Friday, January 2, 2009

நில்:கவனி:முன்னேறு

தினக்குரல் என்றொரு பத்திரிகை இலங்கையில் ஒரு காலத்தில் மிகப் பரபரப்பாக விற்பனையாகிக்கொண்டு வந்தது உங்களில் எவருக்கேனும் நினைவிருக்கலாம்.அது சொற்பகாலம் வெளிவந்த ஒரு வாரப்பத்திரிகை.அதில்,நில்;கவனி; முன்னேறு என்றொரு அம்சம் வருவது வழக்கம்.அதில் ஒக்ரோபர் மாதம் முப்பதாம் திகதி 1999ம் ஆண்டு வெளிவந்த ஒரு பகுதி புத்தாண்டு காலத்திற்குப் பொருத்தமானது.அதனை இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


ஜந்தாண்டுத்திட்டம்


இன்னும் ஜந்தாண்டுக்குப்பிறகு நீங்கள் எந்த நிலையை அடைய விரும்புகிறீர்கள் என்பதை முடிவுசெய்து கொள்ள வேண்டும்.இது வரை அப்படி ஓர் எண்ணம் இல்லாது போனாலும்,இனிமேலாவது அந்த எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.திட்டமிட்டால் அதை நோக்கி வளர்வது சுலபம்.

முதலாவது முதலில்

வேலை நெரிசல் ஏற்படும் போதெல்லாம் குழம்பிப்போய் விடாமல் எந்தவேலையை முதலில் முடிக்க வேண்டும் எதை பிறகு முடிக்க வேண்டும் எனத்தீர்மானித்து ஒவ்வொன்றாய் நிறைவேற்ற வேண்டும்.நீங்கள் செய்யவேண்டிய வேலையை மட்டும் நீங்கள் கவனித்து மற்ற வேலைகளை நம்பகமானவர்களிடம் ஒப்படைத்து செய்விக்க வேண்டும்.

திறமை காட்டுங்கள்

வேலை சிறிதோ பெரிதோ அதில் உங்கள் திறமையைக்காட்டுங்கள்.சிறிய வேலையில் தன் திறமையை வெளிக்காட்டாதவர்கள் பெரிய பொறுப்பில் அதனைக் காட்ட முடியாது."என் தகுதிக்கு இது ஒன்று பொருந்தும்!பொருந்தாது" என்று பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பது திறமை இன்மையைக் காட்டும்.

இலக்கை நோக்கி

இலக்கு இல்லாத வாழ்க்கை துடுப்பு இல்லாத படகைப்போன்றது.உங்கள் வாழ்க்கைப்பயணம் ஓர் இலக்கை நோக்கி முன்னேறுவதாக இருக்கட்டும்.போகிற போக்கில் வெற்றி பெறுவதை விட,நீங்கள் விரும்புகிற இலட்சியப்போக்கில் வெற்றி பெறுவது சிறப்பு.

உங்களை நம்பும் உலகம்

இந்த உலகமே ஒருவரை ஒருவர் நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறது.நம்பிக்கையை விதையுங்கள்; வெற்றி விளையும்.

தகுதியும் நினைப்பும்

ஒருவனுக்கிருக்கும் அறிவு அவனுடைய அறிவைப்பற்றி அவனுக்கிருக்கும் நினைப்பு இரண்டும் வெவ்வேறானவை.ஓரளவு அறிவுள்ளவன் தன்னை மிகப் பெரிய அறிவாளி என நினைத்துக்கொண்டால் ஆபத்து.
'இறைவா,எப்போதும் என்னுடைய நினைப்பு என் தகுதியை விடக் குறைந்தே இருக்கட்டும்.ஒரு போதும் தகுதிக்கு மிஞ்சிய நினைப்பு என்னை அணுகாமல் காப்பாற்று'என்று பிரார்த்தியுங்கள்.

தன்கையே தனக்குதவி

அவரவர் வேலைகளை எல்லாம் அவரவரே செய்யப்பழக வேண்டும்.இத்தகைய பழக்கம் தன்னம்பிக்கையை வளர்ப்பதோடு பிறரை நம்பி வாழும் சார்பு நிலையையும் தவிர்க்கும்.லோன்றி மூடியிருப்பதால் அழுக்குத்துணி அணிபவரும்,உணவு விடுதி மூடியிருப்பதால் பாண், பழம் உண்பவரும் வாழ்வில் வெற்றி பெற முடியாது.

எதிர்ப்புகள்

எதிர்ப்பே இல்லாமல் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று நினைப்பது அலை ஓய்ந்த பின் கடலில் குளிப்பதைப் போன்றது.காற்று எவ்வளவு வேகமாக வீசுகிறதோ அவ்வளவுக்குக் காற்றாடி உயரப்பறக்கும்.தடை இல்லாத பயணத்தில் சுவை இருக்காது என்பதை உணருங்கள்.

வாய்ப்பு

வாய்ப்பு ஒரு முறை அல்லது இரு முறை அல்லது மும்முறை தான் கதவைத் தட்டும்.வரும் போது கொக்கு மாதிரிக் கொத்திக்கொள்ள வேண்டும்.

நன்றி;தினமுரசு.24-30.10.1999.

2 comments: