாரம் என் நண்பர் தம்பதிகள் ஆங்கில உபதலைப்பில்லாத ஹிந்தித் திரைப்படமான "tAAre ZameeN Par" என்றொரு திரைப்படத்தை தந்து கட்டாயம் பார்க்குமாறு பரிந்துரைத்தார்கள்.

இதனை வாசிக்கும் எவரேனும் சிறு குழந்தைகளுக்குப் பெற்றோராக இருந்தால் தயவு செய்து ஒரு முறை அந்தப் படத்தைப் பாருங்கள்.

அது போதும் எனக்கு.

3 comments:

  1. யசோ டீச்சர் உங்களது ஆக்கமும் அதில் சொல்லப்பட்ட கருத்தும் மிக அருமை.
    குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் சில வேளைகளில் தனிப்பட்ட அங்கீகாரம் தேவைப்படுகிறது. தொடர்ந்தும் இதே போன்ற ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்

    ReplyDelete
  2. உங்கள் ஆர்வத்திற்கும் பங்களிப்புக்கும் என் பேனாவின் சிரம் தாழ்த்திய வணக்கங்களும் நன்றிகளும்.

    தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  3. சிறந்ததோர் குறும்படம் போலிருக்கிறது உஙகள் எழுத்து. வாழ்த்துக்கள்

    ReplyDelete